நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் வக்ஃப் திருத்த மசோதா 2025ஐ பாஜக கூட்டணி அரசு நிறைவேற்றியிருக்கிறது. இந்தத் திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக 288 வாக்குகளும் எதிராக 232 வாக்குகளும் பதிவாகி இருந்த நிலையில் பெரும்பான்மையின் அடிப்படையில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
சுமார் 12 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விவாதத்துக்குப் பிறகு, மசோதா மீதான விவாதத்திற்கு ஒன்றிய சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜூ பதில் அளித்தார். பின்னர் மாநிலங்களவைத் தலைவர் ஜெகதீப் தன்கர் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தினார். அப்போது வக்ஃப் திருத்தச் சட்ட மசோதாவிற்கு ஆதரவாக 128 எம்பிக்கள் வாக்களித்தனர். எதிராக 95 எம்பிக்கள் வாக்களித்தனர். வக்ஃப் திருத்தச் சட்ட மசோதாவிற்கு ஆதரவாகப் பெரும்பான்மை வாக்குகள் இருந்ததால் மாநிலங்களவையிலும் இச்சட்டம் நிறைவேறியது.
நிதிஷ்குமாரும், சந்திரபாபு நாயுடுவும் இம்மசோதாவிற்கு ஆதரவாக வாக்களித்து வரலாற்றுத் துரோகம் இழைத்துள்ளார்கள். பாமக அன்புமணி வாக்களிக்கவில்லை. தமாக ஜி.கே. வாசன் ஆதரித்து வாக்களித்த சூழலில் இந்தச் சட்டத்திற்கு எதிராக இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் விவாதத்தில் ஈடுபட்டனர். சகோதர சமுதாயச் சொந்தங்களின் அறச்சீற்றத்தில் சிலவற்றை இங்கே தொகுத்துள்ளோம்.
மதம் மட்டும்தான்உங்களுக்குப் பிரச்னை
ஆ.ராசா
திமுக, நீலகிரி மக்களவை உறுப்பினர்
நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் தெரிவித்த கருத்துகளும், கூட்டுக்குழுவின் ஆவணங்களில் சொல்லப்பட்டிருப்பவையும் ஒன்றாக இல்லை. ஒன்றாக இருப்பதை நிரூபித்தால் என்னுடைய எம்.பி பதவியை ராஜினாமா செய்யத் தயாராக இருக்கிறேன். இந்த மசோதாவை 2024இல் அறிமுகம் செய்தபோது, இந்த மசோதாவை உருவாக்க எது தூண்டியது என்பதற்கு ஒரு காரணத்தைக் கூறினீர்கள். தமிழ்நாட்டின் திருச்சி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் வக்ஃப் வாரியத்துக்குச் சொந்தமானது என அறிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினீர்கள்.
மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை செயலாளர் ஆகியோர் அதற்கான ஆதாரங்களைக் காண நேரில் சென்றனர். அவர்கள் திரட்டிய தகவல்களைக் கூட்டுக்குழு முன்பு அளித்தனர். அதில், அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியது கட்டுக்கதைகள் என அவர்கள் நிரூபித்துள்ளனர். 1970ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரை அடிப்படையில் 1984 வக்ஃப் திருத்தம் கொண்டுவரப்பட்டது. பின்னர் 1995ஆம் ஆண்டு முஸ்லிம்களின் கோரிக்கைப் படி இரண்டு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு 2013ஆம் ஆண்டும் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. தற்போது எந்தப் பரிந்துரை அடிப்படையில் இந்தப் புதிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது?
தமிழ்நாட்டில் இந்து அறநிலையத் துறை நிர்வகிக்கும் கல்லூரிகளில் இஸ்லாமியர்களை ஆசிரியர்களாக நியமிக்க எதிர்ப்புத் தெரிவிக்கும் பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் தற்போது வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களையும் உறுப்பினர்களாகச் சேர்க்கும் திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளனர். ஒன்றிய அரசுக்கு மதம் மட்டும்தான் பிரச்னையாக உள்ளது. திருத்த மசோதாவில் வக்ஃப் சொத்து கணக்கெடுப்பு என குறிப்பிடப்பட்டுள்ளதும் தவறானது. ஏற்கெனவே 90% சொத்துகள் கணக்கெடுக்கப்பட்டு விட்டதாக, உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துள்ளது.
