மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

உழைத்து வாழ வேண்டும்
DR.K.V.S ஹபீப் முஹம்மது, மே 01 - 15, 2025




ஒரு நாட்டின் வளர்ச்சிக்குத் தேவைப்படுவது வியர்வைத் துளியா? மழைத்துளியா? மழைத்துளி மட்டும் இருந்தால் போதுமா? வியர்வைத் துளியும் இருந்தால்தான் அந்த நாடு முன்னேறும். இயற்கை வளங்கள் இருந்தால் மட்டும் ஒரு நாடு முன்னேற முடியாது. அங்கே மனித வளமும் இருந்தால்தான் அந்த நாடு முன்னேற முடியும். சில வேளைகளில் இயற்கை வளங்கள் இல்லாத போதும் மனித வளத்தை மட்டுமே கொண்டு சில நாடுகள் முன்னேறி இருக்கின்றன. நாம் அடிக்கடி எடுத்துக்காட்டுகின்ற உதாரணம் ஜப்பான். இயற்கை வளமே இல்லாத ஒரு நாடு, எரிமலைகள் நிறைந்த நாடு, விவசாய பூமி குறைவாக உள்ள ஒரு நாடு பொருளாதாரத்தில் மிகச் சிறந்த நிலையில் உள்ளதென்றால் அதற்குக் காரணம் மனிதவளம் மட்டுமே! அவர்களின் அறிவுக்கூர்மையும்  கடினமான  உழைப்பும் அந்த நாட்டை மேலே கொண்டு வந்திருக்கிறது. ஆகவே உழைப்புதான் ஒரு நாட்டை உயர்த்துகிறது. விவசாயி சேற்றில் கை வைக்காவிட்டால் நமக்குச் சோறு கிடைக்காது. ஏரோட்டம் இல்லையென்றால் தேரோட்டமும் இல்லை, காரோட்டமும் இல்லை என்ற நிலைதான் உருவாகும்.

ஆகவே உழைப்புதான் ஒரு நாட்டை முன்னேற்றுகிறது. ஆனால் இவ்வாறு உழைக்கின்ற மக்கள் காலம் காலமாக சுரண்டப்பட்டு வந்திருக்கிறார்கள் என்பதை நாம் வரலாற்றில் பார்த்து வந்திருக்கிறோம். நீண்ட காலமாகக் கொத்தடிமைகள் ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து கப்பல் கப்பலாக ஏற்றுமதி செய்யப்பட்டுப் பல்வேறு கொடுமைகளுக்கு ஆளாகி துன்பங்களையும் துயரங்களையும் அனுபவித்தார்கள் என்பது நமக்குத் தெரியும். 18ஆவது நூற்றாண்டு வரை விவசாயத் தொழில் மட்டும் தான் இருந்தது. அங்கே விவசாயிகள் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். 19ஆம் நூற்றாண்டில் தொழிற்புரட்சி (Industrial Revolution) ஆரம்பமாகிறது. அதற்குப் பிறகும் அதே கொடுமைகள் தொடர்ந்தன.

1218 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களைச் சாப்பாட்டு இடைவேளையும் நள்ளிரவில் உறக்கத்திற்காக ஒரு மணிநேரமும் தவிர இடைவேளை எதுவும் இல்லாமல் வெள்ளிக்கிழமை காலை 6 மணிமுதல் சனிக்கிழமை மாலை 6 மணிவரை வேலை வாங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டது. கம்பளிக் கந்தல்களைப் பிரித்து வைக்கும் வேலை நடக்கும் இடத்தில் தூசியும் பிசிறும் காற்றில் அடர்ந்திருக்கும். தூசியிலிருந்து தப்பித்துக்கொள்ள கையிலிருக்கும் கைக்குட்டையால் வாயையும் மூக்கையும் மூடிக்கொள்ள வேண்டியிருக்கும். புழுதிப் பொந்து என்று அழைக்கப்படும் பொந்து போன்ற இந்த இடத்தில் 30 மணி நேரம் இந்தக் குழந்தைகள் ஓயாமல் உழைக்க வேண்டியதிருந்தது. இந்தக் கொடுமைகளெல்லாம் மாற்றப்பட்டுக் கொஞ்சம் கொஞ்சமாக தொழிலாளர்களுக்கான உரிமைகள் வந்தன. 1886ஆம் ஆண்டிலே 8 மணிநேர வேலை என்பது உறுதியாக்கப்பட்டது. தொழிலாளர்களுக்கு உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க யாரெல்லாம் முயன்றார்களோ உழைத்தார்களோ குறிப்பாக இடதுசாரி சிந்தனையõளர்களுக்கு நமது நன்றியையும் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

