2025 ஜனவரி 28ஆம் நாள் திருச்சி மஹாலில் ‘ஆலிம்களின் எழுச்சியே சமுதாயத்தின் வலிமை’ எனும் மையக் கருத்தில் ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் நடத்திய மாநில உலமா மாநாட்டில் தமிழ் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் 500க்கும் மேற்பட்ட ஆலிம்கள் கலந்து சிறப்பித்தனர். மௌலவி கபீர் உமரி திருக்குர்ஆன் வசனங்களை ஓதி மாநாட்டைத் தொடங்கி வைத்தார்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் உலமா பிரிவுச் செயலாளரும், அஸ்ஸலாம் அரபிக் கல்லூரியின் துணைமுதல்வருமான மௌலவி K.A. அஹ்மத் முஹ்யித்தீன் ஃபைஜி வரவேற்புரையாற்றினார்.
ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த், தமிழ்நாடு மாநிலத் தலைவர் மௌலவி M.A.முஹம்மத் ஹனீஃபா மன்பஈ தலைமை உரையாற்றினார். அவரது உரையில் ‘ஃபாஸிசம், ஆரியம், திராவிடம், தமிழ்தேசியம், பெரியாரிசம், அம்பேத்கரிசம், நாத்திகம், கம்யூனிசம், முதலாளித்துவம், போன்றவை இன்று விவாதப்பொருளாகி இருக்கின்றது. இதேபோல் நபி(ஸல்) அவர்களின் காலத்திலும் பல வாதங்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால் அதற்கெல்லாம் நபிகளார் இஸ்லாம் என்ற ஒரு தீர்வை முன்வைத்து அனைத்துக்கும் பதில் அளித்தார்கள். ஆனால் இன்றைய காலத்தில் இஸ்லாம் பேசு பொருளாக இருக்கின்றதா? இன்று முஸ்லிம்கள் பிறர் கூறுபவற்றைத் தடுத்துக்கொண்டுதான் இருக்கின்றார்களே தவிர தங்களுடைய கருத்தை முன் வைக்கவில்லை’ என்று கூறி மாநாட்டின் நோக்கம், ஆலிம்களின் பங்களிப்பு, ஜமாஅத்தே இஸ்லாமியின் நிலைப்பாடு குறித்துப் பேசினார்.
‘வளமான இந்தியாவிற்கு ஆலிம்களின் பங்கு’ எனும் தலைப்பில் மௌலவி R.காஞ்சி அப்துர் ரவூஃப் பாகவி ‘ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்தின் முன்னாள் அகில இந்தியத் தலைவர் அபுல் லைஸ் இஸ்லாஹி ‘தேச, சமுதாயக் கட்டமைப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்’ என்ற நூலில் வருங்கால இந்தியா எவ்வாறு இருக்க வேண்டும் என்ற ஒரு தொலைநோக்கு கண்ணோட்டத்தை முன்வைத்திருந்தார். ஆலிம் என்பவர் இஸ்லாத்தை மட்டும் கூறக்கூடிய சூழலில் இந்தச் சிந்தனை என்னைப் பெரிதும் ஈர்த்தது. சீனா, ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகள் உயர்ந்த நாடுகளாக இருக்கின்றது என்றால் அவர்கள் அறிவு ரீதியாகச் செயல் பட்டதால்தான். அதேபோல் பலமான இந்தியாவிற்கு ஆலிம்கள் அறிவுக் களத்தில் செயல்பட்டால் தான் அதனை அடைய முடியும்’ என்ற கருத்தை முன்வைத்து பல புத்தகங்களில்இருந்து மேற்கோள்கள் காட்டி ஆழமான உரை நிகழ்த்தினார்.
முன்மாதிரி மஸ்ஜித் முன்மாதிரி மஹல்லா எனும் தலைப்பில் திருநெல்வேலி தாருஸ்ஸலாஹ் உயர் கல்வியக முதல்வர் மௌலவி மு.ஷேக் அப்துல் காதிர் காஷிஃபி, காஸிமி உரையாற்றினார். தமது உரையில் இஸ்லாமிய வரலாற்று நிகழ்வுகளைப் புள்ளி விவரங்களோடு எடுத்துரைத்ததுடன், நபி(ஸல்) அவர்கள் மதீனாவிற்குப் புலம் பெயரும்போது முதலில் செய்த பணி மஸ்ஜிதுந் நபவி, கூபா போன்ற மஸ்ஜிதுகளைக் கட்டியதுதான். யமாமா தேசத்தின் சுமாமா என்பவர் இஸ்லாத்தை ஏற்க பள்ளிவாசலும் ஒரு காரணமாக இருந்தது. மருத்துவ ஆராய்ச்சியின் தந்தை என சிறப்புப்பெற்ற நரம்பியல், மனநல நிபுணர் இப்னு சீனா, ஒளியியல் கண்ணாடி வடிவமைத்தவர், ஒளிப்படங்களை வடிவமைத்த இப்னு ஹைத்தம், உலக வரைபடங்களை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள், மக்கள் தொகை கணக்கெடுப்புகள் குறித்து கற்றுத்தந்தவர்கள், கண்புரை அறுவைச் சிகிச்சையை உலகிற்கு அறிமுகப்படுத்தியவர்கள், வானியல் ஆராய்ச்சி, உயிரியல், வேதியியல் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டவர்கள், ரசாயண அமிலங்கள், கணிதவியல், பூமத்திய ரேகை, கடக, மகர ரேகைகளைக் கண்டுபிடித்தவர்கள், இவர்களெல்லாம் 1200 ஆண்டுகளுக்கு முன்னரே மஸ்ஜித் திண்ணைகளில் பயின்றவர்களாவர்’ எனக் குறிப்பிட்டார்.