வக்ஃப் வாரியத்தின் அதிகாரங்கள், பதிவு செய்தல், சொத்துகள் கணக்கெடுப்பு, ஆக்கிரமிப்புகளை அகற்றுதல், வக்ஃப் வரையறை என ஐந்து திருத்தங்களிலும் 2013இல் செய்யப்பட்ட திருத்தத்திலிருந்து ஏதேனும் புதிதாக மேம்படுத்தப்பட்டுள்ளதா எனக் காட்டினால், நான் உங்களுக்கு ‘சல்யூட்’ செய்கிறேன். ஆனால் உங்களால் காட்ட முடியாது. 1995, 2013 ஆகிய ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் முழுவதுமாக இந்தத் திருத்த மசோதாவில் நீக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மைவாத ஃபாஸிசத் தாக்குதல்
தொல். திருமாவளவன்
விசிக, சிதம்பரம் மக்களவை உறுப்பினர்
இந்த வக்ஃப் திருத்தச் சட்ட மசோதாவை முற்றாக நான் எதிர்க்கிறேன். இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டிற்கே எதிரானது. தேச ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானது. அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. ஆகவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மிக வன்மையாக எதிர்க்கிறேன். இந்த மசோதா இஸ்லாமியர்களின் சொத்துகளை முற்றாக அபகரிப்பதற்கான ஒரு சதி முயற்சி யாகவே தெரிகிறது.
இஸ்லாமியர்கள் இஸ்லாமியர்களின் நலன்களுக்காக உருவாக்கிக் கொண்ட வக்ஃப் சொத்து இஸ்லாமியர்களால் நிர்வகிக்கப்படுவதுதான் நீதியாகும். ஆனால், அதற்கென உருவாக்கப்பட்டு இருக்கிற நிர்வாகக் குழுவில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை வாரியத்திலே 11 பேரில் ஏழு பேரையும் மத்திய கவுன்சில் (Central council) என்கிற அகில இந்திய அளவிலான அவையில் 22 பேரில் 12 பேரையும் நியமித்துக் கொள்வதற்கான வாய்ப்பை இந்தச் சட்ட மசோதா வழங்குகிறது.
இது எந்த வகையிலான நீதியாக இருக்க முடியும்? இஸ்லாமியர்கள் மீதான உங்கள் வெறுப்பு அரசியல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது ஒரு ஃபாஸிசத் தாக்குதலாகத் தான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே சிஏஏ சட்டத்தைக் கொண்டு வந்தீர்கள், பாபர் மஸ்ஜிதை இடித்தீர்கள், ஜம்மு காஷ்மீரைச் சிதைத்தீர்கள், இன்றைக்கு இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு அரசியலை நீங்கள் விதைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இது வலதுசாரி பெரும்பான்மைவாத ஃபாஸிசத் தாக்குதல் என்று நான் சுட்டிக்காட்டி வன்மையாகக் கண்டிக்கிறேன்.
