2025 ஏப்ரல் 4,5 ஆகிய நாள்களில் வக்ஃப் திருத்தச் சட்ட மசோதா 2025 எனும் சட்டத் திருத்தத்தை ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்து அதனை நிறைவேற்றியுள்ளது. இம்மசோதா சமர்ப்பிக்கப்பட்ட அடுத்த நாளிலேயே குடியரசுத் தலைவரும் அதற்கு ஒப்புதல் அளித்து விட்டார். எனவே இந்த மசோதா சட்டமாக நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இந்தத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து எதிர்ப்புத் தெரிவித்தன. எனினும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பாஜக கூட்டணிக்குப் போதுமான ஆதரவு இருந்ததால், மசோதா எளிதில் நிறைவேறியது.
இந்த சட்ட மசோதாவைப் பரிசீலனை செய்வதற்காக அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டு ஆலோசனைக் குழு எதிர்க்கட்சி உறுப்பினர்களுடன், நாட்டிலுள்ள பல்வேறு முஸ்லிம் அமைப்புகளும் தெரிவித்திருந்த கருத்துகள் எதனையும் ஏற்றுக் கொள்ளாமல் பாஜக உறுப்பினர்கள் தெரிவித்த திருத்தங்களை மட்டுமே ஏற்றுக் கொண்டு தனது அறிக்கையை நாடாளுமன்ற சபாநாயகரிடம் அளித்தது. ஒன்றிய அரசும் கூட்டு ஆலோசனைக் குழுவின் அறிக்கையை அப்படியே ஏற்றுக் கொண்டு அதனடிப்படையில் திருத்த மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதா குறித்த விரிவான தகவல்களை இனி பார்ப்போம்.
வக்ஃப் என்றால் என்ன?
வக்ஃப் என்ற அரபி வார்த்தைக்கு நிலை நிறுத்துதல் என்று பொருள். ஆனால் வழக்கில் இறைவனுக்காக வழங்கப்படும் தர்மச் சொத்துகள் வக்ஃப் என்று கூறப்படுகிறது. இஸ்லாமிய இறை இல்லங்களுக்கும் தர்ஹாக்களுக்கும் இன்ன பிற அறப்பணிகளுக்கும் முஸ்லிம் செல்வந்தர்களும், இந்து முஸ்லிம் மன்னர்களும் ஏன் இந்துக்களும் கூட தங்களது சொத்துகளை வக்ஃப் செய்துள்ளனர். ஒருவர் ஒரு சொத்தை வக்ஃப் செய்து விட்டால் அவர் அதனைத் திரும்பப் பெற முடியாது. வக்ஃப் செய்யப்பட்ட சொத்தை விற்கவோ மாற்றவோ முடியாது.
இந்த வக்ஃப் சொத்துகளைப் பாதுகாப்பதற்கும், பராமரிக்கவும், உருவாக்கப்பட்ட அமைப்பு தான் வக்ஃப் வாரியம். வக்ஃப் வாரியத்தின் செயல்பாடுகளை ஒன்றிய அரசின் சட்டங்களே கட்டுப்படுத்துகின்றன. மாநிலங்களுக்கு இந்தச் சட்டங்களை இயற்றவோ, திருத்தங்கள் செய்யவோ அதிகாரம் இல்லை. ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி வக்ஃப் வாரியங்கள் உள்ளன. இவற்றையெல்லாம் நிர்வகிக்கின்ற மத்திய வக்ஃப் வாரியமும் உள்ளது.
