ஏப்ரல் 22ஆம் நாள் ஜம்மு காஷ்மீரின் மிக முக்கிய சுற்றுலாத் தலமான பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூரத் தாக்குதலில் 26 சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப் பட்டுள்ளனர். 17 பேர் காயமடைந்தனர். கோழைத்தனமான, இந்த பயங்கரவாதச் செயலை செய்தவர்கள் எவராயினும் அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும். சட்டப்பிரிவு 370ஐ நீக்கிவிட்டோம். இனி பயங்கரவாதத்திற்கு இடமில்லை. சுற்றுலாப் பயணிகள் அச்சமின்றி வரலாம் என்ற ஒன்றிய அரசின் கூற்றைத் தொடர்ந்து கோடை விடுமுறையை மகிழ்வாகக் கொண்டாட நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் ஜம்மு காஷ்மீருக்கு வருகை தந்தனர். ஆனால் அதற்குத் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யாமல், 26 உயிர்களைப் பலிகொடுத்துவிட்டு வழக்கம்போல் பாகிஸ்தான் பக்கம் கைகாட்டி நிற்கிறது ஒன்றிய அரசு. இச்சம்பவத்திற்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் மறுப்பு தெரிவித்துள்ளார்.
2019 பிப்ரவரி 14ஆம் நாள் ஜம்மு காஷ்மீர் புல்வாமாவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் (CRPF) வீரர்கள் சென்ற வாகனங்களின்மீது நடைபெற்ற தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் இந்திய உள்துறையின் அலட்சியத்தினால்தான் நடந்தது. நமது வீரர்கள் தாக்கப்பட்ட இந்தச் சம்பவத்தை பாகிஸ்தானுக்கு எதிராகத் திசை திருப்பிவிடுவது என அவர்கள் முடிவு செய்ததாகவே இருந்தது என்று அன்றைய ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் குற்றம் சாட்டியதையும் இத்துடன் இணைத்துப் பார்க்க வேண்டும். ஒன்றிய அரசின் படுதோல்வியைத் திசைதிருப்புவதற்காக முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகச் சித்திரித்து ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தைக் குற்றப்படுத்துவதற்காக ‘இந்துக்களின் பெயர்களைக் கேட்டுக் கேட்டுச் சுட்டார்கள்’ என்ற அபாண்டமான பொய்யை ஊடகங்கள் திட்டமிட்டு பரப்பி வருகின்றன. ஆனால் இது உண்மையல்ல. கொல்லப்பட்டவர்களில் முஸ்லிமும் அடக்கம் என்பதை அவர்கள் வசதியாக மறந்து விட்டார்கள்.
இச்சூழலில் சம்பவ இடத்திலிருந்த பயணிகள் இதனைத் திட்டவட்டமாக மறுத்ததுடன், அங்குள்ள முஸ்லிம்கள்தான் தங்களைக் காப்பாற்றினார்கள் என்று கூறிய செய்திகள் இப்போது வெளிவரத் தொடங்கியுள்ளன. இதற்கான சாட்சியாக தம் இன்னுயிரையும் தந்திருக்கின்றார் சையத் ஆதில் ஹுசைன் ஷா. குதிரைச் சவாரி தொழில் செய்து வரும் உள்ளூர்வாசியான இவர், தாக்குதலில் இருந்து பெண் ஒருவரைப் பாதுகாக்க முயற்சிக்கும் போது குண்டடிபட்டு உயிரிழந்தார். தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டிருந்த நிலையில் சுற்றுலாப் பயணிகளுக்கு அங்குள்ள முஸ்லிம்கள் பள்ளிவாசலில் இடம் கொடுத்திருக்கின்றார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளில் கோட்டை விட்டுவிட்டு அதற்குப் பொறுப்பேற்று பதவி விலகுவதற்குப் பதில் குறிப்பிட்ட மதத்தவரைக் குறிவைத்துத் தாக்கியதாக ஒன்றிய பாதுகாப்புஅமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷா இந்தப் படுதோல்விக்குப் பொறுப்பேற்று பதவி விலகியிருக்க வேண்டும். அதிரடிப் பழி வாங்கலைப் பற்றிப் பேசும் ஒன்றிய அரசு பாதுகாப்புப் படுதோல்விக்கு பொறுப்பேற்க முன்வரவில்லை. இதையும் மதவாதப் பிரச்னையாகத் திசை திருப்பி நாட்டின் ஒட்டுமொத்த கவனத்தையும் சிதறடிப்பதில்தான் ஒன்றிய அரசு கவனமாக இருக்கிறது. இது போன்ற சம்பவங்கள் இனி ஜம்மு காஷ்மீரில் அரங்கேறாமல் இருக்க ஒன்றிய அரசு என்ன செய்யப் போகிறது? இதற்குப் பொறுப்பேற்பது யார்?