மேலும், இஸ்லாமிய சமூகத்தின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையில் ஆகாகான்களுக்குத் தனி வக்ஃப் வாரியம் என்றும், ஷியா முஸ்லிம்களுக்குத் தனி வக்ஃப் வாரியம் என்றும் போரா முஸ்லிம்களுக்குத் தனி வக்ஃப் வாரியம் என்றும் நீங்கள் அறிவித்திருப்பது மிக மோசமான ஃபாஸிசத் தாக்குதல் ஆகும். இஸ்லாமிய சமூகத்துக்கு எதிராக சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த பௌத்தராக இருக்கிற ரிஜிஜு என்கிற அமைச்சரை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். ஜனநாயகத்தைக் கொன்று புதைப்பதற்கு ஜனநாயக வடிவத்தைக் கையில் எடுக்கிறீர்கள். அதுபோல இஸ்லாமியர்களின் ஒற்றுமையைச் சீர்குலைப்பதற்குச் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த ஓர் அமைச்சரைப் பயன்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
புத்தகயாவில் மகா போதி கோவிலில் புத்திஸ்ட் அல்லாதவர்களை உறுப்பினர்களாக வைத்திருக்கிறார்கள். அதை எடுக்கச் சொல்லி பௌத்த பிக்குகள் தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசு அதைக் கண்டும் காணாமல் வேடிக்கை பார்த்து வருகிறது. சாவர்க்கரின் கனவை நனவாக்குவதற்காக சாவர்க்கரின் தொண்டர்களாக இருக்கின்ற இன்றைய ஆட்சியாளர்கள் இஸ்லாமியர்களைச் சீர்குலைக்கிற, கிறித்தவர்களை நசுக்குகிற, பௌத்தர்களை, சமணர்களை, சீக்கியர்களை அச்சுறுத்துகிற வகையிலே இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது, மத நல்லிணக்கத்திற்கு எதிரானது, புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்த அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்பதனால் இந்தச் சட்ட மசோதாவை நான் மிக வன்மையாக எதிர்க்கிறேன். இதைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
அரசியலமைப்புச் சட்டத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் எதிரானது
திருச்சி சிவா
திமுக மாநிலங்களவை உறுப்பினர்
‘வஃக்ப் திருத்தச் சட்ட மசோதா மோசடியானது. அரசியல் சாசனத்திற்கு எதிரானது. வக்ஃப் திருத்த மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாகவே வக்ஃப் திருத்த மசோதாவை நாங்கள் எதிர்க்கிறோம். வஃக்ப் மசோதா நிறைவேறிய நாள் ஒரு வருத்தமான நாள். நாட்டின் முன்னேற்றத்துக்கு இஸ்லாமியர்கள் ஏராளமான பங்களிப்பைச் செய்துள்ளனர். ஒரே மொழி, ஒரே கலாச்சாரம், ஒரே மதம் என்பதை ஒன்றிய அரசு வலியுறுத்துகிறது.
வக்ஃப் திருத்தச் சட்ட மசோதா கொண்டுவருவது நிர்வாகத்தை மேம்படுத்த எனக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது. வக்ஃப் நிர்வாகத்தையே கைப்பற்று வதற்குதான் திருத்த மசோதா கொண்டு வரப்படுகிறது. வக்ஃப் மசோதா அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. மதச்சார்பின்மைக்கு எதிரானது. பல மொழிகள், கலாச்சாரங்கள் கொண்ட இந்தியாவில் ஒன்றிய அரசு நினைப்பது சாத்தியம் இல்லை.
இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும் கூட 5 கி.மீ தூரத்தில் உள்ள உச்சநீதிமன்றத்தால் நிராகரிக்கப்படக் கூடும். அனைவருக்குமான வளர்ச்சி என்று கூறுகிறது. முஸ்லிம்களுக்கு மட்டும் வேறு கொள்கையை பாஜக அரசு கடைப்பிடிக்கிறது. முஸ்லிம்களை ஓரம் கட்டுவது, பொது நீரோட்டத்தில் இருந்து விலக்குவதுதான் ஆளும் கட்சியின் கொள்கை. அரசின் செயலால் முஸ்லிம்கள் அந்நியப்படுத்தப்படுகின்றனர். பாதுகாப்பு இல்லாதவர்களாக உணர்கின்றனர். மசோதாக்களை ஆய்வு செய்ய குழுக்கள் அமைப்பதால் எந்தப் பயனும் இல்லை. வக்ஃப் மசோதாவை ஆராய அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் நடவடிக்கையே அதற்கு எடுத்துக்காட்டு.
நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் வக்ஃப் மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் அளித்த திருத்தங்கள் எதுவுமே ஏற்கப்படவில்லை. அப்துல் கலாம் போல பல இஸ்லாமியர்கள் இந்திய நாட்டின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வைத்திருக்கிறார்கள்; இங்கே இப்போதுகூட, அப்துல்லா என் தம்பி, நான் அவர் அண்ணன். தமிழ்நாட்டில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறும் போது இஸ்லாமியர்கள் பக்தர்களுக்குக் குளிர்பானங்கள் வழங்குவார்கள். இதற்குப் பெயர் தான் ஒற்றுமை.