இந்தியாவில் வக்ஃப் சொத்துகளின் மதிப்பு இந்தியாவின் பாதுகாப்பு, ரயில்வேக்கு அடுத்து வக்ஃப் வாரியத்திற்கே அதிகச் சொத்துகள் இருப் பதாக ஒரு பொய்ப் பரப்புரை ஒன்றிய அரசால் திட்டமிட்டுப் பரப்பப்பட்டு வருகிறது. அதனை முஸ்லிம்களும் உண்மை என்று நம்பி பெருமையுடன் பரப்பி வருகின்றனர். இது உண்மை இல்லை. இந்த மசோதாவின் மீது நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய பிரபல சட்ட நிபுணர் கபில் சிபில், தென்னிந்தியாவில் மட்டுமுள்ள இந்து அறநிலையத் துறையின் சொத்துகள் இந்தியா எங்கும் உள்ள வக்ஃப் சொத்துகளை விட அதிகம் என்று புள்ளி விவரங்களுடன் பேசினார். உண்மையில் இந்தியாவில் அதிகமான சொத்துகள் இருப்பது இந்து அறநிலையத்துறை அல்லது அது போன்றிருக்கின்ற அமைப்புகளிடம்தான். பாகிஸ்தானின் பரப்பளவை விடவும் இந்தியாவிலுள்ள வக்ஃப் சொத்துகளின் அளவு அதிகம் என்ற இந்துத்துவவாதிகளின் பரப்புரையில் துளியும் உண்மை இல்லை.
ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் 9.7 இலட்சம் ஏக்கர் பரப்பளவுள்ள 8.8 இலட்சம் பதிவு செய்யப்பட்ட வக்ஃப் சொத்துகள் உள்ளன. இதில் 8.7 இலட்சம் அசையா சொத்துகள், 16713 சொத்துகள் அசையும் சொத்துகள். மேற்கண்ட வக்ஃப் சொத்துகளை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.
1. கபருஸ்தான்கள் (அடக்கம் செய்யும் இடங்கள்) 1,50,569 ஏக்கர்
2. விளைநிலங்கள் 1,40,803 ஏக்கர்
3. பள்ளிவாசல்கள் 1,19,280 ஏக்கர்
4. கடைகள், வீடுகள் 1,13,193 ஏக்கர்
(மற்றவை பிற இனங்களில் கீழ்வரும்)
இந்தச் சொத்துகளை நாடெங்கிலுமுள்ள 7 இலட்சத்திற்கும் மேற்பட்ட வக்ஃப் அமைப்புகள் நிர்வகித்து வருகின்றன.
வக்ஃப் வாரியங்களின் பணி என்ன?
வக்ஃப் சொத்துகளைப் பாதுகாக்கவும், பராமரிக்கவும் உருவாக்கப்பட்ட அமைப்புகளே வக்ஃப் வாரியங்கள், இதன் உறுப்பினர்கள் அனைவரும் முஸ்லிம்களே. வாரியத்தின் செயல் அலுவலரும் முஸ்லிமாகவே இருப்பார். வக்ஃப் சொத்துகளை வக்ஃப் வாரியங்கள் நேரடியாக நிர்வாகம் செய்வது இல்லை. நாட்டில் பல்வேறு இடங்களில் பரவிக் கிடக்கும் பள்ளிவாசல்கள், தர்ஹாக்கள், அறநிறுவனங்கள் இவற்றின் நிர்வாகிகளே பாதுகாத்து பராமரித்து வருகின்றனர். இவை பதிவு செய்யப்பட்ட வக்ஃப் சொத்துகள்.
பள்ளிவாசல்களை நிர்வகிக்க ஒரு நிர்வாகக் குழு இருக்கிறது. இந்த நிர்வாகக் குழுவை அந்தந்த ஜமாஅத் உறுப்பினர்களே தேர்ந்தெடுக்கின்றனர். இந்த நிர்வாகக் குழுவின் தலைவரே முத்தவல்லி. பள்ளிவாசல்களைப் பராமரிப்பது, பேஷ் இமாம், முஅத்தின்களுக்கு ஊதியம் வழங்குவது உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் முத்தவல்லியே மேற்கொள்கிறார். பல பள்ளிவாசல், தர்ஹாக்களுக்கு நிலங் களையும் பலர் வக்ஃப் செய்துள்ளனர். இந்த நிலங்களில் கடைகள், வீடுகள் கட்டி அவற்றை வாடகைக்கு விட்டு அதிலிருந்து கிடைக்கின்ற வருமானத்தை பள்ளிவாசல்களின் செலவுகளுக்கு ஈடுகட்டுகின்றனர். சில பள்ளிவாசல்களுக்கு வக்ஃப் செய்யப்பட்ட விளைநிலங்கள், தோப்புகள் உள்ளன. இவற்றை குத்தகைக்கு விட்டு அதில் கிடைக்கின்ற வருமானமும் பள்ளிவாசல்களுக்கு கிடைக்கிறது.
