பயணங்கள் பலவிதம். ஒவ்வொன்றும் ஒருவிதம். கல்வி, வணிகம், மருத்துவம், விளையாட்டு, வேலைவாய்ப்பு, சுற்றுலா, உறவுகள், நண்பர்களைத் தேடிய பயணம் என்று பல காரணங்களுக்காக மனிதன் பயணம் செய்கின்றான். ஆனால் ஒரு பயணம் இறைவனின் கட்டளைக்காக, அவனது அழைப்பை ஏற்று மேற்கொள்ளப்படும். அதுதான் ஹஜ் புனிதப் பயணம்.
இறைவன் அழைக்கின்றான். ‘ஹஜ் செய்திட மக்களுக்குப் பொது அறிவிப்பு செய்வீராக!’(திருக்குர்ஆன் 22:27). ஹஜ் ஒரு வித்தியாசமான நீண்ட பயணம். உடல், பொருள், வலிமையுடன் மேற்கொள்ளப்படும் ஒரு வணக்கம். உலக முஸ்லிம்களின் ஒன்றுகூடல். சுமார் 25 முதல் 30 இலட்சம் முஸ்லிம்கள் உலகின் எல்லா திசைகளில் இருந்தும், நாடுகளில் இருந்தும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் ஒன்று சேரும் ஆன்மிக மாநாடு.
இஸ்லாம் ஒரு வாழ்க்கை நெறி. அதில் அன்றாட வணக்கமாக ஐவேளைத் தொழுகை, அறநெறி வாழ்க்கைக்குப் பயிற்சியாக ஆண்டுக்கு ஒருமாத கால நோன்பு, பொருள் சார்ந்த வணக்கமாக ஆண்டுக்கு ஒருமுறை ஜகாத் ஆகியவை கடைப்பிடிக்கப்படுகிறது. வசதி படைத்தோர் ஆயுளில் ஒருமுறை மேற்கொள்ளவேண்டிய வணக்கமாக ஹஜ் எனும் புனிதப் பயணம் அமைந்துள்ளது. இவ்வாறான வணக்கங்கள் வெறும் சடங்குகள் அல்ல. வாழ்க்கைக்கு வழிகாட்டும் பயிற்சிப் பாசறையாக உள்ளன. பல கோணங்களில் ஹஜ் என்ற இபாதத் பிற வணக்க வழிபாடுகளில் இருந்து மாறுபடுகிறது.
* நீண்ட காலம் * செல்வம், ஆரோக்கியம் இரண்டுமே தேவை * உலக முஸ்லிம்களின் ஒன்று கூடல் * சகோதரத்துவத்தின் சங்கமம் * இஹ்ராம் எனும் வெள்ளைச் சீருடை * மொழி, இனம், நிறம், எல்லைகளைத் தாண்டி இறைவனின் அழைப்பை ஏற்று வந்துள்ள இறைவனின் விருந்தினர்கள் * ஓரிறை, ஓர் மறை, ஒரே வேதத்தை ஏற்றுக் கொண்ட உத்தம நபியின் உம்மத்துக்களின் ஒன்றிணைவு.
இறை இல்லம் கஅபா
ஒரே இறைவனை வணங்குவதற்காக இந்த அவனியில் நிறுவப்பட்ட முதல் இறைஇல்லம் புனித கஅபா. உலகெங்கும் வாழும் முஸ்லிம்கள் தமது ஐங்காலத் தொழுகையில் முன்னோக்கும் முதன்மை ஆலயம். நாம் இறந்தாலும் மண்ணறையில் வைக்கப்படும்போது நமது முகம் கஅபாவை முன்னோக்கியவாறுதான் அடக்கம் செய்யப்படுகின்றது. கஅபா ஒரு ஆலயம் என்றாலும் அதனை தனது இல்லம் என்று வல்ல இறைவன் குறிப்பிட்டு அதனை மகத்துவப்படுத்து கின்றான். அதை நோக்கி வந்து இபாதத் செய்யும் தன் அடியார்களைத் தனது விருந்தினர்கள் என்று கூறி சங்கைப்படுத்துகின்றான்.
