திருச்சி மாநகரின் வரலாற்றில், 2024ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29ஆம் நாள் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. ஒரு மாத காலமாக ‘ஒழுக்கமே சுதந்திரம்’ என்ற மையக்கருத்தில் அகில இந்திய அளவில் பரப்புரையை, தொடர் சிந்தனையைப் பல நகரங்களிலும், தளங்களிலும், களங்களிலும் காணப்படும் பல தரப்பட்ட மக்களின் மனதுக்குள் ஏற்றி, செப்டம்பர் 29 அன்று திருச்சி தேவர் ஹாலில் சாதி மத பேதமின்றி இளைஞர்கள் முதியவர்கள் ஆண்கள் பெண்கள் என அனைத்துத் தரப்பினரையும் அடக்கிய ஒரு மாபெரும் மானுட சங்கமத்தை இயக்கிய ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணியினருக்கு எவ்வளவு பாராட்டுகள் சொன்னாலும் தகும்; அதனைப் பாராட்டாமல், பதிவிடாமல் விடுவது, எந்த விதத்திலும் நியாயமாக இருக்காது என்று கருதியே, அதனை இங்கு முதலில் பதிவிட விரும்புகிறேன்.
சிற்றேடுகள், கட்டுரைப் போட்டிகள், நேர்காணல்கள், உரையாடல்கள், மேடை நாடகங்கள், கோரிக்கை விண்ணப்பம் அமைச்சரிடம் சமர்ப்பித்தல் எனப் பல வடிவங்களில், ஒழுக்கம் அவசியம் என்ற உன்னதச் சிந்தனையை, மிகச் சரியான சமயத்தில் செதுக்கியவர்களோடு, தொடர்பு கொள்ளும் ஒரு பாக்கியம் எனக்கும் கிடைத்ததை எண்ணி அகம் மிக மகிழ்கின்றேன். தேவர் ஹாலில் நடந்த நிகழ்ச்சிகளை நேரடியாகப் பார்க்கச் சென்றபோது, வியப்பிலும் வியப்பு; என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை.
சாதி, மதம் தொடர்பான திருவிழாக்களில், அரசியல் கூட்டங்களில், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில், பள்ளி, கல்லூரி விழாக்களில், வியாபார விளம்பர அரங்கங்களில் பெரிய கூட்டங்களைப் பார்த்து இருக்கலாம்; அறிவுப்பூர்மான உரையாடல்களை நிகழ்த்தும் அரங்கங்களில் இவ்வளவு பெரிய மக்கள் கூட்டத்தை நான் இதுவரை பார்த்ததில்லை. எடுத்துக்கொண்ட முயற்சிக்கும் ஈடுபடுத்தப்பட்ட உழைப்பிற்கும் கிடைத்த ஒரு மாபெரும் வெற்றியின் அடையாளமாகவே இதனைக் கொள்ளலாம்.
ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தையும் சிறப்பையும் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் (அதிகாரம் 14இல்) 10 குறட்பாக்களில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அவற்றுள் சில சொற்கள்:
‘ஒழுக்கம் விழுப்பம் தரலான், ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்’
‘பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம்’; ‘ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர், ஒழுக்கத்தின் எய்துவர்’ ‘மேன்மை, நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்,’
‘இழுக்கத்தின் எய்துவர் எய்தாப் பழி’ ‘தீயொழுக்கம் என்றும் இடும்பைத் தரும்.’
அசையும் சொத்துக்கும் அசையாச் சொத்துக்குமே முக்கியத்துவம் கொடுக்கிற இந்நாளில், தொட்டுணர இயலாத, கண்களுக்குப் புலப்படாத பெரும் சொத்தாகிய ஒழுக்கத்தின் இன்றியமையாமை ஏனோ குறைத்து மதிப்பிடப்படுகிறது. எனவேதான், இன்று அனைத்து மக்களும் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் மிகக் கொடுமையானவையாக ஒழுக்கச் சீர் கேடுகள் இருக்கின்றன. அந்த அவலங்களை அபாயங்களை அன்றாடம் ஊடகங்களில் படித்தால், பார்த்தால் பயம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. நாம் எப்படியோ தப்பிவிட்டோம்; நம்முடைய வருங்காலச் சந்ததியினர் எவ்வளவு சிக்கலுக்குள் மாட்டிக் கொள்ளப் போகிறார்களோ என்று எண்ணாமல், கவலைகொள்ளாமல் இருக்க இயலவில்லை. எவ்வளவுதான் சொத்துச் சேர்த்து, பிள்ளைகளிடம் கொடுத்தாலும், ஒழுக்கம் இல்லாத பிள்ளைகள் உருப்படுமா?
சொத்துதான் மிஞ்சுமா?, சமூகம் சரியில்லை எனில் நல்லவர்களும் பாதிக்கப்படுவார்கள் அல்லவா? சாலை விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் வண்டி ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்தால், சரியாக வண்டி ஓட்டுபவர்களுக்கும் விபத்துக்கள் நிகழலாம் அல்லவா?