நிலங்கள் அல்லது வேறு சொத்துகள் இல்லாத பள்ளிவாசல்கள் அந்தந்த ஜமாஅத் மக்கள் வழங்குகின்ற மாதச் சந்தாவைக் கொண்டே நிர்வகிக்கப்படுகின்றன. சிலர் பள்ளிவாசல் நிலத்தில் வீடுகளைக் கட்டி தரை வாடகை கொடுத்து வருகின்றனர். பள்ளிவாசல் நிர்வாகிகள் ஆண்டுதோறும் வக்ஃப் வாரியத்திற்குத் தங்களது வரவு செலவு கணக்கை சமர்ப்பிக்கின்றனர். பெரும்பாலான பள்ளிவாசல்களில் மதரஸாக்கள் உள்ளன. இவையும் பள்ளிவாசல் நிர்வாகத்தின் கீழ் வருகிறது.
நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள், தர்ஹாக்கள் வழங்குகின்ற தீர்வுத் தொகை மாநில வக்ஃப் வாரியத்தின் முக்கிய வருமானம் ஆகும். மாநில அரசுகளும் வாரியத்திற்கு ஆண்டுதோறும் ஒரு குறிப்பிட்ட தொகையை ஒதுக்கீடு செய்து வருகிறது. இந்த நிர்வாக அமைப்பைப் புரிந்து கொண்டவர்கள் வக்ஃப் வாரியத்திற்கு வருகின்ற வருமானம் மிக மிகச் சொற்பமே என்பதை எளிதில் உணர முடியும்.
ஜமாஅத்தினரால் தேர்ந்தெடுக்கப்பட்ட முத்தவல்லிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது, ஜமாஅத் நிர்வாகத்தில் பிரச்னைகள் ஏற்பட்டால் அவற்றுக்குத் தீர்வு தருவது, ஆக்கிரமிக்கப்பட்ட சொத்துகளை மீட்க சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் எடுப்பது, சில அறப் பணிகளை நிறைவேற்றுவது (உலமா பென்சன் போன்ற) ஆகியனவும் வக்ஃப் வாரியத்தின் பணிகளாகும். வக்ஃப் சொத்துகள் பல ஆக்கிரமிப்பில் உள்ளன என்பது உண்மையே. அரசுகளாலும், தனி நபர்களாலும் அவை ஆக்ரமிக்கப்பட்டுள்ளன. ஆக்ரமிப்பாளர்களில் முஸ்லிம்களும் அடங்குவர். இந்தச் சொத்துகளை மீட்க மிகப் பெரிய சட்டப் போராட்டத்தை வக்ஃப் வாரியங்கள் நடத்த வேண்டிய சூழ்நிலையில் உள்ளன என்பதும் கசப்பான உண்மையாகும்.
வக்ஃப் திருத்தச் சட்டத்தின் முக்கிய அம்சங்களும் அதன் விளைவுகளும்
இந்து அறநிலையத்துறை நடத்துகின்ற பள்ளிகளில் கல்லூரிகளில் கூட இந்து அல்லாதவர்களை நியமிக்க முடியாது. தனது கட்சியில், தங்களது அமைச்சரவையில் ஒரு முஸ்லிமைக் கூட நியமிக்காத பாஜக ஆட்சியாளர்கள் வக்ஃப் வாரியத்தில் மட்டும் முஸ்லிமல்லாதவர்களை நியமிக்க ஏன் திருத்தச் சட்டம் கொண்டு வர வேண்டும்? அவர்களது நோக்கம் வக்ஃப் வாரியத்தைச் சீர்குலைப்பதேயாகும்.
2013ஆம் ஆண்டு இந்தத் திருத்தம் கொண்டு வரப்பட்ட போது அத்வானி, வாஜ்பாய், முரளி மனோகர் ஜோஷி ஆகிய மூத்த பாஜக தலைவர்கள் இந்தத் திருத்தத்திற்குப் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்த போதும், பாஜக தலைவர்கள் இது குறித்துப் பேசவில்லை. உண்மையிலேயே இந்தச் சட்டப் பிரிவினை வக்ஃப் வாரியத் தலைவர்கள் தவறாகப் பயன்படுத்தியிருந்தால் நாட்டில் பெரிய பிரளயம் அல்லவா ஏற்பட்டிருக்க வேண்டும். எனவே இந்தச் குற்றச்சாட்டு கற்பனையானதாகும்.
