மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

கவிதை

பாவ சுபாவம்..!
ஆரூர் புதியவன், ஏப்ரல் 1-16, 2025




நெய்விளக்கு ஏற்றவோ
நெஞ்சிருண்ட வேளையில்
பொய்விலக்கி வாழவே
புனிதப் பாதைத் தேடினேன்
மெய்விளக்கம் கண்டபின்
மீண்டும் மீண்டும் பேதை நான்
செய்வதென்ன பாவமா?
செய்வதென் சுபாவமா?

திரியிழந்த தீபமாய்
திரிந்துளைந்த என்னை நீ
நெறியிலே அமர்த்தினாய்
நினைவுகள் திருத்தினாய்
பொறியில் சிக்க வேகமாய்
போகும் பாவ ஜீவனாய்
அறிவிலாது போகிறேன்
ஆண்டவா நீ காத்தருள்

சோதியில் நிறுத்தினாய்
சூன்யமாய் வழுக்கினேன்
நீதியால் நிமிர்த்தினாய் அ
நீதியில் தடுக்கினேன்
தூதினால் துலக்கினாய்
தூயதை விலக்கினேன்
ஆதியாதி ரட்சகா
அடிமையென்னை ஏற்றருள்

தறியில் நெய்யும் ஆடையை
தறி தரிக்க நேருமோ?
உரியில் தொங்கும் பானையின்
உரிமை வெண்ணை ஆகுமோ
வெறிவளர்க்கும் வாழ்வினில்
வேட்டையாடும் வேட்கையில்
சரியில்லாமல் சரிகிறேன்
சரிவை மாற்று ரட்சகா

நன்றியாய்த் துதித்திடும்
நாவினை நீ தந்தருள்
தின்றென்னைச் செரித்திடும்
தீவினைகள் தீர்த்தருள்
கன்றெனத் தவிக்கிறேன்
காவலா நீ காத்தருள்
என்றும் ஏக நாயகா
என்பிழை பொறுத்தருள்


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர இலக்கியம்

மேலும் தேடல்