திரும்பப் பெற வேண்டும்
வைகோ
மதிமுக, மாநிலங்களவை உறுப்பினர்
வக்ஃப் திருத்தச் சட்டம் கூட்டாட்சிக்கு எதிரானது, ஜனநாயக விரோதமானது, மதசார் பற்ற தன்மைக்கு எதிரானதாகும். இந்தத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். நாடு முழுவதும் உள்ள மக்களின் கருத்தும் அதுவாகத்தான் உள்ளது. இஸ்லாமிய சமூகம் மிகவும் தொந்தரவுக்கு ஆளாகி உள்ளது. அவர்கள் அச்சத்தில் உள்ளனர். பல்வேறு விஷயங்கள் நடைபெற்றுள்ளன. அவர்கள் பாதுகாப்பாக உணரவில்லை.
சிறுபான்மையினர் மீதான தாக்குதல்
சஞ்சய் சிங்
ஆம் ஆத்மி, மக்களவை உறுப்பினர்
‘பாஜக அரசானது இது போன்ற திருத்தச் சட்டத்தை அடுத்தடுத்து கொண்டு வருவதன் மூலம் சிறுபான்மையினர் மீது குறிவைக்கிறது. வக்ஃப் திருத்தச் சட்ட மசோதாவில் இஸ்லாமியர் அல்லாதோர் வாரியத்தில் இடம் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள கோயில்களில் உள்ள அறக்கட்டளை அமைப்புகளில் 80 விழுக்காடு இடங்களைப் பட்டியலின சமூகத்தினருக்கு இந்த அரசு ஒதுக்க முன்வருமா என்று கேட்கவிரும்புகின்றேன்.
அம்பேத்கர் உருவாக்கிய அரசியலமைப்புச் சட்டத்தைக் கொல்வதற்காகவே வக்ஃப் திருத்தச் சட்டத்தை பாஜக அரசுகொண்டு வந்துள்ளது. இந்தத் திருத்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இந்தத் திருத்தச் சட்டமானது சண்டைகளை, சச்சரவுகளை, சர்ச்சைகளை உருவாக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டுள்ளது.
வாக்கு வங்கிக்கான அரசியல் விளையாட்டு
அகிலேஷ் யாதவ்
சமாஜ்வாதி, மக்களவை உறுப்பினர்
இந்த மசோதா பிரிவினைவாதத்தை நோக்கமாகக் கொண்டது, உலகிற்கு எதிர்மறையான செய்தியை அனுப்புகிறது, நாட்டின் மதச்சார்பற்ற பிம்பத்தை சேதப்படுத்துகிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகள் இந்த மசோதாவை ஆதரித்தாலும், இந்த மசோதாவில் அதிருப்தி அடைந்துள்ளதால், இந்த மசோதா பாஜகவுக்கு ஒரு ‘நீர்மூழ்கிக் கப்பல்’ என்று நிரூபிக்கப்படும். பாஜகவின் குறைந்து வரும் வாக்கு வங்கியை நிர்வகிக்க இது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவின் நிலம் கையகப்படுத்துதலில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப இந்த மசோதா அறிமுகப்படுத்தப்படுகிறது. வக்ஃப் மசோதாவைக் கொண்டு வருவது பாஜகவின் அரசியல் விளையாட்டு. கட்சியிலிருந்து இப்போது தங்களைத் தூர விலக்கிக் கொண்டிருக்கும் ஆதரவாளர்களைத் திருப்திப்படுத்த கட்சி விரும்புகிறது. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் வாக்கு விழுக்காடு சரிவு ஏற்பட்டுள்ளதால், பாஜக வாக்குகளை நிர்வகிக்க முயற்சித்து வருகிறது. வாக்குகளை நிர்வகிக்க இந்த மசோதா அறிமுகப்படுத்தப்படுகிறது.
