இந்திய அரசியல் அமைப்பிற்கு விரோதமான CAA சட்டத்திற்கு எதிராக அசாமில் தொடங்கிய போராட்டம் காட்டுத் தீயென நாடு முழுவதும் பரவியது. பொது மக்களால் நடத்தப்பட்ட இந்தப் போராட்டத்தினால் இந்திய நாடே நிலைகுலைந்தது. முக்கியமாக டெல்லியில் உள்ள ஷாஹீன்பாக்கில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவராலும் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட போராட்டம் மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருந்ததைத் தொடர்ந்து சென்னையில் உள்ள வண்ணாரப்பேட்டையிலும் ஷாஹீன்பாக் போராட்டம் நடத்தப்பட்டது. CAA அமலாக்கம் என்பது அரசியலமைப்பில் மாற்றங்களைக் கொண்டு வருவது மட்டுமல்லாமல், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக முஸ்லிம்கள் உள்ளிட்ட அனைவரும் எண்ணற்ற தியாகங்களைச் செய்து போராடிப் பெற்ற இந்திய நாட்டை ஒரு குறியீட்டு இந்துத்துவ அரசாக மாற்றுவதற்கான அச்சாணியாக அமைந்திருக்கிறது.
வடகிழக்கு மாகாணங்களில் தொடங்கிய இந்தப் போராட்டம் விலைமதிப்பற்ற நிறைய இளம் தலைவர்களை உருவாக்கிய களமாக அமைந்திருந்தது. நிறைய மாணவச் செயற்பாட்டாளர்கள் இதில் பங்கேற்று இருந்தனர். இவை அரசாங்கத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்திருந்தது.அமைதியான வழியில் நடந்த CAA போராட்டத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாத இந்துத்துவவாதிகள் இதை ஒரு வன்முறையாக்கத் துடித்தனர். அதைத் தொடர்ந்து பிப்ரவரி 2020இல் வடகிழக்கு டெல்லியில் கலவரம் வெடித்தது. இதில் 53 பேர் உயிரிழந்தனர். அவர்களில் பெரும்பாலானோர் முஸ்லிம்கள்.
கலவரத்தில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு ஷர்ஜீல் இமாம், உமர் காலித், சைஃபி, குல்பிஷா ஃபாத்திமா, சஃபூரா சர்கார், ஆசிப் இக்பால் தன்ஹா, ஷதாப் அஹமது என CAA எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்ற மாணவத் தலைவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டனர். பின்னர் கொரோனா பெருந்தொற்றால் போராட்டங்கள் நிறுத்தப்பட்டன. நாடே ஊரடங்கில் முடங்கியது. பின்னர் அனைத்தும் இயல்பு நிலைக்குத் திரும்பத் தொடங்கின. நாமும் நம் அன்றாட வாழ்க்கையை நோக்கி நகர்ந்தோம்.ஆனால் CAA போராட்டத்தில் கைது செய்யப்பட்ட மாணவத் தலைவர்கள் ஏறத்தாழ நான்காண்டுகள் கடந்தும் இன்னும் விடுவிக்கப்படாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் விடுவிக்கப்படாததை விட இவர்களில் குற்றம் சாட்டப்பட்ட 18 பேரில் 12 பேர் இன்றும் விசாரணையின்றி நீண்ட காலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது ஜனநாயகத்திற்கு எதிரானது.
உமர் காலித்
2020ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி கைது செய்யப்பட்ட டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக முன்னாள் மாணவர் உமர் காலித்தின் ஜாமீன் மனு இன்றும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. மாணவர் அமைப்பின் தலைவரும் சமூக ஆர்வலருமான உமர் காலித் மீது பிப்ரவரி 2020இல் வடகிழக்கு டெல்லியில் வன்முறையைத் தூண்டிய தாகக் குற்றம் சாட்டப்பட்டு இரண்டு ஊஐகீ பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் ஒரு ஊஐகீ எண் 101/2020, 24 பிப்ரவரி 2020 அன்று வடகிழக்கு டெல்லியில் பதிவு செய்யப்பட்டது. இதில் உமர் மீது கலவரம், கல் வீச்சு, வெடிகுண்டு வீச்சு, இரு சமூகத்தினரிடையே வெறுப்பு உணர்வைப் பரப்புதல், காவல்துறையினரைத் தாக்குதல், அரசுச் சொத்துகளைச் சேதப்படுத்துதல் போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன.