‘லப்பைக் அல்லாஹும்ம லப்பைக்’(வந்துவிட்டேன் இறைவா வந்துவிட்டேன்) என்ற ஒற்றை முழக்கத்துடன் அனைத்து ஹாஜிகளும் சங்கமிக்கும் அற்புதமான நிகழ்வு. ‘இறைவா! இதோ வந்து விட்டேன். இறைவா! இதோ வந்து விட்டேன் நிச்சயமாக புகழும், அருளும், அருட்கொடைகளும், ஆட்சியும், அதிகாரமும் உனக்கே உரியது. உனக்கு இணை யாருமில்லை.’ ஹாஜிகள் தொடர்ந்து மொழிந்து உள்ளத்தில் பதிவு செய்யும் மாபெரும் முழக்கம் இது.
அபூஹுரைரா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘ஒருவர் தாம்பத்திய உறவை மேற்கொள்ளாமலும், தீய பேச்சுகளைப் பேசா மலும் ஹஜ் செய்தால் அவர் அன்று பிறந்த பாலகனைப் போல திரும்புகின்றார்’ என்று அண்ணல் நபி(ஸல்) அவர்கள் மொழிந்தார்கள். (முஸ்லிம்)
‘ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்கான கூலி சொர்க்கத்தைத் தவிர வேறில்லை’ என்ற சுபச்செய்தியை நபி(ஸல்) நவின்றார்கள்.
தயாரிப்பும் கவனமும்
ஹஜ்ஜுக்கான முன்னேற்பாடுகளும், தயாரிப்புகளும் மிகுந்த கவனத்துடன் பல நாள்களுக்கு முன்னரே மேற்கொள்ளப்படுகின்றது. பயண ஏற்பாடுகள், மருந்து மாத்திரைகள், அன்னியச் செலாவணி, உணவு, தங்குமிட ஏற்பாடுகள் என்று பட்டியல் நீள்கிறது. என்றாலும் அல்லாஹ் கூறும் முக்கிய வழித்துணைச் சாதனம் வேறாக இருக்கிறது. ‘நீங்கள் ஹஜ்ஜுக்கான வழித்துணைச் சாதனங்களைக் கொண்டு செல்லுங்கள். உண்மை யாதெனில் வழித் துணைச் சாதனங்களில் எல்லாம் மிக மேலானது இறையச்சம்(தக்வா) தான்.எனவே நல்லறிவுடையோரே! எனக்கு மாறு செய்யும் போக்கிலிருந்து விலகி வாழுங்கள்.’ (திருக்குர்ஆன் 2:197)
ஹாஜிகளின் கவனம் ஹஜ்ஜின் கிரியைகளின் மீது இருப்பதுபோல அதன் மூலம் பெறப்படும் பயிற்சி, படிப்பினைகள் மீதும் இருக்க வேண்டும். கிரியைகளும் படிப்பினைகளும் நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றவை. ஒன்று உடல் என்றால் மற்றது உயிர். எனவே நமது ஹஜ் எனும் பெரும்கடமை இந்த இரண்டு அம்சங்களும் இருந்தால்தான் முழுமை பெறும். நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மொழிந்ததாக அன்னை ஆயிஷா(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘கஅபாவை தவாப் செய்வது, ஸஃபா மர்வா இரு குன்றுகளுக்கு இடையே ஸயீ செய்வதும், ஜம்ராத்துக்களில் கல் எறிவதும் அல்லாஹ்வை நினைவு கூரும் நோக்கத்துக்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது’.(அபூதாவூத், திர்மிதி)
‘அவர்களுக்காக அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள நன்மைகளை அவர்கள் காணட்டும்’ என்று அல்லாஹ் கூறுகின்றான். ஹஜ் என்பது ஃபிக்ஹு சட்டங்களின், கிரியைகளின் தொகுப்பு மட்டுமே அல்ல. மாறாக ஒவ்வொரு நிலையிலும் சிந்தித்து மாற்றம், முன்னேற்றம் பெறும் பயிலரங்கு ஆகும். ஹாஜிகளுக்கு திருக்குர்ஆன் தரும் முதன்மைப் போதனை ‘அல்லாஹ்வின் உவப்பைப் பெற ஹஜ்ஜையும் உம்ராவையும் நிறைவேற்றுங்கள்’ என்பதேயாகும். எண்ணத்தூய்மை, இறைஉவப்பு ஆகிய உயர் பண்புகளே இங்கு வேண்டப்படுவது ஆகும். இவை இல்லை என்றால் என்ன பலன் கிடைத்து விடும்?