இது நம் நிலையென்றால், இதற்கு எதிர் வாதம் வைப்பவர்களையும், குறிப்பாக இளைஞர்களையும், நான் கல்வி நிலையங்களில் சந்திக்கிறேன். அவற்றை விதண்டா வாதம் என்று ஒதுக்கிவிட முடியாது. அவர்களின் கருத்துகளில் பிழைகள் இருக்கின்றன; அவற்றைச் சரி செய்யும் பொறுப்பும் நமக்கு உள்ளது; எனவே, அவர்கள் கூறும் சில கூற்றுக்களையும் நாம் நம் கவனத்தில் கொள்வது அவசியம் என்பதால், அவற்றை இங்கே தருவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். அவை:
அசையும் சொத்துக்கும் அசையாச் |
மேலே கூறப்பட்ட கருத்துகளில் உள்ள பிழைகளைச் சுட்டிக்காட்ட வேண்டியது சமூக அக்கறை கொண்டவர்களின் கடமையாக உள்ளது.
முற்காலம் எல்லாம் பொற்காலம் என்றோ, தற்காலம் கற்காலமாக மாறிவருகிறது என்றோ, நூறு விழுக்காடு ஒழுக்கம் முன்பு இருந்தது என்றோ, இன்று நூறு விழுக்காடு தீயொழுக்கம் வந்துவிட்டது என்றோ, விவாதம் செய்வது நம் நோக்கம் அல்ல. அன்றுமுதல் இன்றுவரை, குற்றங்களும் குறைகளும் ஒழுக்கச் சீர்கேடுகளும் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன என்பது உண்மைதான். ஆனால், கல்வி, அறிவியல், ஆராய்ச்சி, தொழில் நுணுக்கம், பொருளாதாரம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் நவீன நாகரிக காலம் என்று வர்ணனை செய்யப்படுகிற இந்தக் கால கட்டத்திலும், காட்டுமிராண்டித்தனமான ஒழுக்கக் கேடுகளில் இருந்து விலக முடியாமல், மனிதன் மாட்டிக்கொள்ளலாமா?
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும், மக்கள் நலனுக்காக உழைக்கும் அரசு(!) இருக்கும்போது, இவ்வளவு ஒழுக்கக் கேடுகள் நிகழலாமா? ஒழுக்கக் கேடுகளே சுதந்திரம் என்று உரைக்கப்படலாமா? தீயொழுக்கங்களைக் கண்டும் காணாமலும் போகலாமா? தீயொழுக்கங்களைப் பரப்ப அனுமதிக்கலாமா? அவற்றை அரசாங்கமே அனு மதித்து, அதற்கேற்ப சட்டத் திருத்தங்கள் கொண்டு வரலாமா? இப்படியே சென்றால், இது எங்கு போய் முடியும்? வன்முறைகள் வாழ்க்கையாகுமா? அமைதியான ஆரோக்கியமான வாழ்வு அமையுமா? இவ்வினாக்களுக்கெல்லாம் பதில் ஒன்றேதான்.
சிற்றின்பங்களும் வன்முறைகளும் நிரந்தரமான தீர்வு ஆகா. கானல் நீர் பார்க்கவேண்டுமானால் அழகாக இருக்கலாம், ஆனால், பயன்படாது, குடிக்க முடியாது. தீய ஒழுக்கங்களும் அப்படித்தான். பொருளா தார வளர்ச்சி என்ற பெயரில், வருவாய் வளர்ச்சிக்காக, (இயற்கை வளங்களை இழந்து வருகிறோம்; காற்றையும் நீரையும் களங்கப்படுத்தி வருகிறோம்) குடும்பங்களையும் நல்ல குணங்களையும் இழந்து வருகிறோம்; நல்ல எதிர்காலத்தை பெறப் பேணிக்காக்க வேண்டிய குழந்தைகளைக் கருவிலேயே காணாமல் செய்துவிடுகிறோம்; குழந்தைகளே வேண்டாம் என்கிறோம்; ஏன், திருமணமே தேவைதானா என்று கேட்கிறோம்; மனித இனத்தில் சரிபாதியாக இருக்கிற, நல்லபிள்ளைகளைப் பெற்றெடுத்துத் தரத் தேவையான, பெண்களைத் துன்புறுத்துகிறோம். சுருங்கக் கூறின் நல்ல மாண்புகளை மறந்து வருகிறோம்; காசுக்காக எல்லாவற்றையும் விற்று வருகிறோம்; அதுவும் சரியென்று சட்டம் இயற்றுகிறோம்.
இதுபற்றிப் பேசவோ, எழுதவோ தைரியம் இல்லாத அநேக ஆண்கள் நடமாடுகிற இந்நாட்டில், இந்நாளில்(Sunalini Mathew ,Indian Uncle Inc., The Hindu Magazine , October 6,2024, p.1), இவையெல்லாம் பாதகமான செயல்கள் என்று பரப்புரை செய்துவருகிற தைரியமான நல்ல உள்ளங்களைப் பாராட்டாமல் இருக்கலாமா? இருக்க முடியுமா? எனவே, ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் மகளிர் அணியினருக்குப் பாராட்டுகள்.