இருந்தும் ஒரு வழக்கில் உமருக்கு ஏப்ரல் 2021இல் பிணை கிடைத்தது. அதில் வன்முறையின்போது உமர் காலித் அங்கு இல்லை என்பதையும், வன்முறையில் அவர் ஈடுபட்டதை நிரூபிக்கும் எந்த ஆதாரமும் அவருக்கு எதிராக இல்லை என்பதையும் கருத்தில் கொண்டு நீதிமன்றம் அவருக்குப் பிணை வழங்கியது. பிணை வழங்கும்போது, ‘இந்த வழக்கில், முழுமையடையாத விஷயங்களின் அடிப்படையில், உமர் காலித் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதை அனுமதிக்க முடியாது’ என்று நீதிமன்றம் கூறியது. ஆனாலும் இரண்டாவது வழக்கில் அவர் மீது சட்டவிரோதச் செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் (UAPA) இன் கீழ் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த வழக்கில் அவரது பிணை மனுவை இதுவரை இரண்டு நீதிமன்றங்கள் நிராகரித்து உள்ளது மட்டுமின்றி அவரது மனு உச்சநீதிமன்றத்தில் ஏப்ரல் 2023 முதல் நிலுவையில் இருந்து வருகிறது.
போராட்டத்தின்போது ஏற்பட்ட வன்முறையில் உமர் காலித் மற்றவர்களுடன் சேர்ந்து சதி செய்ததாக அரசுத் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதனால்தான் கலவரங்கள் நடந்தன என்றும் அரசுத் தரப்பு கூறுகிறது. இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளை உமர் காலித் செய்திருப்பாரா என்பதைத் தெரிந்து கொள்ள ஜார்கண்டில் உள்ள பழங்குடியினர் நலன் குறித்து உமர் காலித் எழுதிய அவரது PhD ஆய்வறிக்கையிலிருந்து அவரது எண்ணங்களை மதிப்பிட முடியும் என்றும் அவரது வழக்கறிஞர் கூறியுள்ளார்.2023ஆம் ஆண்டில் உமரின் மனுமீது ஒரு நாள் கூட விசாரணை நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஷர்ஜீல் இமாம்
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவரும், மாணவத் தலைவருமான ஷர்ஜீல் இமாம் குடியுரிமைத் திருத்தச் சட்டங்களுக்கு எதிராகக் கருத்துக் கூறியமைக்காக பாஜக அரசால் குறிவைக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.பாட்னாவில் உள்ள செயின்ட் சேவியர்ஸ் போன்ற புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் தன் பள்ளிப்படிப்பை முடித்துக் கொண்டு, மும்பையில் உள்ள புகழ்பெற்ற இந்திய தொழில்நுட்பக் கழகத்தில் (IIT) B.Tech, M.Tech பட்டம் பெற்றவர் ஷர்ஜீல் இமாம். ஆண்டுக்கு 37 இலட்சம் ரூபாய் சம்பளத்துடன் தான் பணிபுரிந்து வந்த டேனிஷ் வங்கி பணியைத் துறந்து தனது கவனத்தை புகழ் பெற்ற ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியலின் வரலாற்றுத் துறையின் பக்கம் மாற்றி இருந்தார்.
TRT, The Wire, The First Post, The Quint போன்ற புகழ்பெற்ற தளங்களில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இது இமாமின் கல்வி மீதான ஆர்வத்தை வெளிக்காட்டுவதாக உள்ளது. பெரும்பாலும் இடதுசாரி, தாராளவாத, தேசியவாத முன்னோக்குகளால் மேலாதிக்கம் செய்யப்பட்ட இந்திய வரலாற்றைச் சுற்றி இருக்கும் பேச்சுகளுக்கு சவால் விடுபவராக இருந்தார். முஸ்லிம்கள் தங்கள் கடந்த காலங்களை அறிந்து கொள்ளவும், அவர்களின் சொந்த எண்ணங்களில் சிந்திக்கவும், அவர்களின் சொந்த வரலாற்றை எழுதவும் ஷர்ஜீல் இமாமின் M.கடடிடூ ஆய்வறிக்கை பெரிய அளவில் பயன்பட்டது. இமாமின் விரிவான விமர்சனம், ஃபாசிஸ பாஜக அரசை மட்டுமே மையப்படுத்தியதாக இன்றி, இந்திய தேசிய காங்கிரஸ், இடது, வலதுசாரிகளையும் உட்கொண்டதாக இருந்தது. இதுவே இவரைக் கல்வித்துறையில் மட்டுமல்ல, அரசியலிலும் சர்ச்சைக்குரிய நபராக ஆக்கியது.
