ஜகாத்துல் ஃபித்ர் என்றால் என்ன?
ஜகாத்துல் ஃபித்ர் ரமளான் இறுதியில் நோன்பாளிகள் வழங்கும் ஒரு தர்மமாகும். வசதி உள்ள எல்லா நோன்பாளிகளின் மீதும் இது கடமையாகும். வசதி என்றால் செல்வந்தராக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அன்றாட உணவுத் தேவையைப் பெற்றிருப்பவர்கள் மீதும் இது கடமையாகும். நம்மில் பலர் ஃபித்ர் என்று வார்த்தையை ஃபித்ரா என்று பயன்படுத்தி வருகிறோம். ஃபித்ரா என்பதன் பொருள் இயல்பு நிலை, இயற்கை என்று பொருள்படுகிறது. எனவே ஃபித்ர் என்று சொல்வதுதான் சரி.
ஜகாத்துல் ஃபித்ர் எப்போது கடமையானது?
ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு, ரமளான் மாதத்தில் நோன்பு கடமையாக்கப்பட்டது. ‘ஜகாத்துல் ஃபித்ர்’ எனப்படும் நோன்புப் பெருநாள் கொடையும் இந்த ஆண்டு தான் கடமையாக்கப்பட்டது. இதர பொருட்களுக்குரிய ‘ஜகாத்’ எனப்படும் கட்டாய தர்மத்தின் அளவுகளும் இந்த ஆண்டுதான் விவரிக்கப்பட்டது.
ஜகாத்துல் ஃபித்ரை ஏன் கொடுக்க வேண்டும்?
ரமளான் மாத வணக்கங்களில் ஜகாத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மமும் ஒன்றாகும். நோன்பாளி வீணான செயல்கள், தேவையற்ற பேச்சுகள் போன்றவற்றில் ஈடுபட்டிருந்தால், அதற்குப் பரிகாரமாக அமைவதற்காகவும் ஏழைகளுக்கு உணவாக அமைவதற்காகவும் ஜகாத்துல் ஃபித்ரை நபி(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். பிற மாதங்களை விட ரமளான் மாதத்தில் அதிகம் தர்மம் செய்ய நபி(ஸல்) அவர்கள் ஆர்வமூட்டி உள்ளார்கள். அதிலும் குறிப்பாக, பெருநாள் தினத்தன்று புத்தாடை அணிந்து, உணவருந்தி, மகிழ்வைப் பகிர்ந்து கொள்வதில் ஏழை, பணக்காரர்களுக்கு மத்தியில் வித்தியாசம் காணாமல், இஸ்லாமிய சகோதரத்துவத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் ஜகாத்துல் ஃபித்ர் எனும் பெருநாள் தர்மத்தை இஸ்லாம் கடமையான தர்மமாக்கியுள்ளது.
யார் மீது கடமை?
பெருநாள் தினத்தின் உணவுக்குத் தேவையான ஆகாரத்தை விட மேலதிக வசதி உள்ளவர்கள் மீது இது கடமையாகும். தன்னுடைய பராமரிப்பின் கீழ் உள்ள உறவுகளுடைய ஜகாத்துல் ஃபித்ரையும் நிறைவேற்றுவது, அவர்களின் பராமரிப்பாளர் மீது கடமையாகும். அடிமைகள், அடிமைகள் அல்லாத மற்றவர்கள், ஆண்கள், பெண்கள், சிறுவர், பெரியவர் ஆகிய அனைத்து முஸ்லிம்கள் மீதும் நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) நூல்: புகாரி 1503).
யார் இவர்களைப் பராமரிக்கும் பொறுப்பில் இருக்கிறார்களோ அவர்கள் நிறைவேற்ற வேண்டும். எனவே ஒருவர் தமக்காகவும், தனது மனைவிக்காகவும், தனது பராமரிப்பில் உள்ள தனது பிள்ளைகளுக்காகவும், தனது பராமரிப்பில் உள்ள பெற்றோருக்காகவும் பெருநாள் தர்மத்தை வழங்க வேண்டும்.
ஜகாத்துல் ஃபித்ராக என்ன கொடுக்க வேண்டும்?
நபிகள் நாயகம்(ஸல்) காலத்தில் தங்கக் காசுகள், வெள்ளிக் காசுகள் புழக்கத்தில் இருந்தாலும் நோன்புப் பெருநாள் தர்மமாகக் காசுகள் கொடுக்கப்பட்டதில்லை. உணவுப் பொருட்கள் தான் கொடுக்கப்பட்டன.
