கேரள மாநிலம் பாலக்காட்டின் பலப்புரத்தைச் சேர்ந்த 29 வயதான தடகள வீரர் முஹம்மது அப்சல் புலிக்கலகாத் ஜூலை 5ஆம் நாள் போலந்தின் போஸ்னானில் உள்ள Memoriał Czesława Cybulskiegoவில் நடந்த பந்தயத்தில் ஆறாவது இடத்தைப் பிடித்தார். ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தை 1 நிமிடம் 45 வினாடிகளுக்குள் ஓடி புதிய தேசிய சாதனையைப் படைத்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
இந்த ஆண்டுத் தொடக்கத்தில் துபாயில் நடந்த UAE தடகள கிராண்ட் பிரிக்ஸில் அவர் படைத்த 1:45.61 என்ற தனது சொந்த தேசிய சாதனையை முறியடித்தார்.
‘1:45 வினாடிகளில் ஓடுவது ஒரு கனவாக இருந்தது. இறுதியாக அதை இவ்வளவு வலுவான களத்தில் செய்வது மிகவும் சிறப்பானதாக இருந்தது. இது வெறும் ஆரம்பம் தான்’ என்று பந்தயத்திற்குப் பிறகு அப்சல் கூறினார்.
பந்தயத்தில் முதல் மூன்று இடங்களைப் போலந்து ஓட்டப்பந்தய வீரர்கள் பிடித்தனர். மேசியல் வைடெர்கா ஹீட் போட்டியில் 1:44.23 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இது அவரது தனிப்பட்ட சிறந்த சாதனையாகும்.
இந்திய விமானப்படையில் படிப்படியாகத் தரவரிசையில் முன்னேறி ஜூனியர் வாரண்ட் அதிகாரியான அப்சல், பெங்களூருவில் உள்ள ரிலையன்ஸ் அறக்கட்டளை மூலம் பயிற்சி பெற்று வருகிறார். 2013ஆம் ஆண்டு முதல் ஆசிய பள்ளி தடகள சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்றதிலிருந்து இந்திய நடுத்தர தூர ஓட்டத்தில் அவர் தரவரிசையில் உயர்ந்து வருகிறார்.
2019ஆம் ஆண்டு நேபாளத்தில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளிலும், 2022ஆம் ஆண்டு சீனாவின் ஹாங்சோவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும் வெள்ளிப் பதக்கங்களை வென்று அப்சல் சாதனை படைத்துள்ளார்.
‘இந்தச் சாதனை என்னுடையது மட்டுமல்ல, இது என்னை நம்பிய அனைவருக்கும் சொந்தமானது’ என மனம் மகிழும் அப்சல் இன்னும் பல வெற்றிகளைப் பெற வாழ்த்துகள்.