மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அரசியல்

இந்த தேசவிரோதியின் போராட்டம் இன்னும் முடியவில்லை!
நடிகர் பிரகாஷ் ராஜ், மே 01 - 15, 2025


 


ஒரு சினிமா படப்பிடிப்பிற்காகத் தில்லிக்குச் சென்றிருந்தேன். என்னுடைய படப்பிடிப்பு இரவில் நடந்ததால், பகலில் நேரம் கிடைத்தது. தில்லி அப்போது கோடையில் தகித்துக் கொண்டிருந்தது. புதிதாக மாநில அரசாங்கம் தேர்வாகியிருந்தது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தில்லியில் இருந்தார்கள். இப்போது சட்டமாகியுள்ள, வக்ஃப் திருத்த மசோதாவால் நாடாளுமன்றம் கொந்தளித்துக் கொண்டிருந்தது. உமர் காலிதை நினைத்துக் கொண்டேன். அவர் சிறையிலடைக்கப்பட்டு ஐந்தாண்டுகள் ஆகப்போகிறது. திகார் சிறைக்குள் இருந்தபடி, இரக்கமற்ற இந்த வெப்பத்தை அவர் எப்படிச் சமாளித்துக் கொண்டிருப்பார்? என நினைத்தேன். அவருடைய பெற்றோரும் நினைவுக்கு வந்தார்கள். அவர்களின் வீட்டிற்குச் சென்று சந்திக்க உடனே புறப்பட்டேன்.தேச விரோதி எனப்படும் உமர் காலித்தை நீங்கள் அறிவீர்களா? அவரைப் பற்றி காண்பதற்கு முன் தேச விரோதி என்பவர் யாரென்று நாம் புரிந்துகொள்ள முயல்வோமா? அதைத் தெரிந்துகொள்ளாமல், தேச விரோதிக்கும், தேச பக்தருக்குமான வேறுபாட்டை எப்படிக் கண்டுகொள்ள முடியும்?

இதற்காக நாம் கடந்த காலத்திற்கு மிக அதிக காலம் பின் நோக்கிச் செல்ல வேண்டியதில்லை. அண்மைக்கால வரலாற்று உதாரணத்தைக் கவனிப்பதே போதுமானதுதான்.அஹிம்சையை நோக்கி, நாட்டை ஒற்றுமைப்படுத்திய மகாத்மா காந்தி, மதநல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தைத் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். தேசம் என்பது எல்லைக் கோடுகளால் ஆன ஒரு படம் அல்ல. அதில் வாழும் மக்களே என்றும் அவர் நம்பினார். நாட்டின் எல்லா மக்களும் தம் விருப்பத்திற்குரிய மதத்தைப் பின்பற்றும் உரிமை உள்ளது என்ற உறுதியான நம்பிக்கை அவருக்கு இருந்தது. அந்த மக்கள் எந்த மொழி பேசினாலும், எந்த மதத்தைச் சார்ந்திருந்தாலும், எந்தச் சாதியில் பிறந்திருந்தாலும், தேசம் அவர்களைச் சகோதர உறவில் பிணைக்கிறது என்றே அவர் நம்பினார்.  பிரிட்டிஷ்  இந்தியாவைச் சமாளித்து எதிர்கொண்ட அந்த மனிதர், சுதந்திர இந்தியாவில் அவரின் மேற்கண்ட கருத்துகளுக்காக நாதுராம் கோட்சே என்ற மத அடிப்படைவாதியால் கொல்லப்பட்டார் என்பதுதான் முரண் நகை.

நமது நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்த நாள் முதலே, காந்தி தேச விரோதியாகவும், கோட்சே தேச பக்தராகவும் மாறிவிட்டார். சமூகத்தைப் பிளவுக்குள்ளாக்கவும், மத அடிப்படையில் வெறுப்பை விதைப் பதையுமே தம் வரலாற்றுத் திட்டமாகக் கொண்ட நபர்கள் தம்மைத் தேச பக்தர்களாக முன்னிருத்துகிறார்கள். தேச பக்தர்களாகச் சுய பிரகடனம் செய்துகொள்ளும் இந்த நபர்கள் தம்முடைய வகுப்புவாதத் திட்டத்தை எதிர்த்து நிற்கும் எவரையும் தேச விரோதிகள் என்ற முத்திரையைக் குத்துகிறார்கள். இப்படித்தாம் நம் காலத்தின் பிரகாசமான உள்ளம் கொண்டதொரு இளைஞர் உமர் காலித், தேச விரோதியாக மாற்றப்பட்டார்.

வழக்கின் நிலை என்ன?