இப்போது ஒன்றிய அரசால் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ள வக்ஃப் திருத்தங்களை மிக உன்னிப்பாகக் கவனித்துப் பார்த்தால், வக்ஃப் வாரியங்களின் அதிகாரத்தைக் குறைத்து ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்குள் அதனைக் கொண்டு வருகின்ற முயற்சியாகவே மிக அப்பட்டமாகத் தெரிகிறது. நம் முஸ்லிம்களிலேயே சிலர் வக்ஃப் வாரியத்தில் ஊழல் நிறைந்திருக்கிறது. எனவே இந்தச் சட்டத் திருத்தத்தை ஆதரித்தால் என்ன என்ற ரீதியில் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள். வாரியத்தில் ஊழலை ஒழிப்பதற்கான எந்த ஓர் அம்சமும் இந்தத் திருத்தச் சட்டத்தில் இல்லை. நாட்டில் எல்லாத் துறைகளிலும் ஊழல் இருக்கிறது. ஊழலை ஒழிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள ஏற்கனவே இருந்த சட்டத்தில் எந்தத் தடையுமில்லை. இந்தத் திருத்தச் சட்டத்திலும் ஊழலை ஒழிப்பதற்கான எந்த ஓர் அம்சமும் இல்லை.
எதற்காக இந்தச் சட்டம்?
இந்தத் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வர இப்போதைக்கு எந்தவிதமான தேவையும் இல்லை. ஆனால் பாஜக ஆட்சியாளர்களுக்கு முஸ்லிம்களைச் சீண்டிப் பார்க்க, அவர்களை எப்போதும் பதற்றத்திலேயே வைத்திருக்கும் புதுப் புது விஷயங்கள் தேவைப்படுகின்றன. அயோத்தியில் இராமர் கோயில் கட்டப்பட்டு விட்டது. காஷ்மீர் மாநிலத்திற்கு இந்திய அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவு வழங்கியிருந்த சில சிறப்புச் சலுகைகள் ரத்து செய்யப்பட்டு விட்டன. சில பாஜக ஆளுகின்ற மாநிலங்களில் பொது சிவில் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. இந்நிலையில் முஸ்லிம்களைப் பதற்றத்தில் வைக்க என்ன வழி என்று தீவிரமாக அலோசனை (சதி) செய்து வக்ஃப் திருத்தச் சட்ட மசோதாவைக் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளனர்.
எதிர்க்குரல்
இந்தியா கூட்டணியின் அனைத்துக் கட்சிகளும், பிஜு ஜனதா தளம், ஙுகுகீ காங்கிரஸ் ஆகிய னவும் இந்தத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளன. அண்ணா திமுகவும் எதிராகவே வாக்களித்துள்ளது. காங்கிரஸ் கட்சி யின் கோய், கே.சி. வேணுகோபால், திமுகவின் ராசா, தயா நிதி மாறன், திருச்சி சிவா, சமாஜ்வாதி கட்சியின் பிரபல சட்ட நிபுணர் கபில் சிபல், மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜான் பிரிட்டாஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வழக்கறிஞர் பீரான், மஜ்லிஸே இத்திகாத்துல் முஸ்லிமீன் உவைஸி ஆகியோர் இந்த மசோதா மீதான விவாதத்தில் பங்கு கொண்டு சிறப்பான முறையில் தங்களது வாதங்களை எடுத்து வைத்தனர்.
இந்தத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், திமுக, முஸ்லிம் லீக், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்குகள் வருகிற 15.4.25 அன்று விசாரணைக்கு வரும் எனப் பத்திரிகைச் செய்திகள் தெரிவிக்கின்றன. உச்ச நீதிமன்றம் இந்தத் திருத்தச் சட்டத்திற்கு தடையாணை பிறப்பிக்குமா அல்லது விரைந்து விசாரணை நடத்தி தீர்ப்பு வழங்குமா? காத்திருப்போம்.