இஸ்லாமும் இதைப்பற்றி ஆழமாகச் சிந்தித்திருக்கிறது. உழைப்பாளனுடைய மேன்மையை இஸ்லாம் மிகத் தெளிவாக உணர்ந்திருக்கிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு தொழிலாளியுடைய கையைப் பிடித்தார்கள். அது காய்த்துப்போய் கரடுமுரடாக இருந்தது. ஏன் இப்படி இருக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்ட போது உழைத்து உழைத்து என்னுடைய கைகள் இப்படி ஆகிவிட்டன என்று சொன்ன போது அந்தக் கைகளை எடுத்து முத்தமிட்டார்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள். உழைப்பதற்கு எவ்வளவு மரியாதை! உழைப்பதும்கூட ஒரு வழிபாடு என்று இஸ்லாம் கூறியது. அதுவும் ஒரு கட்டாயக் கடமை! தொழுகை எப்படி ஒரு கட்டாயக் கடமையோ அதே போல உழைப்பும் ஒரு கட்டாயக் கடமை என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். உழைத்து உண்ணும் உணவே உணவுகளில் சிறந்தது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். தமது கையால் உழைத்துச் சம்பாதிக்கும் உணவைவிட உலகத்தில் சிறந்த உணவு எதுவுமில்லை என்று சொன்னார்கள்.

ஒருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து எனக்கு ஏதேனும் தர்மம் கொடுங்கள் என்று கேட்டார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைத்திருந்தால் ஏதேனும் தர்மமாகக் கொடுத்திருக்கலாம். அவர்கள் உன்னிடம் என்ன பொருள் உள்ளது என்று கேட்டார்கள். ஒரு போர்வையும், ஒரு குவளையும் இருக்கின்றன. இதைத் தவிர ஒன்றும் இல்லை என்றார். அப்படியானால் அதைக் கொண்டுவா என்று கூறி தோழர்களை எல்லாம் வரவழைத்து இந்தப் பொருளை யார் எடுத்துக்கொள்கிறார் என்று ஏலம் விட்டார்கள். ஒருவர் இரண்டு திர்ஹத்திற்கு அதனை எடுத்துக் கொண்டார்.

நபிகள் நாயகம் (ஸல்) ஒரு திர்ஹத்தை செலவுக்காக வைத்துக்கொள், மற்றொரு திர்ஹத்தை எடுத்துக் கொண்டுபோய் ஒரு கோடரியை வாங்கிக் கொண்டு வா என்றார்கள். அவர் கோடரியை வாங்கிக் கொண்டு வந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்களின் கைகளாலேயே அதற்கு ஒரு பிடியைச் செய்து கொடுத்து 15 நாள்களுக்கு இந்தப் பக்கமே வரக்கூடாது; இதை எடுத்துக்கொண்டு காட்டுக்குப் போய் விறகு வெட்டிப் பிழைத்துக்கொள் என்றார்கள். அவர் 15 நாள்கள் கழித்து வந்து இப்போது என்னிடம் 12 திர்ஹங்கள் இருக்கின்றன என்று கூறினார். நான் இனி யாரிடமும் போய் கையேந்த மாட்டேன் என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதுவே சிறந்த வாழ்க்கை என்று கூறினார்கள். யாசித்து வாழ்வதையோ உழைக்காமல் வாழ்வதையோ இஸ்லாம் ஒருபோதும் விரும்புவதில்லை.

தொழிலில் இந்தத் தொழில் நல்ல தொழில், அந்தத் தொழில் மோசமான தொழில் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது. எல்லாத் தொழில்களும் நல்ல தொழில்கள் தாம். ஒரே ஒரு தொழில் மட்டுமே கேவலமான தொழில். தவறான முறையில் பொருளீட்டுவதே கேவலமான தொழில். பிறரை ஏமாற்றி சுரண்டுவது அல்லது மது, ஆபாசம், சூது போன்ற தீய தொழில்களில் ஈடுபடுவதுதான் மோசமான தொழிலே தவிர மற்ற எல்லாத் தொழிலும் நல்ல தொழிலே! நோவா என்றழைக்கப்படும் நூஹ் நபி என்ற இறைத் தூதர் கப்பல் கட்டுபவராக இருந்தார். டேவிட் என்றழைக்கப்படும் தாவூத் நபி இரும்பினால் கவச ஆடை செய்பவராக இருந்தார். ஜகரியா நபி தச்சு வேலை செய்பவராக இருந்தார். இறைத்தூதர்கள் பலர் ஆடு மேய்ப்பவர்களாக இருந்தார்கள். ஆகவே தொழிலில் கேவலம் என்று ஒன்று கிடையாது. நியாயமாக, முறையாகப் பொருளீட்டினால் எல்லாத் தொழிலும் சிறந்த தொழில்தான் என்பது இஸ்லாத்தின் கருத்தாகும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்