மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

அரசுச் சொத்தைப்பயன்படுத்தலாமா? வழிகாட்டுகிறார் ஆஸ்திரேலிய அமைச்சர்
T. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ், மே 01 - 15, 2025


 

ஏழு கடல்களுக்கு அப்பாலிருந்து அந்த அருமையான செய்தி வந்திருக்கின்றது. ஆஸ்திரேலிய நியூ சவுத் வேல்ஸ் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோ ஹேலன் என்கிற பெண்மணி தம்முடைய அமைச்சர் பதவியிலிருந்து விலகி இருக்கின்றார். அரசு வாகனத்தையும் ஒட்டுநரையும் சொந்த பயணத்துக்குப் பயன்படுத்தியதால் பதவி விலகுவதாக அவர் அறிவித்திருக்கின்றார். ஒரு வார இறுதிநாளில் சிட்னியிலிருந்து 446 கி.மீ பயணித்து ‘கேவ் பீச்சு’ என்கிற இடத்துக்கும் திராட்சைத் தோப்பு ஒன்றுக்கும் சென்று திரும்பியிருக்கின்றார். இது தெரிய வந்ததும் ‘அரசு பணத்தைச் சொந்தப் பயன்பாட்டுக்குப் பயன்படுத்தி விட்டேன். மனம் ஒப்பவில்லை. பதவி விலகுகின்றேன்’ என்று அவர் அறிவித்திருக்கின்றார். இதற்கான பயணச் செலவை 750 டாலரை செலுத்தி விடுவதாகவும் அவர் அறிவித்திருக்கின்றார்.

பொதுச் சொத்துகளை, பொதுப் பணத்தைச் சொந்தத் தேவைகளுக்காகப் பயன்படுத்துவது கேவலமான செயலாகப் பார்க்கப்படுகின்ற சூழல் ஆஸ்திரேலியாவில் இருக்கின்றது. இது உண்மையில் ஓர் இஸ்லாமிய மாண்பாகும். முஸ்லிம் சமுதாயத்தின் அடையாளமான, தற்போதைய முஸ்லிம் சமுதாயம் கொஞ்சம் கொஞ்சமாகத் தொலைத்திருக்கின்ற இந்த மாண்பை ஆஸ்திரேலிய மக்கள் கடைப்பிடித்து வருவது மகிழ்ச்சி அளிக்கின்றது. பொதுச் சொத்து பைத்துல்மாலுக்குரிய பணமும் பொருளும் அநாதைக்குரிய பொருளுக்கு இணையானது. அதை விட்டு விலகி இருக்க வேண்டும் என்று உமர்(ரலி) கூறியிருக்கின்றார். சொந்தப் பயன்பாட்டுக்கு ஒரு விளக்கு, அரசு அலுவல்களை மேற்கொள்கின்ற போது ஒரு விளக்கு என்று தனித்தனி விளக்குகளைப் பயன்படுத்திய கலீஃபாக்களைக் கொண்டதுதான் இஸ்லாமிய பாரம்பர்யம்.

ஃபலஸ்தீனப் போராளிகளும் இந்த விஷயத்தில்  விழிப்போடு  இருந்து வருகின்றார்கள் என்பதும் திருமணப் பரிசாக இயக்கத் தலைவர் தந்த பணத்தை இயக்கத்துக்கே கொடையாகத் திருப்பித் தந்தார் முஹம்மத் ஸைஃப் என்பதும் இன்றும் இந்த சமுதாயத்தில் இந்த உணர்வும் எண்ணமும் பசுமையாக இருக்கின்றது என்பதற்கான அடையாளமாகும். தஅவத் பத்திரிகை ஆசிரியராக முத்திரை பதித்த மௌலானா முஹம்மத் முஸ்லிம் அவர்கள் இயக்கத்திடமிருந்து தாம் பெற்ற ஒட்டுமொத்த கஃப்ஃபாஃப் (செலவுத் தொகையைத்) திருப்பிக் கொடுக்க வேண்டும் என்று தம்முடைய பிள்ளைகளுக்கு வஸிய்யத் செய்திருக்க அவருடைய பிள்ளைகளும் அவருடைய மனைவியாரும் மனமுவந்து அந்தப் பணத்தைத் திருப்பித் தந்ததும் இஸ்லாமிய இயக்கப் பாரம்பர்யம்.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் முன்னாள் அகில இந்தியத் தலைவர் மௌலானா முஹம்மத் சிராஜுல் ஹஸன் அவர்கள் அரை நூற்றாண்டுக்கும் மேலாக முழு நேர ஊழியராக இருந்தும் ஒரே ஒரு ரூபாய் கூட இயக்கத்திடமிருந்து பெற்றுக் கொள்ளவில்லை என்பதும், தமக்குச் சொந்தமான நெல் வயல்களிலிருந்து கிடைக்கின்ற வருமானத்தில் குடும்பம் நடத்தினார் என்பதும் வறட்சியால் பெரும் சிரமத்துக்கு ஆளான நாள்களிலும் கூட அன்றைய ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் மௌலானா அபுல் லைஸ் இஸ்லாஹி நத்வி அவர்கள் பணத்தைக் கொடுக்க முன் வந்த போதும் பைத்துல் மாலிலிருந்து வேண்டாம் என்று மறுத்து நண்பர்களிடம் கடன் பெற்றார் என்பதும் அவர் இறந்து போன பிறகுதான் எல்லோருக்குமே தெரிய வந்தது.

இன்றைய முஸ்லிம் சமுதாயத்தின் நிலைமை என்ன? இன்றைய நடைமுறை என்ன? எந்த அளவுக்கு விழிப்போடு இருக்கின்றோம்? இந்த மாதிரியான பதில் சொல்கின்ற பொறுப்பு உணர்வு மறுமைச் சிந்தனை இருந்தால்தான் சாத்தியம் என்கிறோம். ஆஸ்திரேலிய அமைச்சர் வெளிப்படுத்தியிருக்கின்ற அழகான நடத்தைக்குப் பின்னால் சமூக அழுத்தம் அல்லவா இருக்கின்றது? அந்த சமூக அழுத்தம் நம்முடைய சமூகங்களில் எந்த அளவுக்கு இருக்கின்றது? அப்படிப்பட்ட சமூக அழுத்தங்களை உருவாக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்? தீர்வுக்கான பயணத்தை எங்கிருந்து தொடங்குவது?

உண்மையில் இது மனித பண்பாட்டின் முக்கியமான மாண்பாக காலங்காலமாக இருந்து வந்துள்ளது. வள்ளுவர் கூட இது தொடர்பாக எழுதி இருக்கிறார். சிவன் சொத்து குல நாசம் என்கிற பழமொழியும் நம்முடைய நாட்டிலும் அந்த மரபு இருந்ததை உணர்த்துகின்றது. இந்த எண்ணம் மங்கிப் போகும்போதுதான் ஊழலுக்கான ஊற்று சுரக்கத் தொடங்குகின்றது. இது எங்கு போய் முடிகின்றது எனில் தவ்லீன் சிங் சொன்னதைப் போன்று பாப் கி ஜாய்தாத் சின்ட்ரோம் பாட்டன் சொத்தாக நினைக்கின்ற மனப்பான்மை அதிகார வர்க்கத்தைத் தொற்றிக் கொள்கின்றது.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர கட்டுரைகள்

மேலும் தேடல்