உலகம் முழுவதும் அதிகரித்து வரும் காலநிலை மாற்றம், சுற்றுச்சூழல் பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு சவூதி அரேபியா அரசு விஷன் 2030இன் ஒரு பகுதியாக இந்த ஆண்டு முதல் ‘பசுமை ஹஜ்’ என்று அறிவித்துள்ளனர்.
சவூதி அரேபியா ஹஜ் விவகாரங்கள் துறை சார்பில் இதற்கான விழிப்பு உணர்வு பரப்புரை செய்து வருகின்றனர். ஆண்டுதோறும் அதிகரித்து வரும் தண்ணீர், மின்சார தேவையைப் பசுமை ஹஜ் திட்டத்தால் பெருமளவு குறைப்பதன் மூலம் ECO Friendly Hajj ஆக மாற்ற முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
ஒருமுறை உபயோகித்துத் தூக்கி எறியும் பொருட்களைத் தவிர்க்கவும், தண்ணீர் பாட்டில் ஷாப்பிங் பைகள் உட்பட மீண்டும் உபயோகப்படுத்தும் வகையிலான பொருட்களைப் பயன்படுத்தவும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கருதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்னணு உபகரணங்கள் சூரிய ஒளியில் இயங்கும் பொருட்களை உபயோகப்படுத்தவும், பெட்ரோல் டீசலில் இயங்கும் வாகனப் போக்குவரத்து தவிர்த்து மின்சார பேட்டரியில் இயங்கும் வாகனங்களைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்கா மதீனா புனித நகரங்களில் சாலை போக்குவரத்து தவிர்த்து ஹரமைன் அதிவிரைவு ரயில் சேவையை ஹஜ் பயணிகள் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு 2024 ஹஜ்ஜின் போது வெப்ப அலை தாக்குதலில் 1300 பேர் மரணமடைந்த நிலையில் ஹஜ் பயணம் வருபவர்கள் நவீன வடிவமைப்பு கொண்ட குளிரும் தன்மையுடன் கூடிய இஹ்ராம் ஆடை அணிவதன் மூலம் வெப்பநிலை மாற்றங்களிலிருந்து பாதுகாக்க முடியும்.
‘ஹஜ் கடமைகள் முடிந்து திரும்பும் ஒவ்வொருவரும் சவூதியில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு மரம் நடுதல் அல்லது ஊருக்குச் சென்று சேர்ந்து ஒரு மரம் நடுவது பசுமை ஹஜ்ஜின் மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மகத்தான பங்களிப்பாக அமையும்’ என்றும் வலியுறுத்தியுள்ளார்கள்.