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். ‘நாங்கள் நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாஉ அளவு ஏதேனும் உணவையோ, ஒரு ஸாஉ அளவு தீட்டாத கோதுமையையோ அல்லது ஒரு ஸாஉ அளவு பேரீச்சம் பழத்தையோ அல்லது ஒரு ஸாஉ அளவு பாலாடைக் கட்டியையோ அல்லது ஒரு ஸாஉ அளவு உலர்ந்த திரட்சையையோ கொடுப்போம்’ (ஸஹீஹ் புகாரி : 1506)
அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார். ‘நபி(ஸல்) அவர்களின் காலத்தில் பெருநாள் அன்று ஒரு ஸாஉ உணவைத் தர்மமாகக் கொடுத்து வந்தோம். அக்காலத்தில் தீட்டாத கோதுமையும் உலர்ந்த திராட்சையும் பாலாடைக் கட்டியும் பேரீச்சம் பழமும் தான் எங்களின் உணவாக இருந்தன.’ (ஸஹீஹ் புகாரி : 1510)
பொதுவாக உணவுப் பொருட்கள் வழங்குவதுதான் முக்கியம். அன்றைக்கு எது உணவாக இருந்ததோ அதை வழங்கினார்கள் என்று புரிந்து கொள்ளலாம். மேலே கூறப்பட்டுள்ள பொருட்களில் கோதுமை மட்டும் தான் நம்மில் சிலருக்கு உணவாக அமையுமே தவிர உலர்ந்த திராட்சையோ, பேரீச்சம் பழமோ, பாலாடைக் கட்டியோ நமக்கு (இந்தியர்களுக்கு) உணவாக ஆகாது. எனவே நமது உணவாக எது இருக்கிறதோ அதைத்தான் பெருநாள் தர்மமாகக் கொடுக்க வேண்டும்.
எவ்வளவு கொடுக்க வேண்டும்?
ஒரு ‘ஸாஉ’ உணவு, அல்லது ஒரு ‘ஸாஉ’ கோதுமை, அல்லது ஒரு ‘ஸாஉ’ பேரீச்சம் அல்லது ஒரு ‘ஸாஉ’ தயிர் அல்லது ஒரு ‘ஸாஉ’ வெண்ணை என்பவற்றை ஜகாத்துல் ஃபித்ராக நாம் வழங்குபவராக இருந்தோம்’ என அபூ ஸயீத் அல்குத்ரி(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்)
‘ஸாஉ’ என்பது நடுத்தரமான ஒரு மனிதனின் நான்கு கை அளவு வழங்குவதைக் குறிக்கும். இது அரபுகளிடம் காணப்பட்ட ஓர் அளவீட்டு முறையாகும். சாதாரணமாக அரிசி என்றால், ஒரு ‘ஸாஉ’ என்பது 2.3 கிலோவைக் குறிக்கும். இந்த அளவு உணவையோ, உணவு தானியத்தையோ வழங்க வேண்டும்.
எப்போது ஃபித்ருடைய பொருட்களைக் கொடுக்கவேண்டும்
இந்தத் தர்மமானது புனித ரமளானின் இறுதியில், பெருநாள் தொழுகைக்கு முன்பே வழங்கப்படுவதாகும். ஒவ்வொரு முஸ்லிமான ஆண், பெண், அன்று பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைவரின் சார் பாகவும் வழங்கப்படவேண்டும். ஃபித்ர் ஜகாத்தை பெருநாள் தொழுகைக்கு மக்கள் புறப்படும் முன்பே வழங்கி விட வேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு உமர்(ரலி); நூல்கள்: புஹாரி, முஸ்லிம், அஹ்மத், நஸயீ, திர்மிதீ
நபித்தோழர்கள் பெருநாளைக்கு ஒரு நாள் முன்பாக அல்லது இரண்டு நாள்களுக்கு முன்பாக பெருநாள் தர்மத்தை வழங்குபவர்களாக இருந்தனர். அறிவிப்பாளர்: இப்னு உமர் (ரலி); நூல்: புஹாரி (1511)
எனவே பெருநாள் தர்மத்தைப் பெறக்கூடிய மக்கள் பெருநாளைக்கான உணவுகளைத் தயார்படுத்திக்கொள்ள வசதியாக ஒருநாள் அல்லது இரண்டு நாள்கள் முன்னதாகக்கொடுத்துவிடவேண்டும்.
பெருநாள் தொழுகைக்கு முன்னர் அதனை வழங்கிவிட்டால் அதுவே அங்கீகரிக்கப்பட்ட ஃபித்ராகும். அதனை பெருநாள் தொழுகைக்குப் பிறகு வழங்கினால் அது தர்மங்களில் ஒரு தர்மமேயாகும்.
(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்கள்: அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817)
ஜகாத்துல் ஃபித்ர் ஒரு சிறிய செயலாகத் தோன்றலாம், ஆனால் அது ஒரு பெரிய தாக்கத்தையும் சிறந்த வெகுமதியையும் கொண்டுள்ளது. எனவே, நாம் அதைச் சரியான நேரத்தில் செலுத்தி அதற்கான நன்மைகளைப் பெற்றுக் கொள்வோம்.