சமூகங்களைப் பிளக்கும் வேலை இது
கல்யாண் பானர்ஜி
திரிணாமுல் காங்கிரஸ், மக்களவை உறுப்பினர்
இந்த மசோதா தவறான கருத்துடையது. பகுத்தறிவற்றது, தன்னிச்சையானது. இது இந்து, முஸ்லிம் சமூகங்களைத் துருவப்படுத்துவதை நோக்கமாகக் கொண் டுள்ளது இந்த மசோதா முஸ்லிம்கள் தங்கள் மத விவகாரங்களைச் செய்வதற்கும் நிர்வகிப்பதற்கும் உள்ள உரிமைகளைத் தெளிவாக மீறுவதாகும். எனவே பிரிவு 26 அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறுகிறது.
இஸ்லாத்தைப் பின்பற்றும் தனிநபர்கள் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வக்ஃப் செய்ய அனுமதிக்கும் முன்மொழியப்பட்ட விதி தவறானது. மதக் கடமைகள் சட்டத்தின் அடிப்படையை உருவாக்கக்கூடாது. வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும், இறக்கும் நேரத்திலும் கூட, ஒருவர் தனது மதக் கடமைகளை நிறைவேற்ற முடியும் பிரிவு 40ஐ நீக்குவது சட்டத்தைப் பயனற்றதாக்கும். பல்லில்லாத பொம்மை யுடன் இதனை ஒப்பிடமுடியும். விடுபட்ட விதிகள் சொத்து மீதான உரிமை கோரல் களுடன் தொடர்புடையவை. வக்ஃப் சொத்துகள் முஸ்லிம் சமூகங்களின் முதுகெலும்பாக அமைகின்றன.
இந்தியாவின் இருண்ட நாள்
மஹுவா மொய்த்ரா
திரிணாமுல் காங்கிரஸ், மக்களவை உறுப்பினர்
வக்ஃப் திருத்த மசோதா 2025 நியாயமற்றது. இந்தி யாவின் மதச்சார்பற்ற ஜனநாயகத்தில் இது மிகவும் இருண்ட நாள். இங்கே ஐம்பது வாக்கு வித்தியாசம் மட்டுமே இருந்தது, இந்த மசோதா எவ்வளவு பிரபலமற்றது, பொதுமக்களின் ஆணைக்கு எதிரானது என்பதை நீங்கள் உணருகிறீர்கள். பாஜகவின் இரண்டு கூட்டாளிகளால் மட்டுமே இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
ஏன் இந்தப் பிரிவினைவாதம்?
தயாநிதி மாறன்
திமுக, மத்திய சென்னை மக்களவை உறுப்பினர்
வக்ஃப் திருத்தச் சட்ட மசோதாவைக் கொண்டு வருவதற்கு முக்கியக் காரணம் எண்ணிக்கைகளில் தெரிகிறது. 71, 62, 36. இவை என்னவென்று தெரியுமா? 2014இல் உத்தரப்பிரதேசத்தில் பாஜக வென்ற எம்பி இடங்கள் 71, 2019இல் 62, 2024இல் 36. 1990இல், ‘பாபர் மஸ்ஜிதை இடிக்க வேண்டும், அங்கு ராமர் கோயிலைக் கட்ட வேண்டும், ‘ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம்’ என்று கூறி 71 இடங்களைப் பிடித்தார்கள். பின்னர் அவர்களின் செல்வாக்கு சரிந்து, 36 இடங்களுடன் ராமர் கோயிலைத் திறந்தார்கள்.
இஸ்லாமியர்களிடமிருந்து பாபர் மஸ்ஜிதைப் பறித்ததோடு, இந்துக்களிடமிருந்து, குறிப்பõக ஏழை விவசாயிகளிடமிருந்து, சுமார் 4,500 ஏக்கர்களைப் பறித்தார்கள். விமான நிலையங்கள், சாலைகள், பணக்காரர்களுக்காக ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் கட்டுவதற்காக இதைச் செய்தார்கள். இதன் விளைவு என்ன? 2024 தேர்தலில் அயோத்தியில் வெற்றி பெற்றவர் யார்? சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவர் 56,811 வாக்குகளில் வென்றார். இதை அவர்களால் தாங்க முடியவில்லை.
இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே வெறுப்பைத் தூண்டினால் மட்டுமே தங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். அவர் களின் வெற்றிக்குக் காரணம், வெறுப்பு உணர்வு, பிரிவினை அரசியல் மட்டுமே. ஏர் இந்தியாவை ரூ.16,000 கோடிக்கு விற்றீர்கள், ஆனால் அதன் கடன் ரூ.63,000 கோடி. உங்கள் நண்பர்களான அதானி, அம்பானி போன்றோருக்கு ரூ.4.5 லட்சம் கோடி கடனைத் தள்ளுபடி செய்தீர்கள். அதற்கு மசோதா கொண்டுவரவில்லையே? இப்போது பெண்களுக்காக என்று சொல்கிறீர்கள். தமிழ்நாட்டில் வக்ஃப் வாரியத் தலைவராக ஒரு பெண் இருந்திருக்கிறார்.
உண்மையில், உங்களுக்கு உத்தரப் பிரதேசத்தில் வெற்றி வேண்டும். அங்கு வென்றால் மட்டுமே ஆட்சிக்கு வர முடியும். வக்ஃப் நிலங்களைப் பார்த்தால், இந்தியாவில் 8,70,000 சொத்துகள், 9,40,000 ஏக்கர்கள், சுமார் 1.2 லட்சம் கோடி மதிப்பு உள்ளது. இதில் 25% உத்தரப்பிரதேசத்தில் உள்ளது. இதை விட்டுவிடுவீர்களா? ஏன் இந்தப் பிரிவினைவாதம்? இந்த அரசு சிறுபான்மையருக்கு எதிராகவே செயல்படுகிறது. வாஜ்பாய் காலத்தில் ஓர் இஸ்லாமிய அமைச்சர் இருந்தார். இப்போது உங்களிடம் ஓர் இஸ்லாமிய எம்பி கூட இல்லை. முதலில் இஸ்லாமியர்களை ஒழித்தார்கள், அடுத்து கிறித்தவர்களை ஒழிப்பார்கள், பின்னர் தலித் களை ஒழிப்பார்கள், பின் யாரும் மிச்சமிருக்க மாட்டார்கள். நீங்கள் பசுத்தோலைப் போர்த்திய புலியைப் போல் மக்களை ஏமாற்றி, வாக்கு வங்கி அரசியல் செய்கிறீர்கள்.
இறைச் சொத்துகளை இஸ்லாமியர்களே பாரமரிக்க வேண்டும்
துரை வைகோ
மதிமுக, திருச்சி மக்களவை உறுப்பினர்
இஸ்லாமியர்களின் உரிமையைப் பறிக்கும் இந்தச் சட்டத்தை, ஜனநாயக மாண்புக்கு எதிராக இருக்கும் இந்தச் சட்டத்தை, மதச்சார்பின்மைக்கு எதிராக இருக்கும் இந்தச் சட்டத்தை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக நான் எதிர்க்கிறேன். (பின்னர் திருக்குர்ஆனின் 57ஆவது அத்தியாயத்தின் 18ஆம் வசனத்தை ஓதினார்) ‘ஆண்கள், பெண்களிலிருந்து எவர்கள் ஸதகா, தான தருமங்கள் வழங்குபவர்களாய் இருக்கின்றார்களோ, மேலும் எவர்கள் அல்லாஹ்விற்கு அழகிய கடன் அளித்தார்களோ, அவர்களுக்குத் திண்ணமாக பன்மடங்கு அதிகம் வழங்கப்படும். அவர்களுக்குக் கண்ணியமான கூலியும் இருக்கிறது’ என்பதுதான் இதன் பொருள்.
