மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • அன்பிற்குரிய சமரசத்தின் டிஜிட்டல் வாசகர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு:
  • இதுநாள் வரைக்கும் சமரசத்தின் இணையத்தில் முற்றிலும் இலவசமாக நீங்கள் வாசித்து வந்தீர்கள். ஆனால் வருகின்ற ஏப்ரல் மாதத்திலிருந்து டிஜிட்டல் வாசிப்பிற்கான கட்டணத்தை நிர்ணயம் செய்ய சமரசம் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. விவரங்கள் விரைவாய் அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்.
  • ஆகவே, இன்றுபோல் என்றும் ஒத்துழைப்பு வழங்க அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.

கவிதை

தண்ணீர்ச் சிறைகள்
ராஜகம்பீரன், டிசம்பர் 1-15 2022


நிலத்தின் முந்தானையாய்
நீண்டிருக்கும்
கடல்கூட
தன் எல்லையைத் தாண்டி
ஊருக்குள் வருவதில்லை


உயரத்தில் இருந்து
ஊர்வலமாய் வருகின்ற மழை
இந்த மாநகரத்தை
தண்ணீரால் சிறைப்படுத்தி விட்டது


மழை
இசைக்கத் தொடங்கும்போது
அதன் பாடலில்
மலரத் தொடங்குகின்றன
பெயர் சூட்டப்படாத மலர்கள்


பூமிக்கும் மழைக்கும்
பிறந்த பிள்ளைகள்
தாவரங்களாகி விட்டன. அதன்
கட்டுக்கு அடங்காத பிள்ளைகள்
காடுகளாகி விட்டன


காற்றோடு மழை கலந்து விட்டால்
தூறல்களில் தோன்றுகின்றன
வானவில்கள்


ஒளிக்கீற்றுகளில்
ஒழுகும் மழை
தங்கக் காசுகளைத்
தானமாகத் தருகின்றது

நிலத்தில் பெய்கிற மழை
எப்போதாவது
மனதிற்குள் பொழிகின்றபோது
நம் குற்றங்கள்
கழுவப்படுகின்றன
வாழ்க்கை பரிசுத்தமாகின்றது


பூமி தொடாத
மழையின் தூய்மையை
மனிதர்கள் பெறுவதற்காகவே
காலம் காலமாக
மழை பொழிகின்றது


குடை விரித்துக்கொண்டு
அலையும் மனிதர்களை
மழை ஆசீர்வதிப்பதில்லை


கொட்டிக்கொடுக்கும்
வள்ளல் தன்மையைக்
கற்றுக்கொள்ள வேண்டியே
கல்விக்கூடங்களுக்கும்
விடுமுறை அளிக்கிறார்கள்
மழைக்காலங்களில்


மேகங்கள் போல்
தொட முடியாத தூரத்தில் வசிப்பவர்கள்
உண்மையில்
உயர்ந்தவர்கள் இல்லை


மழையைப் போல்
மண்ணுக்கு வரும்
மனிதர்கள் மட்டுமே
வரலாற்றில் வசிக்கிறார்கள்
வாழும்போதே


தொடர்புக்கு: 99404 48693


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர இலக்கியம்

மேலும் தேடல்