பைஜுல் அன்வர் அரபிக் கல்லூரிப் பேராசிரியரும், கடையநல்லூர் வட்டார ஜமா அத்துல் உலமா சபைச் செயலாளருமான மௌலவி ஹாபிழ் பாஜில் M.செய்யது இப்ராஹீம் அன்வாரி ‘ஒழுக்க வீழ்ச்சியிலிருந்து சமுதாயத்தை மீட்டெடுப்பதில் ஆலிம்களின் பங்கு’ எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். இன்றைய ஒழுக்கச் சீர்கேடுகளைக் கவலையுடன் எடுத்துரைத்ததுடன் ஒழுக்கம் தான் முஸ்லிம்களின் தலைக் கவசமாக இருக்க வேண்டும். ஒழுக்கம் இல்லையென்றால் மதிப்பு இருக்காது என்பதையும், ஒழுக்கம் இருக்கக்கூடிய மனிதன் தான் சிறந்த மனிதன் என்பதையும், ஒழுக்கச் சீர்கேடுகளை அகற்றி நபியவர்கள் ஒழுக்க மாண்புகளை விதைத்தார்கள் என்பதையும் குறிப்பிட்டு இன்றைய ஒழுக்கக்கேடுகளை ஆலிம்கள் முன்வந்து அகற்ற வேண்டும்’ என தமது உரையில் எடுத்துரைத்தார்.
கோவை ஹிதாயா மகளிர் இல்லாமியக் கல்லூரித் தாளாளர் மௌலவி இஸ்மாயீல் இம்தாதி ‘இந்திய அரசியல் அமைப்புச் சட்டமும் மதீனா சாசனமும்’ எனும் தலைப்பில், சீரும் சிறப்புமாக வாழ்ந்த சமுதாயம் இன்றைக்குத் தன்னுடைய வாழ்வுரிமைக்காகவும், அரசியல் உரிமைக்காகவும், பொரு ளாதார சமூக நீதிக்காகவும் ஆட்சியாளர் களிடம் கெஞ்சும் சூழலில் நாம் இருக்கின்றோம் என்பதைக் கவலையுடன் குறிப்பிட்டதுடன்இன்றைய இந்தியாவில் எந்தெந்த எதிர்ப்புகளை எல்லாம் முஸ்லிம்கள் சந்திக்கின்றõர்கள் என்பதைத் தெளிவாகக் கூறினார். இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை நாம் எவ்வாறு அணுக வேண்டும் என்பதை மதீனா சாசனத்தோடு ஒப்பிட்டு, இந்திய அரசியல் சாசனத்தை அம்பேத்கர் வடிவமைக்கும் போது உலகத்தில் இருக்கும் அனைத்து அரசியல் சட்டங்களையும் ஆராய்ந்தார். அதில் நபி(ஸல்) அவர்களின் மதீனா சாசனம் முக்கியமானது’ எனக் கூறினார்.
இஸ்லாமிய சமுதாயத்தின் எழுச்சிக்கு ஆலிம்களின் பங்களிப்பு குறித்து வரலாற்றின் ஒளியில் ஆதாரங்களைச் சுட்டிக் காட்டிப் பேசிய மௌலவி நூஹ் மஹ்ழரி தமது உரையில் இமாம் அபூ ஹனீஃபா, இமாம் ஷாஃபி, இமாம் மாலிக், இமாம் அஹ்மது இப்னு ஹன்பல், இமாம் புகாரி, இமாம் திர்மிதி, இமாம் கஸ்ஸாலி, இமாம் ஷா வலியுல்லாஹ், இமாம் அப்துல் காதிர் ஜீலானி, இமாம் ஷேக் அஹ்மத் சிர்ஹிந்தி போன்ற இமாம்கள் சீர்த்திருத்தவாதிகளாக இருந்தனர். இன்றைய சமுதாயம் வீழ்ச்சியையும், பிரச்னைகளையும் சந்தித்து வருகிறது. இளைஞர்கள் அவல நிலையில் உள்ளனர். இவற்றைச் சீர்திருத்தம் செய்ய ஆலிம்கள் களம் காண வேண்டும். சமுதாயத்தைத் தட்டி எழுப்பி உற்சாகப்படுத்த வேண்டும். பள்ளிவாசல்கள் சமூக நலக்கூடங் களாக மாற வேண்டும். ஒவ்வொரு ஆலிமும் சீர்திருத்தவாதியாக மாறி சமுதாயத்தை வலிமைப்படுத்த வேண்டும்’ என்றார்.
