ஒன்றிய அரசு இரவோடு இரவாக நள்ளிரவில் நிறைவேற்றி இருக்கின்ற வக்ஃப் திருத்தச் சட்டம் மதச் சுதந்திரத்தின் மீதும் அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகள் மீதும் தொடுக்கப்பட்டுள்ள கொடூரமான, வெளிப் படையான தாக்குதல் ஆகும். இது முஸ்லிம்களைச் சட்டரீதியாக ஒடுக்கக்கூடியதாக, சட்டரீதியான பாகுபாட்டுக்கு வழிவகுக்கக்கூடியதாக இருக்கின்றது.
அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது
இந்தச் சட்டம் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கே எதிரானது. தங்களுடைய பள்ளிவாசல்கள், தர்ஹாக்கள், அடக்கத்தலங்கள் போன்றவற்றை நிர்வகிக்கின்ற உரிமையை முஸ்லிம்களிடமிருந்து பறிப்பதாக இந்தச் சட்டம் இருக்கின்றது. நம்முடைய நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 26 தருகின்ற சுதந்திரத்தை தங்களின் வழிபாட்டுத்தலங்களையும் மத நிறுவனங்களையும் தாமே நிர்வகித்துக் கொள்கின்ற உரிமையை மதச் சிறுபான்மையினருக்கு தருகின்ற சுதந்திரத்தை இந்தச் சட்டம் பறிக்கிறது.
பாரபட்சம் மிகுந்தது
1995 ஆண்டின் வக்ஃப் சட்டத்தைத் திருத்துவதற்காக இந்த முன் வடிவு கொண்டு வரப்பட்டிருக்கின்றதோ அதன் விதிகள் முஸ்லிம்களுக்கு மட்டுமே பிரத்யேகமான விதிகள் அல்ல. முஸ்லிம்களுக்கு ஒரு நீதி, இந்துக்களுக்கும் சீக்கியர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் ஒரு நீதி என்பதாக பாரபட்சம் காட்டக் கூடியதாக இந்தச் சட்டம் இருக்கின்றது. இந்து கோயில்களை இந்துக்கள் மட்டுமே நிர்வகிக்க வேண்டும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை முஸ்லிம்கள் மட்டுமே நிர்வகிக்க வேண்டும் என்கிற உரிமை பறிக்கப்படுவது எந்த வகையில் நியாயம்?
முறைகேடுகளைத் தடுக்க இயலாத சட்டம்
வக்ஃப் சொத்துகளை நிர்வகிப்பதில் நடக்கின்ற முறைகேடுகளையும் ஊழல்களையும் அவை தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் தடுப்பதற்காகத்தான் இந்தச் சட்டம் என்று ஆளும் கூட்டணியினர் நீட்டி முழக்கிப் பேசுகின்றார்கள். ஆனால் இவற்றை ஒழிப்பதற்கான எந்தவொரு ஏற்பாடும் இந்த வக்ஃப் சட்டத்தில் இல்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
தேவையற்ற தலையீடுகளுக்கு வழிவகுக்கும்
வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் அல்லாதோரை உறுப்பினர்களாகச் சேர்ப்பதாலும் அரசாங்கத்தால் நியமிக்கப்படுபவர்களின் கையில் நிர்வாகப் பொறுப்பை மாற்றுவதாலும் நிர்வாகமும் சீர் பெறாது. ஊழலையும் ஒழித்துவிட முடியாது. இன்னும் சொல்லப் போனால் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் போன்றோரின் தேவையற்ற தலை யீடுதான் பல்வேறு சிக்கல்களுக்கும் ஊழல் களுக்கும் காரணமாக இருந்து வந்துள்ளது.
நிறுவனங்களைப் பலவீனப்படுத்தும்
புதிதாக வக்ஃப் சொத்துகளை நிர்வகித்தல், வக்ஃப் சொத்துகளின் பயனீட்டாளர் Waqf by user உள்ளிட்ட பிரிவுகள் முஸ்லிம்களின் நிறுவனங்களைப் பலவீனப்படுத்துபவையாகத் தான் இருக்கின்றன.
கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதம்
எல்லா மதங்களையும் சமமாக நடத்துதல் என்கிற செக்குலர் கோட்பாட்டைத் தூக்கிப் பிடிக்கின்ற சில அரசியல் கட்சிகளும் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு விரோதமான இந்தச் சட்டத்தை ஆதரித்திருப்பது ஏமாற்றமளிக்கின்றது. மதச்சார்பின்மைக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துக்கொண்டே அதற்கு நேர்மாறாக அவர்கள் செயல்பட்டிருப்பது கடைந்தெடுத்த அரசியல் சந்தர்ப்பவாத நடத்தையாகவும் மோசடியாகவும்தான் வரலாற்றில் பேசப் படும்.
போராட முன்வாருங்கள்
நம்முடைய நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 14, 25, 26, 29 ஆகிய பிரிவுகளுக்கு எதிரானதாக இருக்கின்ற இந்தச் சட்டத்துக்கு எதிராக எதிர்கட்சித் தலைவர்களும் செக்குலர் சக்திகளும் சட்ட வல்லுநர்களும் போராட முன்வர வேண்டும். அகில இந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியமும் பிற அமைப்புகளும் அறிவித்துள்ள நாடு தழுவிய போராட்டங்களுக்கு எங்களுடைய முழுமையான ஆதரவை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம். அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரான, அநீதியான இந்தச் சட்டத்தை முறியடிப்பதற்காக அனைத்துவிதமான சட்டரீதியான, அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு உட்பட்ட, ஜனநாயக ரீதியான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
முதல்வருக்கு நன்றி
நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்துக்கும் மதச் சுதந்திரத்துக்கும் பெரும் கேடு விளைவிப்பதாக இருக்கின்ற இந்தச் சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு முதல் அமைச்சர் ஸ்டாலின் தொடர்ந்து உரத்து குரல் கொடுத்ததும், சட்டசபையில் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியதும், பிரதமருக்குக் கடிதம் எழுதியதும், சட்டசபையில் மீண்டும் இந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுமாறு முழக்கங்கள் இட்டதும், இந்தச் சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்படும் என்று அறிவித்துள்ளதும் உள்ளபடியே மகிழ்வைத் தருகின்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எங்களுடைய நெஞ்சம் நிறைந்த நன்றிகள்.
ஆதரவுக் குரல்களுக்கு நன்றி
இம்மசோதாவிற்கு எதிராக நாடாளுமன்றத்தில் ஓங்கி குரல் கொடுத்த ஆ.ராசா, கனிமொழி, தயாநிதி மாறன், ஜோதிமணி, சு.வெங்கடேசன், திருமாவளவன், துரை வைகோ உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களவை உறுப்பினர்களும், திருச்சி சிவா உள்ளிட்ட மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் இந்தக் கருப்புச் சட்டத்துக்கு எதிராக கர்ஜித்ததும் முஸ்லிம்களின் நலன்களுக்காகத் தான் வக்ஃப் சட்டமே என்கிற பாஜகவின் நரேட்டிவ்வை சுக்குநூறாக நொறுக்கிவிட்டதும், முஸ்லிம்கள் மீதான அப்பட்டமான வெறுப்பாலும் அதைக் கொண்டு அற்ப அரசியல் ஆதாயங்களை அறுவடை செய்யும் இழிநோக்குடனும் தான் இந்தச் சட்டம் பிறப்பிக்கப்படுகிறது என்பதை வெட்ட வெளிச்சமாக்கியதும் மன நிறைவை அளிக்கின்றது.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், இந்தத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து குரல் கொடுத்த, வாக்களித்த திமுக, காங்கிரஸ், அதிமுக, இடதுசாரிகள், மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட அனைத்து மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கும் எங்களின் இதயப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
மௌலவி முஹம்மது ஹனீஃபா மன்பயீ
மாநிலத் தலைவர், ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், தமிழ்நாடு புதுச்சேரி