Rethinking Affirmative Action for Muslims in Contemporary India என்ற தலைப்பில் இந்தியாவில் இஸ்லாமியர்களின் நிலை குறித்த புதிய அறிக்கை வெளியாகியுள்ளது. இந்தியாவில் இதுவரை செயல்படுத்தப்பட்டுள்ள இஸ்லாமியர்களுக்கான திட்டங்கள், கல்வி, வேலை வாய்ப்பில் பின்தங்கிய நிலையைப் போக்குவதற்கான நடவடிக்கைகளை அந்த அறிக்கை விவரிக்கிறது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில் இஸ்லாமியர்களின் பின் தங்கிய நிலையைப் போக்கு வதற்கான பரிந்துரைகளை வழங்க சில குழுக்கள் நியமிக்கப்பட்டன. 2006இல் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங் சிறுபான்மையினருக்கான திட்டங்கள், கொள்கைகளை உள்ளடக்கிய 15 அம்ச திட்டத்தை முன்வைத்தார். மத்திய சிறுபான்மை நலத்துறை என்ற புதிய அமைச்சகம் உருவாக்கப்பட்டது. சிறுபான்மையினர் முன்னேற்றத்துக்கான பல திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன.
2014இல் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற முழக்கத்துடன் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற மோடி தலைமையிலான பாஜக அரசில், இஸ்லாமியர்களின் பின்தங்கிய நிலையை அகற்றுவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. இந்த நிலையைச் சரி செய்து இந்திய இஸ்லாமியர்களின் நிலையை மேம்படுத்த, இந்த அறிக்கையை வெளியிட்டவர்கள் ஏழு பரிந்துரைகளை முன்வைக்கின்றனர். பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் இஸ்லாமியர்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்கும் நடைமுறை கைவிடப்பட வேண்டும். மாறாக, பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு அனைத்து மதங்களிலும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளவர்களை உள்ளடக்கியதாக மாற்றப்பட வேண்டும். பட்டியல் சாதியினருக்கான இடஒதுக்கீடு இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும். இட ஒதுக்கீட்டுக்கான 50 விழுக்காடு உச்ச வரம்பு மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் பட்டியலில் மேலும் சில சமூகங்களை இணைக்க இடம் அளிக்கப்பட வேண்டும். மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள 112 மாவட்டங்களை மேம்படுத்துவதற்கான நிதி ஆயோக்கின் திட்டத்தில் சிறுபான்மையினர் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் மாவட்டங்கள் இணைக்கப்பட வேண்டும். இஸ்லாமியர்கள் அதிக எண்ணிக்கையில் ஈடுபடும் வேலைகளில் உள்ள பிரச்னைகளைக் களைவதற்கான கொள்கை வகுக்கப்பட வேண்டும்.
New report on the status of Muslims in India Muslims எக்ஸ் தளம் இஸ்லாமிய சமூக நல அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் ஆகியவற்றை வலுப்படுத்து வதில் கவனம் செலுத்தப்பட வேண்டும்.
டெல்லியில் உள்ள Centre for the Study of Developing Societiesஐச் சேர்ந்த அஹ்மத், ஆலம், Policy Perspectives Foundationஐச் சேர்ந்த பர்வீன் ஆகியோர் இந்த அறிக்கையை தயாரித்துள்ளனர். அமெரிக்காவின் வாஷிங்டன் டிசியில் உள்ள இந்தோ அமெரிக்கக் கொள்கை மையத்தின் முன்னெடுப்பான இந்த அறிக்கை, ஹைதராபாத்தில் உள்ள Centre for Development Policy and Practice என்ற அமைப்பால் வெளியிடப்பட்டுள்ளது.