மராட்டிய மன்னர் சிவாஜியின் மகன் சம்பாஜி குறித்த ‘சாவா’ என்ற திரைப்படம் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் முகலாய மன்னர் ஔரங்கஜேப் மிகப் பயங்கரமான வில்லனாகச் சித்திரிக்கப்பட்டுள்ளார். அவர் சிவாஜியின் மகன் சம்பாஜியை சித்ரவதை செய்து கொன்றதாகக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. அப்படி சம்பாஜி சித்ரவதை செய்யப்படும் போது மன்னர் ஔரங்கஜேப் அங்கு வந்து, ‘நீ இஸ்லாத்திற்கு மதம் மாறி விடுவிட்டு விடுகிறேன்’ என்று கூறியதாகவும் அதற்கு சம்பாஜி மறுத்து விட்டு மரணத்தைத் தழுவியதாகவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தப் படம் வரலாறு படிக்காத இந்து சமய இளைஞர்களின் உணர்வுகளைத் தூண்டிவிட்டுள்ளது. இந்தத் திரைப்படம் சம்பந்தமாக மராட்டிய சட்டமன்றத்தில் உரை நிகழ்த்திய சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினர் அபு ஆஸ்மி, படத்தில் மன்னர் ஔரங்கஜேப் பயங்கர வில்லனாகவும், இந்துக்களின் எதிரியாகவும் சித்திரிக்கப்பட்டிருப்பது உண்மையில்லை என்றும், ஔரங்கஜேப் பல இந்துக் கோயில்கள் கட்ட நிதி உதவி வழங்கினார் என்றும், ஔரங்கஜேபின் ஆட்சியை விட தற்போதைய மாகாயுதி கூட்டணி ஆட்சி மோசம் என்றும் கூறினார்.
ஔரங்கஜேபைப் புகழ்ந்து பேசுவதா என அவர் மீது மராட்டிய முதல்வர் பட்னாவிஸும், பாஜக கூட்டணி உறுப்பினர்களும் பாய்ந்தனர். அவரை சட்டமன்றத்திலிருந்து தற்காலிகப் பணி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார். ஔரங்கஜேப் ஒரு கொடுங்கோல் மன்னர், இந்துக்களின் விரோதி என்று கூற, பாஜக கூட்டணி உறுப்பினர்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அவ்வளவு உரிமை அதனை மறுத்துப் பேசுவதற்கு சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் அபு ஆஸ்மிக்கும் உண்டு. எனவே அவரை சட்டமன்றத்திலிருந்து தற்காலிக நீக்கம் செய்தது சட்டத்திற்கு முற்றிலும் முரணானது. சாவா படம் வெளிவந்த பிறகு நாக்பூரிலுள்ள இந்துத்துவ அமைப்புகள் ஔரங்காபாத் நகரிலுள்ள மன்னர் ஔரங்கஜேபின் மண்ணறையை அகற்ற வேண்டு மெனக் கோரிக்கை வைத்தனர். மராட்டிய முதல்வர் பட்னாவிஸும் இந்தக் கோரிக் கைக்கு ஆதரவாகவே சட்டமன்றத்தில் பேசினார். எனினும் அந்த இடம் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அதன் அனுமதி பெற்ற பிறகே அகற்ற முடியும் எனத் தெரிவித்தார். சாவா படம் தான் இந்து மக்களைப் போராடும் படி தூண்டி விட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையே விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி நாக்பூரில் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தின் போது குர்ஆன் பிரதி எரிக்கப்பட்டதாக வதந்தி பரவியதைத் தொடர்ந்து, நாக்பூரிலுள்ள முஸ்லிம்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் வன்முறை ஏற்பட்டது. அரசு வாகனங்கள், தனியார் வாகனங்கள் கொளுத்தப்பட்டன. காவல்துறை தடியடி நடத்தி கூட்டத்தைத் கலைத்தது. அங்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாக அரசு தெரிவித்துள்ளது.