திருக்குர்ஆனில் உள்ள எல்லாம் வல்ல அல்லாஹ்வின் இந்த வார்த்தைகளைச் செயல்படுத்துவதற்கும், இஸ்லாமியர்கள் இறைப் பணிகளை மேற்கொள்வதற்கும் தான் வக்ஃப் சொத்துகள் உருவாக்கப்பட்டன. இந்த வக்ஃப் சொத்துகள் மூலம் இஸ்லாமியர்கள் மட்டும் அல்ல, இந்து, கிறித்தவர்கள் பயன் அடைகின்றனர். தமிழ்நாட்டில் பல கொடையாளர்கள் வக்ஃப் வாரியத்துக்கு தானம் அளித்துள்ளனர். ஒற்றுமையையும், பன்முகத்தன்மையையும் நிலைநிறுத்துகிறது. வக்ஃப் சட்டத்திருத்தத்தில் பிழைகள் உள்ளன. கொடையாளர்களை மதத்தின் அடிப்படையில் பிரிப்பது நல்லதல்ல. இறைச் சொத்துகளை இஸ்லாமியர்கள் மட்டுமே பராமரிக்க வேண்டும். வேறு மதத்தினரை நியமிக்கக் கூடாது.
மசோதாவைத் திரும்பப் பெறுங்கள்!
ஜான் பிரிட்டாஸ்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
மாநிலங்களவை உறுப்பினர்
கடந்த ஆண்டு மட்டும் கிறித்தவர்கள் மீது கிட்டத்தட்ட 700 தாக்குதல்கள் நடந்தன. மணிப்பூரில் 200க்கும் மேற்பட்ட தேவாலயங்களை அவர்கள் எரித்தனர். இந்த மக்கள் கடந்த இரண்டு அல்லது மூன்று நாள்களாக திடீரென கிறித்தவர்கள், முனம்பம் (வக்ஃப் தொடர்பான கேரளõ விலுள்ள இடம்) பற்றி பேசத் தொடங்கியுள்ளனர். ஸ்டான் சுவாமியை நாம் மறக்க முடியுமா? பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், உதவியின்றி ஒரு சொட்டுத் தண்ணீர் கூட குடிக்க முடியாமல் கதறி அழுதார். அவர் சிறையில் சாகடிக்கப்பட்டார். கிரஹாம் ஸ்டெய்ன்ஸை நாம் மறக்க முடியுமா? அவர் தனது குழந்தைகளுடன் உயிருடன் எரிக்கப்பட்டார் அல்லவா? இன்றும் கூட தாக்குதல்கள் தொடர்கின்றன.
அண்மையில் நாம் ஒரு படம் குறித்துப் பேசினோம் எம்புரான். அந்தப் படத்தில் முன்னா என்று ஒரு கேரக்டர் இருக்கிறது. முன்னா யார் தெரியுமா? இங்கேயே பா.ஜ.க பெஞ்சில் இருக்கின்றவர்களைப் பார்க்கலாம். உங்கள் விஷத்தை எங்கள் மாநிலத்தில் இருந்து விலக்கி வைத்து விட்டோம். ஆமாம், ஒருத்தர் ஜெயித்து விட்டார். ஆனால் நேமம் அக்கவுண்ட்டை மூடிய மாதிரி, சீக்கிரமே இந்தக் கணக்கையும் மூடி விடுவோம். கேரளாவில் ஒரு தவறு நடந்து விட்டது. ஆனால் சீக்கிரமே சரி செய்து விடுவோம்.
இந்த மசோதாவை முன்வைக்கும்போது நீங்கள் ‘முனம்பம், முனம்பம்’ என்று திரும்பத் திரும்பச் சொல்கிறீர்கள். ஆனால் வடஇந்தியாவில், பல்லாயிரக்கணக்கான மக்களை இடம்பெயர்த்தீர்கள். மணிப்பூரில் 50,000க்கும் மேற்பட்டோர் இப்போது அகதிகளாக உள்ளனர். பலர் நாட்டை விட்டு வெளியேறிவிட்டனர். அவர்களைப் பற்றி உங்களிடம் எதுவும் சொல்ல முடியாது. நீங்கள் ஏராளமான தேவாலயங்களை அழித்தீர்கள். நீங்கள் எம்புரானைச் சேர்ந்த முன்னன். நீங்கள் உண்மையிலேயே இந்திய அரசியலமைப்பை நம்பினால், இந்த மசோதாவைத் திரும்பப் பெறுங்கள்.
தொகுப்பு : ரியாஸ் மொய்தீன்