சமூகம், பொருளாதாரம், தேர்தல் அரசிய லைச் சுற்றியுள்ள விவாதத்தில் முஸ்லிம்களை மையப்படுத்துவது இந்திய அரசியல் துறையில் ஒரு தீவிரப் புதுமையாக இருந்தது. இவை நிறைய நபர்களுக்கு வியப்பளிப்பதாகவும் அச்சமூட்டுவதாகவும் இருந்தது.CAA எதிர்ப்புப் போராட்டங்களில் குறிப்பிடத்தக்கதாக இருந்த புகழ்பெற்ற ஷாஹீன்பாக் போராட்டத்தில் ஒரு மெலிந்த மனிதர் கூட்டத்தின் நடுவில் நின்று, ஷாஹீன்பாக் மக்களை அங்கேயே அமர்ந்து மதியம் தொழச் சொன்னார். அவரது இடது புறத்தில் அமர்ந்திருந்த அமனத்துல்லா கான் MLA, உள்துறை அமைச்சரின் அலுவலகத்தை நோக் கிக் கூட்டத்தைப் பேரணியாகச் செல்லும்படி வலியுறுத்தினார். கானின் நடவடிக்கை எப்படி அமையும் என்பதை அறிந்த இமாம், பாரபட்சமான CAA, Nகீஇ சட்டத்திற்கு எதிராகத் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்ய அனைவரும் இங்கேயே அமர்ந்து சாலையை மறிக்குமாறு வலியுறுத்தினார். இமாமைத் தேர்ந்தெடுத்து மக்கள் சாலையில் அமர்ந்தனர். இதுவே ஷாஹீன்பாக் போராட்டத்தின் ஷர்ஜீல் இமாமின் பங்களிப்பை உணர்த்துவதாக உள்ளது.
CHAKKA JAM (சாலை மறியலைக்) குறிக்கும் ஷர்ஜீல் இமாம் கூறிய இந்த வார்த்தை தான் அவர் கைதாவதற்கும் நாடு முழுவதும் பிரபலமாவதற்கும் முக்கியக் காரணமாக அமைந்தது. அவர் தனது அலிகார் உரையில் கல்வி, அறிஞர்களின் பங்கைப் பற்றிய தனது புரிதலை வெளிப்படுத்தினார். அதில் அவர், ‘நீங்கள் ஓர் அறிஞராக இருந்தால், உங்கள் பொறுப்பு தெருக்களில் இருக்க வேண்டும், தவிர வளாகத்திற்குள் மட்டும் இருப்பதில்லை. நீங்கள் படித்தவராக இருந்தால், மக்களுக்குக் கல்வி கற்பிப்பது உங்கள் பொறுப்பு’ என்று கூறினார்.2019ஆம் ஆண்டு ஜாமியா வன்முறை வழக்கில் மாணவர் தலைவர்களான ஷர்ஜீல் இமாம், சஃபூரா சர்கார், ஆசிப் இக்பால் தன்ஹா உள்ளிட்ட எட்டு பேர்மீது கலவரம், சட்டவிரோதக் கூட்டம், பிற குற்றங்களின் கீழ் குற்றம் சாட்டப்பட்ட விசாரணை நீதிமன்றத்தின் விசாரணையை தில்லி உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
2024 மே 29இல் தேசத் துரோகம், சட்ட விரோத நடவடிக்கைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் அடங்கிய 2020 வகுப்புக் கலவர வழக்கில் ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழக மாணவர் தலைவர் ஷர்ஜீல் இமாமிற்கு தில்லி உயர் நீதிமன்றம் பிணை வழங்கியது. டெல்லி கலவரத்தின்போது டெல்லி ஜாமியா பகுதியிலும், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்திலும் ஆவேசப் பேச்சுகளைப் பேசியதாக ஷர்ஜீல் இமாம் தேசத் துரோகம், UAPA வழக்கில் கைது செய்யப்பட்டார். இன்னும் சில வழக்குகள் நிலுவையில் உள்ளதால் இமாம் இன்றும் சிறையில்தான் இருக்கிறார்.
