மனிதனுக்கு அழகு என்பது எப்போதும் எந்தச் சூழ்நிலையிலும் பிடித்தமான ஒன்று. பயனற்றைவையாய் இருப்பினும்கூட அழகுடன் இருக்கும் ஒன்றே மனிதனை எளிதாகக் கவரும்.
அழகு என்பது வெளித்தோற்றத்தில் மட்டும் இருக்கும் ஒன்றல்ல. தோற்றத்தின் அடிப்படையில் அழகு இருவகைப்படும். அவை:
ஒன்று: புறத்தோற்றம் கண்ணால் பார்க்க முடியும்
இரண்டு: அகத்தோற்றம் கண்ணால் பார்க்க முடியாது
மனிதனுக்கு இரண்டுமே அழகாக இருக்கும்போது மட்டுமே மனிதன் சரியான திசையில் பயணிக்க முடியும். வாழ்க்கை ஒளிமயமானதாய் காணப்படும். ஒன்று மட்டும் அழகானதாய் மற்றொன்று அழகற்றதாய் இருக்குமானால் வாழ்க்கை இருள் சூழ்ந்து இருட்டறையைப் போன்று காட்சியளிக்கும். இருட்டறை வெளிச்சம் பெரும் வரைக்கும் எதற்கும் உதவாது. உள்ளத்தில் ஒளி இழந்த மனிதனும் அவ்வாறுதான். எதற்கும் பயனில்லை.
இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) சொன்னார்கள்: ’யாருடைய உள்ளத்தில் திருக்குர்ஆனிலிருந்து சிறுபகுதிகூட மனப்பாடமாய் இல்லையோ அவரின் உள்ளம் பாழடைந்த வீட்டிற்கு ஒப்பானது.'
நமக்கு நம்மைச் சுற்றியுள்ள இடமும் பொருட்களுமே அழகில்லாமல் இருந்தால் மனதுக்கு பெரும் கவலையைத் தரும்போது, நம்முடைய உள்ளம் அழகற்றதாய் இருப்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்?
நிச்சயம் நாம் அதனை விரும்பவே மாட்டோம். எனவே நம்முடைய உள்ளத்திற்கு குர்ஆனின் வசனங்களை மனப்பாடம் செய்வதன் மூலம் அழகானதாய் மாற்றுவோம். நம்முடைய வாழ்வும் அழகானதாய் மாறும்.