மாநாட்டையொட்டி நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டது. திருச்சி அஸ்ஸலாம் இஸ்லாமியக் கல்லூரி பேராசிரியர் மௌலவி அப்துல் ஹஸீப் பாகவி, ஃபாஜில் தேவ்பந்த் நன்றியுரை யாற்றினார். திருச்சி அஸ்ஸலாம் இஸ்லாமியக் கல்லூரி முதல்வர் மௌலவி M. முஹம்மத் சித்தீக் மதனியின் துஆவுடன் மாநாடு நிறைவு பெற்றது. மாநாட்டு அமைப்பாளர் மௌலவி ஆ. முஹம்மத் நாசர் புஹாரி மாநாட்டை வழிநடத்தினார்.
மௌலவி முஹையதீன் உமரி மாநாட்டுத் தீர்மானங்களை வாசித்தார்.
தொகுப்பு : மௌலவி அப்துல் ஹஸீப் பாகவி
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
1. மனிதகுலம் மாபெரும் நெருக்கடி களைச் சந்தித்து வரும் இன்றைய காலச் சூழலில், தீமைகள் வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து வருகின்றன. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நிறுத்தி அமைதியும், நீதியும் நிறைந்த சமூகத்தைக் கட்டமைக்க மார்க்க அறிஞர்களான ஆலிம்கள் வலிமை பெற வேண்டும். தங்களுக்குள் நிலவும் கருத்து வேறுபாடுகளுக்கு மத்தியில் ஒன்றிணைந்து பணியாற்றி சமுதாய மறுமலர்ச்சிக்கு வித்திட வேண்டும் என்று ஆலிம் பெருமக்களை வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கின்றோம்.
2. இறைமார்க்கப் பணிக்காகவும், சமுதாய முன்னேற்றத்திற்காகவும் தங்கள் மார்க்க அறிவாலும், ஆற்றலாலும் தங்களை அர்ப்பணித்துக் கொள்ளும் ஆலிம்களுக்கு உரிய கண்ணியத்தை வழங்குவதுடன், பொருளாதாரத் தன்னிறைவுடன் தங்கள் கடமைகளை ஆற்றுவதற்கும், முழுச் சுதந்திரத்துடன் பணி புரிவதற்குமான சூழலை உறுதி செய்ய வேண்டும் என மஹல்லா நிர்வாகிகளையும், ஜமாஅத்தினரையும் கேட்டுக் கொள்கின்றோம்.
3. ஒவ்வொரு பள்ளிவாசலிலும் தொழுகைக்கான ஏற்பாடுகளைப் போலவே மதர ஸாக்களுக்கான கட்டமைப்பும் வலுப்படுத்தப்பட வேண்டும். மஸ்ஜித்கள் நூலகங்களாக, மருத்துவ உதவி மையங்களாக, ஆலோசனை மன்றங்களாக, அழைப்பியல் களங்களாக, மக்கள் சேவை நிலையங்களாக அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் முன்மாதிரி மஸ்ஜிதுகளாக மாற்றம் பெற வேண்டும்.
4. அண்மைக்கால இந்தியாவில் வெறுப்புப் பரப்புரை தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன. சகோதர சமுதாயச் சொந்தங்களின் உள்ளங்களில் இஸ்லாத்தைக் குறித்தும், முஸ்லிம்களைக் குறித்தும் பிழையான எண்ணங்களை வெறுப்பாளர்கள் உருவாக்கி வைத்துள்ளார்கள். எனவே இஸ்லாம் குறித்த சரியான செய்தியை எடுத்துரைப்பதுடன், சகோதரச் சமுதாயச் சொந்தங்களுடன் அழகிய தொடர்பை தனிப்பட்ட, கூட்டு ரீதியில் ஏற்படுத்திக் கொள்ள முஸ்லிம் சமுதாயத்தை ஆலிம்கள் தயார் படுத்த வேண்டும். வெறுப்புக்குப் பதில் அன்பை விதைத்து தமிழ்நாட்டையும், இந்தியாவையும் அன்பின் நிலமாக மாற்ற இளைய தலைமுறைக்கும் வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். இஸ்லாத்திற்குச் சாதகமான மக்கள் கருத்தை
உருவாக்குவதில் ஆலிம்கள் முன்நின்று இந்த வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும்.
