இந்த மசோதா மூலம் ரத்து செய்ய முற்படும் வக்ஃப் சட்டம் 1995இன் விதிகள் முஸ்லிம் களுக்கு பிரத்தியேகமானவை அல்ல. பிற மத, சமுதாயங்களுக்கும் இதே போன்ற உரிமைகள் உள்ளன. பல்வேறு மத, சமுதாயங்களின் அறக்கட்டளைச் சட்டங்களில் அந்தந்த நம்பிக்கை சார்ந்தவர்களை மட்டுமே நிர்வாக உறுப்பினர்களாகக் கொண்டிருக்கும் கட்டுப்பாடுகளும் அடங்கும்.
அந்தச் சட்டங்கள் ‘பயன்படுத்துவர்களின் கோயில்கள்’ போன்று ‘பயன்படுத்துவர்களின் வக்ஃப் நிலங்கள்’ என்ற உரிமையை அனுமதிப்பதுடன், ‘வரம்புச் சட்டம்’ (Limitation Act) போன்ற சட்டங்களிலிருந்து விதிவிலக்கை வழங்குகின்றன. எவ்வாறாயினும், முஸ்லிம்கள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்டு இந்த உரிமைகள் பறிக்கப்படுவது அப்பட்டமாக சட்ட ரீதியில் பிளவுபடுத்தும் நடவடிக்கையாகும். இந்த பாரபட்ச நடவடிக்கை ஒரு ஆபத்தான முன்னுதாரணமாகும். இந்த மசோதா வக்ஃப் சட்டம் 1995இல் பெரும் மாற்றங்களைச் செய்ய வழிவகுக்கிறது. வக்ஃப் சொத்துகளை நிர்வகிப்பதில் அரசாங்கத்தின் தலையீட்டை அதிகரித்து, சமயம் சார்ந்த அடிப்படைத் தன்மையையே மாற்றுகிறது.
சிறுபான்மையினரின் மத நிறுவனங்களை நிர்வகிப்பதற்கான அவர்களின் உரிமையை உறுதி செய்யும் அரசியலமைப்பின் 26ஆவது பிரிவை அப்பட்டமாக இந்த மசோதா மீறுகிறது. பரவலான எதிர்ப்பும், பொதுமக்களிடமிருந்து லட்சக்கணக்கான ஆட்சேபணைகள் எழுந்தபோதிலும், மசோதாவுடன் பிரதான தொடர்புடையவர்களிடமிருந்து பெற்ற கருத்துகளை ஒன்றிய அரசு புறக்கணித்துள்ளது.
கருத்து பெறப்பட்டது ஒரு சம்பிரதாயமாகவும், மசோதாவை நிறைவேற்றுவதற்கான முடிவு முன்னரே தீர்மானிக்கப்பட்டு விட்டதாகவுமே தோன்றுகிறது. அதனால் தான், பொதுக் கருத்தையும் வக்ஃப் சொத்தின் உபயோகிப்பாளரின் கவலைகளையும் அவர்கள் பொருட்படுத்தவில்லை. ஊழல், சட்டவிரோத ஆக்கிரமிப்பு அல்லது வக்ஃப் சொத்துகளைத் தவறாகப் பயன்படுத்துவது போன்றவற்றைத் தடுக்கும் நடவடிக்கை எதுவும் இம்மசோதா மூலம் எடுக்க முடியாது. அத்தகைய நடைவடிக்கைக்கு உதவக்கூடிய ஒரு விதிமுறையையும் இந்த மசோதாவில் அரசால் சுட்டிக்காட்ட முடியாது. மாறாக புதிய விதிமுறைகள் வக்ஃப் நிர்வாகத்தைச் சீர்குலைக்கவே செய்யும். இந்த அநீதியான மசோதாவை எதிர்க்குமாறு அனைத்து மதச்சார்பற்ற கட்சிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள், Nஈஅ கூட்டணிக் கட்சிகளை ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கேட்டுக் கொள்கிறது.
சில கட்சிகள், மதச்சார்பற்றவை என்று கூறினாலும் இம்மசோதாவை ஆதரிக்கத் தயாராக இருப்பது ஏமாற்றமளிக்கிறது. அவர்கள் பாஜகவின் அரசியல் அழுத்தத்திற்கு அடிபணிந்து வகுப்புவாத அரசியலில் பங்கேற்கக் கூடாது. இந்த மசோதாவை அவர்கள் எதிர்க்கத் தவறினால், வரலாறு அவர்களின் துரோகத்தை நினைவில் கொள்ளும். நீதியை விரும்பும் மக்களுக்கு அவர்கள் பதில் கூறியே ஆக வேண்டும். வக்ஃப் சொத்துகள் அரசாங்கச் சொத்துகள் அல்ல, அது இஸ்லாமிய அறக்கட்டளைச் சொத்து.
வக்ஃப் நிர்வாகத்தை நீர்த்துப்போகச் செய்வதற்கும் அரசுக் கட்டுப்பாட்டை அதிகரிப்பதற்குமான எந்தவொரு முயற்சியையும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த மசோதா ஜனநாயகத்திற்கு விரோதமாக நிறைவேற்றப்பட்டால், அனைத்திந்திய முஸ்லிம் தனியார் சட்ட வாரியம் (All India Muslim Personal Law Board AIMPLB) தலைமையின் கீழ் மற்ற முஸ்லிம் அமைப்புகளுடன் இணைந்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும்.
நீதிமன்றம் மூலமாகவும், அரசியலமைப்பு அடிப்படையிலும், ஜனநாயக முறையிலும், அமைதியான அனைத்து வழிமுறைகளையும் மேற்கொண்டு அந்தச் சட்டம் எதிர்க்கப்படும். சமுதாயத்தின் உரிமைகள் முழுமையாக மீட்டெடுக்கப்படும் வரை அநீதிக்கு எதிரான இப்போராட்டம் தொடரும்.
சையத் சஆதத்துல்லாஹ் ஹுசைனி
அகில இந்தியத்தலைவர்
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்