மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

அகற்றப்பட வேண்டியவரா ஔரங்கஜேப்?
, ஏப்ரல் 16-30, 2025


 

முகலாயப் பேரரசின் மாமன்னராக 31.7.1658 அன்று அரியணை ஏறினார் ஔரங்கஜேப். அவரது தந்தையார் ஷாஜ ஹான், மூத்த மகன் தாரா ஷீகோவே தனக்குப் பிறகு அரியணை ஏற வேண்டுமென விரும்பினார். ஆனால் ஔரங்கஜேப் தந்தை ஷாஜஹானை வீட்டுக் காவலில் வைத்து விட்டு, சகோதரர் தாரா ஷீகோவைப் போரில் கொன்று விட்டு அரியணை ஏறினார். மிக நீண்டகாலம், மிகப் பெரிய நிலப்பரப்பை ஆண்ட பெருமை ஔரங்கஜேபிற்கு உண்டு. அவர் இந்துக்களை துன்புறுத்தினார். அவர்களுக்கு ஜிஸ்யா வரி விதித்தார். கோயில்களை அழித்தார் என்பன போன்ற குற்றச்சாட்டுகளை சில வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வந்துள்ளனர். அவையே மாணவர்களின் பாடப் புத்தகங்களிலும் இடம் பெற்று விட்ட காரணத்தால், ஔரங்கஜேப் பற்றிய ஒரு தவறான பிம்பமே மக்களிடையே இருக்கிறது.

என்னதான் அவர் எளிமையாக வாழ்ந்தாலும், நிர்வாகத்தை நீதியுடனும் நேர்மையுடனும் நடத்தியிருந்தாலும் மக்களின் பொதுப் புத்தியில் திட்டமிட்டு ஏற்றப்பட்டுள்ள தவறான பிம்பத்தை மாற்ற இயலவில்லை. ஔரங்கஜேப் தனது அமைச்சரவையில் 35 விழுக்காட்டிற்கும் அதிகமான இந்துக்களை இடம் பெறச் செய்திருந்தார். பல இந்துக் கோயில்களுக்கு மானியம் வழங்கினார். வாரணாசியிலுள்ள குமரகுருபரர் மடத்திற்கு நிதி உதவி செய்தார். அவரது ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் எஈக உயர்ந்த நிலையில் இருந்தது என்பன போன்ற அவர் ஆட்சி குறித்த நல்ல செய்திகள் முக்கியத்துவம் பெறவில்லை.

எனினும், அவருக்கு முந்தைய முகலாய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில், அரசவையில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நடனம், நாட்டியம் நடந்தேறின. தீபாவளி போன்ற திருவிழாக்கள் கொண்டாடப்பட்டன. ஆனால், இந்தக் கேளிக்கைகளையெல்லாம் ஔரங்கஜேப் நிறுத்தி விட்டார். இதுவும் இவரது ஆட்சியின் குறைபாடுகளாகச் சில வரலாற்று ஆசிரியர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். அவர் கோயில்களை இடித்தார் என்ற குற்றச்சாட்டுகளில் பெருமளவு உண்மை இல்லை.

அது உண்மையானால், எப்படி இன்றைக்கும் வட மாநிலங்கள் பலவற்றில் பல நூற்றாண்டுகள் பழமையான கோயில்கள் நிலை பெற்றிருக்க முடியும்? அவர் மராத்திய மன்னரான சிவாஜி, அவர் மகன் சம்பாஜியின் பீஜப்பூர், கோல்கொண்டா, அகமது நகர் ஆகிய பகுதிகளை ஆண்டு வந்த முஸ்லிம் மன்னர்களோடும் போர் புரிந்துள்ளார். அவரது நோக்கம் தனது நாட்டை மேலும் மேலும் விரிவுபடுத்த வேண்டு மென்பதே. அதற்கு யார் தடையாக இருந்தாலும் அவர்கள் மீது போர் தொடுத்துள்ளார். இதில் எந்தவிதமான மதப் பிரச்னையும் இல்லை. முஸ்லிம்களுக்கு ஜகாத்தை கட்டாயமாக்கியது போல், அவர் இந்துக்களுக்கு  ஜிஸ்யா வரி விதித்தார்.ஜிஸ்யா வரி செலுத்தி இந்து மக்கள் இராணுவ சேவையில் ஈடுபடத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஔரங்கஜேப் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்ட ஒரு மன்னர் என்றே பல வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

