ஆராரோ பாட்டுப்பாடி
தாலாட்டிய போதே
வாழ்க்கையின் தத்துவத்தை
வாகாய் கற்றுத்தந்தவள் நீ
பாலூட்டிச் சீராட்டும் போதே
பண்புநலன்கள் அனைத்தையும்
பாச நேசங்களையும்
பாங்காய் புகட்டியவள் நீ
பாவப்பழிகளுக்கு ஆளாகாமல்
கள்ளப் பிழைப்புக்குப் போகாமல்
நீதி நெறிகளை இம்மியும் தவறாமல்
பேணுதலாய் வாழப் பயிற்றுவித்தவள் நீ
கால நேரங்களைப் பாராமல்
கணக்கு வழக்குகளை நோக்காமல்
கடமைகளைக் கருத்தாய் ஆற்றிட
கண்டிப்புடன் கற்பித்துப் பழக்கியவள் நீ
ஈட்டிய பொருளைப் பூட்டி வைக்காமல்
ஈந்து உவக்கும் ஈகைக் குணத்தை
வளர் இளம் பருவத்திலேயே
இனிதாய் ஊட்டி வளர்த்தவள் நீ
சக மனித சகவாசத் தாரகமாய்
சகோதரத்துவ வாஞ்சையை
சுவாசக் காற்றென உட்கொள்ள
நாசிக்கு நற்துளை இட்டவள் நீ
உன் வழிகாட்டுதலும் போதனைகளும்
நான் நேரிய நல்வழியில் சென்றிட
வழித்துணையாய் திகழ்கின்றன
நல்லொளியையும் தந்து உதவுகின்றன
நான் உனக்குச் செய்யும் மரியாதை
நீ வகுத்தளித்த வழித்தடத்தில்
இடராது பிறழாது செல்வதன்றி
வேறொன்றில்லை தாயே..!
ஆயுள் தண்டனைக் கைதி எண் : 10662
மத்திய சிறை, கோவை 641 018