வஞ்சகமே நெஞ்சகமாய் வாழ்ந்து வந்தவன்
வன்குணமே தன்குணமாய்ச் சூழ்ச்சி செய்தவன்
அஞ்சுவதற் கஞ்சாத அகத்தைக் கொண்டவன்
அப்துல்லா இப்னுஉபை என்னும் கொடியவன்!
பட்டமரம் போலொருநாள் படுக்கை விழுந்தனன்
பறிபோகும் உயிரென்றே பதறி எழுந்தனன்
உற்றமகன் தன்னைஅவன் உதவிக் கழைத்தனன்
உம்மிநபி யிடம்சொல்ல சேதி உரைத்தனன்!
"நற்பண்பின் உறைவிடமே நபிகள் நாதரே!
நல்லோர்க்கும் தீயோர்க்கும் அருளும் தூதரே!
சொற்பஉயி ரோடிருக்கும் எனது தந்தையார்
சொன்னாரே அவருக்காகத் துஆவும் செய்யவே!
கனிந்தநபி தன்மனதுக் கதவைத் திறந்தனர்
கரிபிடித்தோன் மனம்வெளுக்க உதவ எழுந்தனர்
சினந்தெழுந்த உமரு, நபி செயலைத் தடுத்தனர்
செல்லாதீர் எனநபிஜிப் பாவை இழுத்தனர்!'
"இத்தகையோன் நலம்வேண்ட இறையும் விரும்பிடான்
இறைஞ்சினாலும் அல்லாஹ்தன் முகத்தைத் திரும்பிடான்
எத்தகைய நிலையெனினும் நானும் செல்லுவேன்
இறையிடத்தில் அவனின்நலம் கேட்டுக் கொள்ளுவேன்!'
இரங்குமனம் நபிகளைப்போல் யாரிடம் காண்போம்?
எந்நாளும் அவர்வழியே யாவரும் வாழ்வோம்!
அருங்குணத்தால் தீயவர்க்கும் அன்பு காட்டுவோம்;
அல்லாஹ்வின் தூதர்புகழ்க் கொடியை நாட்டுவோம்!