சிவாஜி

வீர சிவாஜி எனப்படும் சிவாஜி தக்காணப் பகுதியில் குறிப்பாக இன்றைய மராட்டிய மாநிலத்தின் ஒரு பகுதியில் ராய்கர் நகரைத் தலைநகராகக் கொண்டு ஒரு ஆட்சியை நிறுவினார். முகலாய மன்னர் ஔரங்கஜேபை விடவும் இவர் பீஜப்பூர் சுல்தான்களிடம் தான் அதிக எண்ணிக்கையில் போர்களில் ஈடுபட்டார். இவருக்கும் ஔரங்கஜேபிற்கும் நேரடியான மோதல்கள் இல்லை. இவரது தந்தையார் ஷாஜாஷி போன்ஸ்லே பீஜப்பூர் சுல்தானின் நம்பிக்கைக்குரிய தளபதிகளில் ஒருவராகப் பணிபுரிந்தார். சிவாஜி தனது அன்னையார் ஜீஜாபாயின் பராமரிப்பிலேயே வளர்ந்து வந்தார். சிவாஜி வளர்ந்து வாலிபப் பருவத்தை எட்டிய போது, தனது தந்தையாரைப் போல, பீஜப்பூர் சுல்தானிடம் அடி பணிந்து வாழ விரும்பவில்லை. சில படை வீரர்களைச் சேர்த்துக் கொண்டு, பீஜப்பூர் சுல்தானின் ஆளுகைக்கு உட்பட்ட பல சிறிய கோட்டைகளைக் கைப்பற்றிக் கொண்டு ஒரு ஆட்சியை நிறுவினார்.

சிவாஜி, அப்போது நாட்டிலிருந்த பிற மன்னர்களைப் போலவே சூதும் வாதும்  கொண்டவராக  இருந்தார். சிவாஜி, பீஜப்பூர் சுல்தான் ஆதில் ஷாவின் அரசுக்கு அடிக்கடி தொல்லைகள் கொடுத்து வந்தார். அதனால் சினம் கொண்ட பீஜப்பூர் சுல்தான் தனது தளதிபதியான அப்சல் கானுக்கு அவரை உயிருடனோ அல்லது பிணமாகவோ கொண்டு வாருங்கள் என உத்தரவு பிறப்பித்தார்.  சிவாஜியைத் தாக்க படையுடன் சென்ற அப்சல் கானை சிவாஜி சமாதானப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தார். அவரது பேச்சை நம்பி எந்தவிதமான ஆயுதங்களும் இல்லாமல் நிராயுதபாணியாகச் சென்ற அப்சல்கானை சிவாஜி வரவேற்று கட்டிப் பிடித்து தனது உடையில் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் குத்திக் கொன்றார்.

பொதுவாக, சமாதானம் பேசச் சென்ற வர்களுக்குத் தீங்கு விளைவிக்கக் கூடாது என்பது போர் மரபு. ஆனால் அதனையும் மீறி, சிவாஜி அப்சல்கானைக் கொன்றார். இது அவரது வீரச் செயலாகவே வரலாற்று ஆசிரியர்களால்  கொண்டாடப்படுகிறது. என்ன விந்தை இது! இன்றைய இந்துத்துவ வாதிகள் சிவாஜியின் வாழ்க்கையிலிருந்தே உத்வேகம் பெறுகிறார்கள். ஔரங்கஜேப் தனது தந்தையார் ஷாஜஹானை சிறை வைத்தார். சகோதரர் தாரா ஷீகோவைக் கொன்றார் என அவரை ஒரு கொடுங்கோலராக சில வரலாற்று ஆசிரியர்கள் நிறுவ முயலுகின்றனர். ஏதோ முகலாய மன்னர்கள் தான் இத்தகைய கொடூரச் செயல்களை உலகிலேயே முதன்முதலில் அரங்கேற்றினார்கள் என்பது போல் பரப்புரை செய்யப்படுகிறது. இதில் கிஞ் சிற்றும் உண்மை இல்லை. உலகெங்கிலும் இருந்த மன்னர்கள் தங்களது ஆட்சி அதிகாரத்தை நிலை நிறுத்த அல்லது ஆட்சியைப் பிடிக்க தங்களது இரத்த வழி உறவினர்களைக் கொன்றதற்கு வரலாற்றில் ஏராளமான உதாரணங்கள் உள்ளன. இதில் இந்திய மன்னர்களும், தமிழக மன்னர்களும் இதற்கு விதிவிலக்கல்ல. தமிழ்நாட்டிலேயே நாம் சில முன்னுதாரணங்களைப் பார்க்கலாம்.