படைத்த இறைவனுக்கு முன்னால் உண்மையான அடியானாக முழுமையாக சரணடைவதுதான் ஹஜ் ஆகும். வீண் பேச்சு, சச்சரவுகளில் ஈடுபடாமல் இறைநினைவு, திக்ர், பிரார்த்தனை, பாவமன்னிப்பு போன்ற ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடவேண்டும். அரபா தினத்தில் அதிகமாக நாம் பாவமன்னிப்புக் கோர வேண்டும். இறைதிருப்தியையும் அவனதுஅன்பையும், கருணையையும், அருளையும் வேண்டுவதுதான் நமது ஒற்றை இலக்காக இருக்கவேண்டும். ஈருலகிலும் வெற்றி, சுவன நற்பேறு பெறுவதற்கு தளராமல் நமது முயற்சிகளைத் தொடர வேண்டும்.
கஅபா, ஸஃபா, மர்வா, ஜம்ஜம், மகாமே இப்ராஹீம், ஜம்ராத், ஜபல் அர்ரஹ்மா, முஸ்தலிபா, அரபா, மினா அனைத்தும் இறைவனின் புனிதச் சின்னங்கள் ஆகும். யாரேனும் அல்லாஹ் ஏற்படுத்திய புனிதச் சின்னங்களுக்குக் கண்ணியம் அளிப்பாரா யின், திண்ணமாக அது இதயத்தில் உள்ள இறை அச்சத்தால் விளைவதாகும் என்கிறது அருள்மறைக் குர்ஆன்.
இறைவன் அளித்த இந்தப் புனிதச் சின்னங்களின் பின்னணியில் ஓர் இறையச்சமுள்ள குடும்பத்தின் தியாகம், அர்ப்பணிப்பு, இலட்சியம் ஆகிய அம்சங்கள் இருப்பதை ஹாஜிகள் நினைவில் கொள்ளவேண்டும்.
தந்தை இப்ராஹீம்(அலை) அவர்களும் தனயன் இஸ்மாயீல்(அலை) அவர்களும் இணைந்து ஏகத்துவத்தின் கோட்டையான கஅபாவை நிர்மாணம் செய்கின்றார்கள். அன்னை ஹாஜிரா(அலை) அவர்களின் தவக்குல் ஸஃபா மர்வா குன்றுகளுக்கு மத்தியிலான தொங்கோட்டம் மூலமாக நினைவூட்டப்படுகின்றது. ஜம்ஜம் நீர் மூலமாக ஒரு முஸ்லிமின் இறைநம்பிக்கை வீணாகி விடாது என்ற பாடத்தை நாம் பெறுகின்றோம்.
சத்திய அசத்திய சக்திகளுக்கு மத்தியிலான போராட்டத்தில் சாத்தானிய சக்திகளுக்கு இடம் தந்து விடக்கூடாது என்ற பாடத்தை ஜம்ராத் நமக்குத் தருகின்றது. இறை வழிகாட்டல் பெற்ற குடும்பம் என்றுமே வெற்றி பெறும் என்ற பாடத்தை இந்தப் புனிதச் சின்னங்கள் பறைசாற்றி நிற்கின்றன.
ஹஜ் தொடக்கம் முதல் இறுதிவரை புத்துணர்வுப் பயிற்சி தரும் ஓர் உயரிய வணக்கம் ஆகும். ஏகத்துவக் கொள்கையில் நிலைத்து இருந்து தீனை நிலைநாட்டுவது அந்தப் பயிற்சியின் வெளிப்பாடு ஆகும். இறைவனைச் சார்ந்து வாழும் வாழ்க்கைக்கும், இறையச்சமுடன் பேணுதலாய் வாழும் வாழ்க்கைக்கும் வழி காட்டும் உன்னதப் பயணம் புனித ஹஜ் என்றால் மிகையில்லை.
இப்ராஹீம்(அலை), அவர்களுடைய குடும்பத்தாரின் தியாக வாழ்க்கையை ஹஜ் கிரியைகள் மூலம் நாம் நினைவுப்படுத்திக் கொள்கின்றோம். நமது வாழ்விலும் அத்தகைய தியாகங்களை மேற்கொள்ள நாம் சித்தமாக இருக்கவேண்டும். ஏனெனில் தியாகம் இல்லாமல் வெற்றி இல்லை.