மருதாணி போட்டுச் சிவந்த வளைக்கரங்கள் போர் விமானங்களை இயக்கப் போகிறது.
புனே தேசிய பாதுகாப்பு அகாடமியில் பயிற்சிக்குப் பின் பணியில் சேரும்போது இந்தியாவின் முதல் முஸ்லிம் பெண் போர் விமானி, உத்தரப்பிரதேச மாநில அளவில் முதல் பெண் போர் விமானி எனும் பெருமையும் சிறப்பும் சானியா மிர்ஸாவுக்குக் கிடைக்கும்.
உத்தரப்பிரதேசம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள குக்கிராமங்களில் ஒன்றான ஜஸோஸ்வார் பகுதியைச் சேர்ந்த ஏழை டி.வி மெக்கானிக் ஷாஹித் அலீயின் மகள் சானியா மிர்ஸா.
சொந்த ஊரிலுள்ள கிராமப்புற பள்ளியில் ஹிந்தி மீடியத்தில் பயின்ற சானியா மிர்சா +2 தேர்வில் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றார்.
சிறு வயதிலேயே விமானம் இயக்க வேண்டும் எனும் மகளின் எண்ணத்தை நிறைவேற்ற விரும்பிய ஷாஹித் அலீ ஏவியேஷன் பயிற்சி மையத்திற்கு மகளை அனுப்பிப் படிக்க வைத்தார்.
இந்திய விமானப்படைக்கு விமானிகளை நியமிக்க நடைபெற்ற தேர்வில் கலந்து கொண்டு தேர்வு எழுதிய சானியா மிர்ஸா முதல் முயற்சியில் தோல்வியைத் தழுவினார். பின்னர் 2022ஆம் ஆண்டு மீண்டும் தேர்வெழுதி 149ஆவது தரத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
19 பெண்கள் உட்பட 400 பேர் விமானப்படைக்கு தேசிய அளவில் தேர்வு செய்யப்பட்டனர். குறிப்பாக போர் விமானங்களை இயக்க தகுதிபெற்ற இரண்டு பெண்களில் ஒருவர் சானியா மிர்ஸா என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.