  • முற்காலச் சோழர்களின் ஒருவரான கரிகாலன் (கல்லணையைக் கட்டியவன்) பிறந்தவுடன் பெற்றோரை இழந்து விடுகிறான். அவனைக் கொல்ல உறவினர்களே திட்டமிடுகின்றனர். எனினும் அவனது தாய்மாமன் கரிகாலனைக் காப்பாற்றி ஐந்தாவது வயதில் முடி சூட்டுகிறான். எனினும் சில உறவினர்கள் கரிகாலன் இருந்த மாளிகைக்குத் தீ வைக்கின்றனர். ஆனால் காலில் தீக்காயங்களோடு அவன் உயிர் பிழைக்கிறான். தீயில் கருகிய காலை உடையவன் என்பதாலேயே அவன் கரிகாலன் என அழைக்கப்படுகிறான். அவனது இயற்பெயர் திருமாவளவன்.
  • முதலாம் இராஜராஜ சோழன் அண்ணன் ஆதித்த கரிகாலன் மர்மமான முறையில் கொல்லப்பட்டான். இது ஓர் அரசியல் கொலை என பல வரலாற்று ஆசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். அவன் கொல்லப்பட்டதாலேயே இராஜராஜ சோழன் ஆட்சிக்கு வர முடிந்தது. (கல்கியின் பொன்னியின் செல்வன் வரலாற்று நாவலிலும், பொன்னியின் செல்வன் திரைப்படத்திலும் இது குறித்த விரிவானதகவல்கள் இடம் பெற்றுள்ளன.)
  • இந்த ஆதித்த கரிகாலன்தான் பாண்டிய மன்னன் வீரபாண்டியனைப் போரில் வென்று அவனது மனைவியின் கண் முன்னாலேயே அவனது தலையைக் கொய்து வெற்றித் தூணில் செருகி வைத்தவன். (இவனது மனைவிதான் பொன்னியின் செல்வனில் நந்தினி என்ற கதாபாத்திரமாக வருகிறாள்)
  • பாண்டிய நாட்டின் குலசேகரப் பாண்டியன் தனது ஆசை நாயகியின் மகனான வீரபாண்டியனுக்கு  முடி  சூட்டினான். இதனால் கோபமுற்ற பட்டத்தரசியின் மகன் சுந்தர பாண்டியன் தனது தந்தையைக் கொன்று அரியணையில் ஏறினான். வீரபாண்டியனுக்கும் சுந்தர பாண்டியனுக்குமிடையே போர் மூண்டது. இதில் சுந்தரபாண்டியன் தோல்வியுற்றான். அவன் அப்போது தென்னாட்டில் படையெடுப்பு நடத்திக் கொண்டிருந்த அலாவுதீன் கில்ஜியின் படைத்தளபதி மாலிக்கபூரை உதவிக்கு வருமாறு அழைத்தான். மாலிக்கபூரும் மதுரை வந்தான். சுந்தர பாண்டியனும் மாலிக்கபூரும் இணைந்து பாண்டிய நாட்டின் பல பகுதிகளைத் தாக்கினர்.
  • வரலாற்றாசிரியர்களால் பெரிதும் புகழப்படும் மதுரையை ஆண்ட இராணி மங்கம்மாள் அவளது பேரன் விஜயரங்க சொக்கநாதனால் வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டாள். அவளுக்கு அம்மை நோய் கண்டுள்ளதாகவும், அதனால் அவள் அரண்மனையை விட்டு வெளியே வரவில்லை எனவும் பேரன் மக்களிடம் கூறினான். வீட்டுச் சிறையில் இருந்த மங்கம்மாளுக்கு உணவோ, தண்ணீரோ வழங்கக் கூடாது என உத்தரவிட்டான். உண்ண உணவின்றி, குடிக்கத் தண்ணீரின்றி மிகப் பரிதாபகரமான முறையில் இராணி மங்கம்மாள் இறந்து போனாள். நீதி நெறியோடு ஆட்சி புரிந்த மங்கம்மாளுக்கு ஏற்பட்ட கதி இதுதான்.

இப்படி ஏராளமான உதாரணங்கள் தமிழ்நாட்டில் இருந்தன. எனினும் விரிவு கருதி சில சம்பவங்களை மட்டுமே குறித்துள்ளேன். வடஇந்தியாவிலும் இத்தகைய அரசுப் படுகொலைகள் மிக மிக அதிகமாக இருந்தன. பொதுவாகக் கூறுமிடத்து, ஆட்சியைக் கைப்பற்ற அல்லது ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைக்க மன்னர்கள் எந்த எல்லைக்கும் போவார்கள். தங்களது ஆட்சி அதிகாரத்திற்கு குறுக்கே வருபவர்களைத் தந்தை என்றும், சகோதரன் மகன் என்றும் பார்க்க மாட்டார்கள். இது அனைத்து மன்னர்களும் கடைப்பிடித்த ஒரு பொதுவான விதி. இதற்கு முஸ்லிம் மன்னர்களும் விதிவிலக்காக இருக்கவில்லை என்பதே யதார்த்தம்.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்