ஷதாப் அஹமது
‘எனது மகன் எந்தத் தவறும் செய்யவில்லை, அவர் போராட்டத்தில் தான் பங்கேற்றார். போராட்டத்தில் பங்கேற்பது குற்றமல்ல. அவர் எந்த மதத்திற்கோ, அரசாங்கத்திற்கோ, தேசத்திற்கோ எதிராக எதையும் சொல்லவில்லை, செய்யவில்லை. இதற்கான ஆதாரம் அல்லது வீடியோ எதுவும் இல்லை. போராட்டங்களில் ஈடுபடுவது எங்கள் உரிமை. நான் என்ன செய்ய வேண்டும், சொல்லுங்கள். நான்கு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது’ என்கிறார் ஷதாபின் தந்தை. 27 வயதான ஷதாப் அஹமது டெல்லியின் ஜகத்பூர் பகுதியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் மேற்பார்வையாளராகப் பணிபுரிந்தார். அப்போது இந்தியா நாடு தழுவிய CAA எதிர்ப்புப் போராட்டங்களைக் கண்டது. அதில் ஷதாப் காலையில் வேலை செய்துவிட்டு இரவில் ஜமா மஸ்ஜித், ஷாஹின்பாக் போன்ற போராட்ட இடங்களுக்குச் செல்வார்’ என்று அவரது சக ஊழியர் ஒருவர் கூறியுள்ளார்.
CAA எதிர்ப்புப் போராட்டத்தின் போது புல்லட் காயத்தால் உயிரிழந்த ஹெட் கான்ஸ்டபிள் ரத்தன் லால் கொல்லப்பட்டது தொடர்பாக முதல் விசாரணை அறிக்கை 60/20 இன் கீழ் ஷதாப் அஹமது 2020 ஏப்ரல் 6 அன்று கைது செய்யப்பட்டார். 2020இல் குறைந்தது 53 பேரின் உயிரை எடுத்த டெல்லி கலவர வழக்கில் அவர் ஒரு ‘சதிகாரர்’ என்று குற்றம் சாட்டப்பட்டார். அவர் மீது கடுமையான சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின்(UAPA) கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிப்ரவரி 25 அன்று ஷோரூம், கார்களை எரித்தது தொடர்பாக ஷதாப் மீது 7 நவம்பர் 2020 அன்று மூன்றாவது கலவரம் செய்ததற்கான வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கிலிருந்து கடந்த டிசம்பர் மாதம் அவருக்குப் பிணை வழங்கப்பட்டது. இதுவரை ஷதாப் இரண்டு வழக்குகளில் பிணை பெற்றுள்ளார். எனினும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச்சட்டத்தின் (UAPA)வழக்கினால் அவர் இன்னும் சிறையிலிருக்கிறார்.
சஃபூரா சர்கார், இஷ்ரத் ஜஹான், குல்பிஷா ஃபாத்திமா
ஜாமியா மில்லியா ஆராய்ச்சி அறிஞரும், ஜாமியா ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான சஃபூரா சர்கார், முன்னாள் தில்லி மாநகராட்சி கவுன்சிலர் இஷ்ரத் ஜஹான், Mஆஅ மாணவி குல்பிஷா உள்ளிட்ட சிலர் மீது தில்லி காவல்துறை குற்றம் சாட்டியுள்ளது. சஃபூரா சர்கார் ஏப்ரல் 13 அன்று கைது செய்யப்பட்டபோது அவர் 13 வாரக் கர்ப்பிணியாக இருந்தார். இருந்தும் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் சில மாதங்கள் கழித்து அவர் பிணையில் விடுவிக்கப்பட்டு டெல்லியில் வசித்து வருகிறார்.2020இன் ஊஐகீகள் 83, 50 போன்ற பல வழக்குகளில் குல்பிஷா மீது பதிவு செய்துள்ளனர். ஊஐகீ 58 தொடர்பான ஒரு வழக்கில் அவருக்குப் பிணை வழங்கப்பட்டிருந்தாலும் UAPA வழக்கு உட்பட மற்றவற்றில் அவரின் பிணை மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனால் அவர் இன்றும் சிறையில் இருக்கிறார்.டெல்லி பல்கலைக்கழக முன்னாள் பேராசிரியரும் பழங்குடியின மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவருமான ஜி.என். சாய்பாபா போலி வழக்குகளால் பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறையில் கொடும் சித்ரவதைகளை அனுபவித்து பல நோய்களுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளார். பேராசிரியர் சாய்பாபாவைப் போல மாணவர் தலைவர்களும் சிறையிலேயே படு கொலை செய்யப்படுவார்களா அல்லது விடுவிக்கப்படுவார்களா? என்ற கேள்வி இன்று சமூகத்தின் மனசாட்சியை உலுக்கும் வினாவாக உயர்ந்தெழுந்து கொண்டிருக்கிறது.