உனையன்றிப் பெரிதான உறவா? என்
உயிரினும் பெரியவன் நீதானே இறைவா!
மனையோடு தலைவாசல் துறவா? என்
மனதோடு உன்நாமம் கணங்கூட மறவா!
வாழைதன் நிறமாறி னாலும் என்
வாழ்க்கையின் உன்நினைவு மாறாஎன் நாளும்!
கூலிக்கு நோக்கெல்லாம் காசு! பொன்
குவித்தாலும், உன்அருள்முன் அவையெல்லாம் தூசு!
பேர்புகழ் எத்தனைவந் தாலும் உன்
பெயரொன்றே என்மனதைப் பெரிதாக ஆளும்!
கூர்அம்பு எனத்துளைத்த போதும் அருட்
கொடையான மடைதிறந்து எனைவந்து மோதும்!
தண்ணீரே தாமரையின் கனவு! உன்
தத்துவ மொன்றுதான் எனக்குசத் துணவு!
பன்னீரைத் தெளித்தாலும் வேண்டேன்! இறைப்
பணியன்றி வேறெதையும் பாராட்டத் தூண்டேன்!
ஊரெல்லாம் தேடட்டும் பதவி! உன்
ஒருவனிடம் கேட்பேனே ஒப்பிலா உதவி!
சீரெல்லாம் சிறந்தாலும் என்னை உன்
சிரந்தாழ ஐவேளை சிந்திப்பேன் உன்னை!