மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

ரமளானின் பயிற்சிகள் எதற்காக?
டாக்டர் K.V.S.ஹபீப் முஹம்மத், 1-15 மார்ச் 2025



இந்த ரமளானில் இறைவன் நம்மைக் கொண்டு சேர்த்ததற்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம். பலருக்கு இந்த பாக்கியம் கிடைக்காமல் போயிருக்கின்றது. ஆகவே இதனை நாம் முறையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அறுவடைக் காலம்

இந்த ரமளான் பல அருள்வளங்களை நமக்குத் தருகின்றது. இது நன்மைகளுடைய அறுவடைக் காலம். இந்த மாதத்தில் செய்கின்ற நன்மைகளுக்குப் பல மடங்கு கூலி உண்டு. பாவங்கள் உதிரும் காலம் இது ஓர் இலையுதிர் காலம். இந்த மாதத்தில் நாம் செய்கின்ற பாவங்கள் உதிர்கின்றன. எனவே நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘யார் இந்த ரமளானை இறைநம்பிக்கையோடும் இறைவனுடைய கூலியை எதிர்பார்த்தும் கழிக்கிறார்களோ அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’

இரக்கத்தின் மாதம்

இது கருணையின் மாதம். இரக்கத்தின் மாதம். ஆகவே நாம் இம்மாதத்தில் பசித்திருந்தும் தாகத்தை உணர்ந்தும் ஏழைகளுக்கும் வறியவர்களுக்கும் சமுதாயத்தில் பின்தங்கிய மக்களுக்கும் தாராளமாக வாரி வழங்கக்கூடிய மனப்பான்மையைப் பெறுவதற்கான பயிற்சியைப் பெறுகின்றோம்.

குர்ஆன் இறங்கிய மாதம்

இது வேதம் வந்த மாதம். மனித குலத்திற்கு வழிகாட்டியாக வந்த திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதம். நன்மையையும் தீமையையும் பிரித்து அறிவிக்கும் குர்ஆன் இந்த மாதத்தில் அருளப்பட்டது. ஆகவே தான் இம்மாதத்தில் நோன்பு நோற்கின்றோம்.

பயிற்சியின் மாதம்

எல்லாவற்றையும் விடச் சிறப்பு என்னவென்றால் ஆன்மாவிற்குப் பயிற்சி தருகின்ற மாதம். ஆன்மிகப் பயிற்சி மாதம். ‘உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு நோன்பு விதியாக்கப் பட்டது போல் உங்களுக்கும் விதியாகப்பட்டுள்ளது. நீங்கள் இறையச்சம் உடையவர்களாத் திகழ்வதற்காக’ என்று இறைவன் குறிப்பிடுகின்றான். நோன்பின் முக்கிய நோக்கம் இறையச்சம் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஆகவே இம்மாதத்தில் நமது துஆ, தொழுகை, பாவமன்னிப்பு, நோன்பு இவை எல்லாம் எதை நோக்கிச் செல்கின்றன என்று சொன்னால் இறையச்சத்தை நோக்கித்தான் செல்கின்றன என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே தான் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘பொய் பேசுவதையும் அதன் படிச் செயலாற்றுவதையும் யார் விட்டு விடவில்லையோ அவருடைய தாகமும் பட்டினியும் தேவை இல்லை’ என்று இறைவன் கூறுகின்றான். புறம் பேசிக் கொண்டு இருந்த இருவரை பெருமானார் அழைத்து ‘நீங்கள் புறம் பேசி விட்டீர்கள். உங்கள் நோன்பு முறிந்து விட்டது’ என்று கூறினார்கள்.

நோன்பு என்பது ஒரு கேடயம். ‘ஷைத்தானுடைய தாக்குதலிலிருந்து நம்மைக் காக் கின்ற கேடயம்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நோன்பு என்பது வயிற்றுக்கு மட்டுமல்ல கட்டுப்பாடு உடம்பினுடைய ஒவ்வொரு உறுப்பிற்கும் கட்டுப்பாடு. தீயவற்றைப் பார்க்காதே, தீயவற்றைப் பேசாதே, தீயவற்றைக் கேளாதே, தீயவற்றைச் செய்யாதே! இவை அனைத்திற்குமான பயிற்சி தான் ரமளான் நோன்பு என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வெறும் பட்டினியும் தாகமும் அல்ல.

தொழுகையின் நோக்கம் மானக்கேடான தீமையான செயல்களிலிருந்து உங்களைக் காக்கின்றது. ஜகாதின் நோக்கம் உள்ளும் புறமும் தூய்மைப்படுத்துவது. ‘நபியே அவர் களுடைய பொருட்களை தானதர்மத்திற்காக எடுத்துக் கொள்ளும்’ என்று அல்லாஹ் கூறுகின்றான். எல்லா வணக்கங்களின் நோக்கமும் இறையச்சம்தான்.  ஆகவே  வணக்கங்கள் வெறும் சடங்குகளல்ல! வணக்கங்கள் எல்லாம் இஸ்லாத்தில் முழுமையாக நுழைவதற்கான பயிற்சி. அல்லாஹ் கூறுகின்றான்: ‘இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்’ என்று! பயிற்சிகள் இல்லை என்றால் முழுமையான முஸ்லிமாக முடியாது. ரமளானை நாம் வெறும் சடங்காக நோன்பு நோற்றுக் கடந்து விடாமல் அதிலிருந்து நாம் பயன் பெற வேண்டும். நோன்பின் நோக்கமான இறையச்சத்தைப் பெற முழு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

தொகுப்பு: அ.சபீனா


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்