உமர் காலித் செய்த குற்றங்கள்தான் என்ன? பன்முகத்தன்மையைத் தமது இதயத் துடிப்பாகவும், ஆன்மாவாகவும் கொண்டுள்ளதாக நம்பப்படும் நமது அரசிய லமைப்பினை அழிக்க முயற்சிப்போருக்கு எதிராகச் சண்டையிட்டது. சிறுபான்மை சமூகங்களை ஒடுக்கும் ஆட்சியாளர்களுக்கு எதிராக முழங்கியது. இனவாத வெறுப்பைப் பரப்பி, அரசியல் நோக்கங்களுக்காக அப்பாவிகளைப்  பலியெடுப்போருக்கு எதிராகத் தெருவில் இறங்கியது. ஒரு மீன் தன் உயிரை இழந்த பின்னரும் ஆற்றின் போக்கில் மிதந்துகொண்டே பயணிக்கும். நீரோட்டத்தை எதிர்த்து முன்னேற மீன்களுக்கு உயிர் இருக்க வேண்டும், உமர் காலித் போல! பொய்களும், வெறுப்பும் வெள்ளöமனப் பாய்ந்துகொண்டிருக்க, அவற்றுக்கு எதிராக அவர் அச்சமின்று நீச்சலிடுகிறார். காந்தியத்தின் உண்மையான வாரிசுகளிடம் இதைத் தவிர குறைவாக எதிர்பார்க்க முடியுமா? ‘எதேச்சதிகாரத்தை எதிர்த்து நாங்கள் மட்டுமே இந்தப் போராட்டத்தை தொடங்கிடவில்லை, எங்களைக் கொல்வதால் இந்த போராட்டம் முடிவுக்கு வந்துவிடாது’ என்று பகத் சிங் கூறினார். அந்த மரபைத்தான் உமர் காலித் சுமந்துகொண்டுள்ளார்.

மாணவர் தலைவர் என்ற முறையில், உமர் காலித் குடியுரிமை திருத்தச் சட்டம் 2019க்கு எதிராகக் கடுமையாகப் போராடினார். இஅஅ சட்டம் நமது நாட்டை பிளவுபடுத்துவதையும், சகோதரத்துவத்தை அழிப்பதையும் நோக்கமாகக் கொண்டது. முஸ்லிம்களுக்குக் குடியுரிமை மறுப்பதை நோக்கமாகக் கொண்ட இந்தச் சட்டத்திற்கு எதிராக பிப்ரவரி 2020, தலைநகர் தில்லி போராட்டங்களில் ஈடுபட்டது. சட்டத்தை ஆதரிப்போரும் இந்தக் களத்தில் நுழைந்ததைத் தொடர்ந்து, நிகழ்வுப் போக்குகள் வன்முறையாகின. அமைதியாக நடந்த இஅஅ எதிர்ப்புப் போராட்டங்கள் சீர் குலைக்கப்பட்டன. கும்பல் வன்முறை நடந் தது. இந்த வன்முறைகளில் கொல்லப்பட்ட 53 பேரில் பெரும்பாலோர் முஸ்லிம்கள்.

கும்பல் வன்முறையைத் தூண்டிய ஆளும் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து சுதந்திரமாகச் சுற்றித் திரிகிறார்கள். ஆனால் கும்பல் வன்முøறயைத் தூண்டிய குற்றச்சாட்டில், சட்ட விரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தின் (UAPA) கீழ் அரசாங்கத்தால் கைது செய்யப்பட்டார் உமர் காலித். அவருடைய ஜாமீன் மனுக்களை அமர்வு நீதிமன்றமும், தில்லி உயர் நீதிமன்றமும் நிராகரித்துள்ளன. 2023ஆம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஜாமீன் மனு இன்னும் நிலுவையில் உள்ளது. குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை, விசாரணை கூட நடக்கவில்லை. ஆனால் குற்றம் சாட்டப் பட்ட ஒருவர் ஐந்து ஆண்டுகளாகச் சிறை வைக்கப்பட்டிருப்பது, அந்த அளவிலேயே சட்டவிரோதமானது, மனித உரிமைகளுக்கு எதிரானது.

‘உமர் காலித் நிரபராதியே என்று நிரூபிக்க உச்ச நீதிமன்றத்தில் இருபது நிமிட விசாரணை மட்டுமே எங்களுக்குத் தேவை’ என்று அவரது வழக்கறிஞர்கள் கூறுகின்றனர். ஆனால் உச்ச நீதிமன்றத்தில், 2023 முதல் இப்போது வரை, அவரின் ஜாமீன் மனுவை விசாரிக்க அந்த 20 நிமிடங்களை ஒதுக்க முடியவில்லை. உமர் காலிதின் வீட்டிற்குச் செல்லும் வழியில் அவரது நண்பர்கள் சிலர் என்னுடன் சேர்ந்து கொண்டனர். ஒவ்வொரு வாரமும், சிறையில் உமரை அவர்கள் தவறாமல் சந்திப்பதாக என்னிடம் கூறப்பட்டது. ‘வேலை நெருக்கடியான சூழலில் அதற்கு எப்படி நேரம் ஒதுக்குகிறீர்கள்?’ என்று நான் கேட்டேன். உமரின் நண்பர், சிறையில் இருந்த அமீர் என்பவரின் கதையை என்னிடம் கூறினார். அமீர் சிறையில் அடைக்கப்பட்ட முதல் மூன்று மாதங்களில், அவரது பெற்றோர்களும் நண்பர்களும் அடிக்கடி வருகை தந்தனர். அவர்களுடைய வறுமையும், வாழ்க்கைச் சிக்கல்களும் காரணமாக அமீரின் வலிமையைச் சிதைத்தன, மெல்ல மெல்ல உடையத் தொடங்கினார். எளிதாக ஜாமீன் பெற்றிருக்க முடியும் என்றாலும், அவர் 10 ஆண்டுகள் சிறையில் வாடினார்.

