நடப்பதெல்லாம் நடக்கட்டும்
கடந்த காலம் கடக்கட்டும்
காயம் நெஞ்சில் மறையட்டும்
பாரம் கொஞ்சம் குறையட்டும்
வீதியில் எல்லாம் மின்மினிகள்
விளக்கைப் போல ஒளிரட்டும்
விண்மீன்கள் எல்லாம் விண்ணிலிருந்து
பூக்கள் போல மலரட்டும்
சமத்துவமாக மனிதன் வாழ
அமைதிப் புறா பறக்கட்டும்
சாதிசனம் வேற்றுமை எல்லாம்
மண்ணில் புதைந்து இறக்கட்டும்
ஏற்றம் குற்றம் எதுவுமின்றி
மனிதனை மனிதன் மதிக்கட்டும்
மதவெறி பிடிக்கும் மனிதர்கள்
இனிமேலாவது திருந்தட்டும்
பிறர் வாழ்வில் துயர் நீக்கும்
புதிய மனிதன் பிறக்கட்டும்
உழைத்து வாழும் உழவருக்கும்
உரிய ஊதியம் கிடைக்கட்டும்
பஞ்சமில்லா பசுமை மாறா
புதுமை உலகு பிறக்கட்டும்
தூய்மை கொண்டும் வாய்மை கொண்டும்
எளிய வாழ்க்கை கிடைக்கட்டும்
சிறுமை வாழ்வில் அருமை அறிய
அன்பும் பண்பும் வளரட்டும்
நேசம் கொள்ளும் தேசமெல்லாம்
காதல் பூக்கள் மலரட்டும்
-N.செய்யது சுல்தான்
ஜாமிஆ அல்ஹுதா அரபிக்
கல்லூரி மாணவர், அடையாறு