முஸ்லிம்களைத் தூண்டியதாக நாக்பூரில் சிறுபான்மையினர் ஜனநாயக இயக்கம் என்ற அமைப்பினை நடத்தி வருகின்ற பாஹிம்கான் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொதுச் சொத்துகளுக்குச் சேதம் விளைவித்ததற்காக முஸ்லிம்களிடமிருந்து அபராதத் தொகை வசூலிக்கப்படும் எனவும் மராட்டிய முதல்வர் அறிவித்தார். உ.பி. மாநிலப் பாணியில் புல்டோசர் நடவடிக்கை உண்டா? என்று பத்திரிகை நிருபர்கள் கேட்டதற்கு இருக்கலாம் என அவர் பதிலளித்தார். மறுநாளே கைது செய்யப்பட்ட பாஹிம் கானின் வீடு விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டதாகக் குற்றம் சாட்டி நாக்பூர் மாநகராட்சி அதனை புல்டோசர் கொண்டு இடித்தது. இன்னொரு முஸ்லிம் பிரமுகரான யூசுப் சேக்கின் வீட்டின் பகுதியும் புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது.
எந்தவிதமான விசாரணையுமின்றி குற்றம் சாட்டப்பட்டவர்களின் வீடுகளை இடிப்பது சட்ட விரோதமானது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னரும் இதுபோன்ற சட்ட விரோத நடவடிக்கைகளை பாஜக மாநில முதல்வர்கள் செய்கின்றனர். இதுதான் அவர்கள் நீதித்துறையை மதிக்கின்ற லட்சணம்! 56 இலட்சம் மக்கள் தொகை கொண்ட நாக்பூரில், பாஹிம் கானும், யூசுப் சேக் என்ற இருவர் மட்டும் தானா விதிமுறைகளை மீறி வீடுகள் கட்டியுள்ளனர்? வேறு யாரும் அந்த நகரில் விதிமுறைகளை மீறிக் கட்டடங்களைக் கட்டவில்லையா? அப்படியே பாஹிம் கானும் யூசுப் சேக்கும் கட்டியிருந்தால், இந்தக் கலவரம் நடந்தவுடன்தான் அவர்களின் வீடுகளை இடிக்க வேண்டுமா? என்ற கேள்விகளுக்கெல்லாம் பாஜக முதல்வர்களிடமிருந்து பதில்களை எதிர்பார்க்க முடியாது. மன்னர் ஔரங்கஜேப்புடன் நடைபெற்ற போரிலேயே சிவாஜியின் மகன் சம்பாஜி கொல்லப்பட்டார். அவர் முகலாய் படையினரால் கைது செய்யப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார். இது போன்ற சம்பவங்கள் போர்களில் நடப்பது சாதாரண விஷயம்தான். போர் என்று வந்து விட்டாலே அதில் மனித மாண்புகளுக்கு இடம் இல்லை. இரக்கம், கருணை என எதனையும் எதிர்பார்க்க முடியாது.
சம்பாஜி மரண தண்டனை விதிக்கப்பட்டு கொல்லப்பட்டாரே தவிர சாவா படத்தில் காட்டியுள்ளபடி சித்ரவதை செய்யப்பட்டு அல்ல. அவரை மதம் மாறும்படி ஔரங்கஜேப் வலியுறுத்தினார் என்பதற்கும் வரலாற்றில் ஆதாரங்கள் எதவுமில்லை. சாவா படத்தின் இயக்குநரின் கைவண்ணம் அது. அதுவும் சம்பாஜியின் மரணம் 336 ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த ஒரு நிகழ்வு. (16.3.1689 அன்று சம்பாஜி கொல்லப்பட்டார்.) 1689 ஆம் ஆண்டு கொல்லப்பட்டவருக்காக இப்போது கலவரம் செய்வதும், கொல்வதற்கு ஆணையிட்ட மன்னர் ஔரங்கஜேபின் மண்ணறையை அகற்ற வேண்டும் என்று போராடுவதும் கேலிக்கூத்தாக இருக்கிறது. ஔரங்கஜேபின் மீது வெறுப்பை உமிழ்ந்து அதனை முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பாக மடைமாற்றம் செய்ய இந்துத்துவவாதிகள் முயற்சிக்கின்றனர். அவர்களின் வழக்கமான உத்திதான் இது. முஸ்லிம் வெறுப்பை மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்வர் களிடமிருந்து வேறு என்ன நாம் எதிர்பார்க்க முடியும்?