அன்புக்குரியவர்களிடமிருந்து பிரிவின் வலி ஒருபுறம் இருக்க, சிறை ஒரு நபரின் தன்னம்பிக்கையைச் சிதைத்து, மனித ஆன்மாவை உடைக்கிறது. அமீரின் துயர அனுபவமே உமரின் நண்பர்கள் ஒவ்வொரு வாரமும் அவரைச் சந்திக்க வேண்டும் என்ற உறுதியை வலுப்படுத்தியது. ஒவ்வொரு சந்திப்பின் போதும் ‘நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்’  என்று சொல்ல அவர்கள் மாறி மாறி உமரைச் சந்திப்பதை வழக்க மாகக் கொண்டுள்ளனர். தங்கள் தோழனுடைய உள வலிமையை,  இரக்கமற்ற சூழ்நிலையின் தாக்குதலில் இருந்து பாதுகாக்கும் இந்த இளைஞர்களைக் கண்டு நான் பெருமிதமும் நெகிழ்ச்சியும் அடைந்தேன். உமரின் தாயார் என்னை அன்புடன்  வரவேற்றார். அவரது தந்தை வக்ஃப் (திருத்த) மசோதா மீதான விவாதத்திற்குச் சென்றிருந்தார். விரைவில் திரும்புவார் என்றனர். பெருநாள் முடிந்து சில நாள்கள் ஆகியிருந்தது. தாயார் எங்களுக்கு இனிப்புகளைக் கொண்டு வந்து புன்னகையுடன் பரிமாறினார், அதே நேரத்தில் மகன் இல்லாத வலி அவரின் கண்களில் ஆழமாகப் பதுங்கியிருந்தது. ‘என் மகன் விரைவில் விடுதலையாவான். நீதித்துறை மீது எங்களுக்கு நிறைய நம்பிக்கை உள்ளது’ என்றபடி எங்களுக்கு ஆறுதல் கூறும் வகையில் அவர் சொன்ன வார்த்தைகள் என் கண்களில் கண்ணீரை வரவழைத்தன.

இதற்கிடையில், திரும்பி வந்த உமரின் தந்தை, தேநீர் தயாரித்து, எங்களுக்குப் பரி மாறியபடி எங்களோடு அமர்ந்து பேசினார். நான் அவரிடம், ‘உங்கள் மகன் தனியாக இல்லை. நாங்கள் அவருடன் இருக்கிறோம்’ என்று சொன்னேன்.‘அவர் எந்தக் காரணத்திற்காகப் போராடி சிறைக்குச் சென்றார் என்பதை நாங்கள் அறிவோம். நாங்களும் அவருடன் இருக்கிறோம்’ என்று அவர் எங்களிடம் சொன்னார். நான் நெகிழ்ந்து போனேன். உமரின் நண்பர் ஒருவர் உமரின் தந்தையிடம், ‘பாபா, உமர் ஜாமீனில் வெளியே வந்ததும், அவரை பிரகாஷ் சாருடன் தென்னிந்தியாவுக்கு அனுப்புவோம். அங்கு அவர் பாதுகாப்பாக இருப்பார்’ என்றார். உமரின் தந்தை இறுக்கமான பார்வையுடன், ‘அவர் முன்னெடுத்த சண்டைக்கான காரணிகள் இங்கே தில்லியில் உள்ளது. வேறு எங்காவது போய் ஏன் அவர் அமைதியாக உட்கார்ந்திருக்க  வேண்டும்?’  என்று கேட்டார். அவ்வளவுதான். நாம்  உயிருடன்  இருக்கிறோம் என்பதற்குப் போராட்டமே சான்று. மதிப்புமிக்க வாழ்க்கையை வாழ்வதற்கு நாம் போராட வேண்டும். உயிருடன் இறந்து கிடப்பதால் என்ன பயன்?

மக்களும், உரிமைகளும்

உமர் காலிதும், அவரது பெற்றோர்களும்தான் உண்மையான தேசபக்தர்கள் என்பதற்கு வரலாறு சாட்சியாக இருக்கும். உமர் காலித் என்ற ஒரு நபர் மட்டும் ஐந்து ஆண்டுகளாகச் சிறையில் வாடவில்லை. அது ஒவ்வொரு குடிமகனின் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையும் வாடுகிறது; நம் மதிப்புமிக்க வாழ்க்கைக்காக உரிமையும், அதை உறுதி செய்திடும் அரசியல மைப்பும் சிறையில் வாடுகிறது.

தமிழில் : இரா.சிந்தன்
நன்றி: THE HINDU


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தலையங்கம்

மேலும் தேடல்