5. பல்வேறு பண்பாட்டுத் தாக்கங்களினால் இஸ்லாமியக் குடும்பவியல் சிக்கலுக்குள்ளாகி வருகிறது. இறைவனும் இறைத்தூதரும் காட்டித்தந்த வழியில் தங்களது இல் வாழ்வை அமைத்துக் கொள்ள முஸ்லிம் சமுதாயத்தை வலியுறுத்த வேண்டுமாறு ஆலிம்களைக் கேட்டுக் கொள்கின்றோம். பாகப் பிரிவினை, திருமணம், தலாக், குலா விவகõரங்களை ஷரீஅத் அடிப்படையில் முழுமையாக நிறைவேற்றுவதற்கான சூழலை ஏற்படுத்த வேண்டும். எளிமையான திருமணங்கள், திருமணத்திற்கு முன் வழிகாட்டுதல்கள், திருமண வாழ்வில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்க்கும் ஷரீஅத் பஞ்சாயத்துகளை ஒவ்வொரு மஹல்லாவிலும் ஏற்பாடு செய்ய வேண்டும்.
6. இன்றைய இளைஞர்கள் பலர் போதையின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். மது, போதை போன்ற பெரும் தீமைகளிலிருந்து மக்களைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கின்றது. போதை இல்லாப் பாதை எனும் முழக்கத்தோடு போதை ஒழிப்பு முயற்சியில் தமிழ்நாடு அரசு ஈடுபட்டு வருவதைப் பாராட்டும் வேளையில், அனைத்து போதைகளுக்கும்
அடித்தளமாக விளங்கும் மதுவை முழு முற்றாகத் தடை செய்து மது இல்லா மாநிலமாகத் தமிழ்நாட்டைத் திகழச் செய்ய வேண்டும் என தமிழக அரசை இந்த மாநாடு கேட்டுக் கொள்கிறது.
7. 76ஆவது குடியரசு தினத்தைக் கொண்டாடி மகிழும் இந்தத் தருணத்தில் அரசியலமைப்புச் சட்டம் உறுதி செய்துள்ள மதச் சுதந்திரம், வழிபாட்டு உரிமை பாதுகாக்கப்பட வேண்டும். சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களை ஆக்கிரமிக்கும் போக்கு அண்மைக்காலமாக தலைதூக்கி உள்ளது. இதனைத் தடுத்து நிறுத்தி வழிபாட்டு உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அதற்கான சூழலை ஒன்றிய, மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும்.
8. ஒன்றிய அரசு இப்போது கொண்டு வரத்துடிக்கும் வக்ஃப் சட்டத் திருத்தம் அரசியல் அமைப்பு வழங்கிய மதச் சுதந்திரத்தைத் தகர்க்கும் ஆபத்தான நடவடிக்கையாகும். இஸ்லாமிய சமுதாயத்தால் நிர்வகிக்கப்படும் சொத்துகளில் அரசு தலையிடுவது இந்திய மதச் சார்பின்மைக்கு எதிரானது. இது சிறுபான்மை உரிமை மீதான தாக்குதல் மட்டுமல்ல மதத்தின் தனித்தன்மைக்கு உலை வைக்கக்கூடிய செயலாகும். எனவே வக்ஃப் சட்டத் திருத்த மசோதா முழுமையாகத் தோற்கடிக்கப்பட வேண்டும். அதற்காக அனைவரும் ஒருங்கிணைந்து குரல் எழுப்ப வேண்டும். முழு முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
9. 15 மாதங்களுக்கும் மேலாக ஃபலஸ்தீனத்தைச் சின்னாபின்னமாக்கி உலகின் எந்த அறங்களுக்கும் கட்டுப்படாமல் இஸ்ரேல் ஆடிய கோர தாண்டவத்தை இந்த மாநாடு வேதனையோடு கண்டிக்கிறது. இத்தனை சோதனைகளுக்கு மத்தியிலும் தளராத இறைநம்பிக்கையுடனும், அசாத்தியமான பொறுமையோடும், பல்வேறு இழப்புகளுக்கு முகம் கொடுத்தாலும் எள்முனையளவும் பின்வாங்காமல் இறுதிவரை உறுதியாக நிலைத்து நின்ற ஃபலஸ்தீன போராளிகளையும், மக்களையும் பாராட்டுகின்றோம். இப்போது ஏற்பட்டுள்ள போர் நிறுத்தம் நிரந்தர அமைதிக்கு வித்திட வேண்டும். சுதந்திர ஃபலஸ்தீனம் மலர வேண்டும். உலக நாடுகள் அதற்கான முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கின்றோம்.