எங்கள் கனவுகளில் இத்தனை கிறுக்கல்களா?
ரத்தம் சிதறிய உடல்களா?
ஆப்பிள் தேசத்தில் குங்குமப் பூக்களாய்
ரத்தச் சிதறல்களா?
பனிமலையில் தோட்டாக்களின் சீறல்களா?
சிதறிய ஒவ்வொரு ரத்தத் துளியிலும்
ஒவ்வொரு ஆன்மாவின் அவலச்சத்தங்கள்
அவ்வப்போது சுட்டு விளையாட
அது பொம்மைத் துப்பாக்கிகள் அல்ல
கற்பனையில் அது புராண தேசமல்ல
இந்தியமண்ணின் அழகு தேசம்
உலகின் அழகு நிலத்தில்
இத்தனை அத்துமீறல்களா?
இத்தனை அட்டகாசங்களா?
காஷ்மீரத்து ரோஜாவின்
பளீரென்ற சிவப்பு
ஏன் ரத்தமாகச் சிதறுகிறது?
தால் ஏரிகளின் படகு வீடுகள்
ஆனந்தத்தால் அசைவது மாறி
இன்று சோகத்தால்
தள்ளாடுகிறது
காஷ்மீரத்து மக்களின் அழகும்
வஞ்சகம் இல்லாத புன்னகைகளும்
மதம் கடந்த மனிதங்களும்
வசீகரமானது
அவர்களின் வாழ்வாதாரங்கள்
சிதைக்கப்படுகிறது
அந்த அழகு பூமியின்
ஆன்மாவில் அவ்வப்போது குண்டு
பாய்ச்சப்படுகிறது
அழகை ரசிக்க வந்த
சுற்றுலாப் பயணிகளை ஈரமில்லாமல்
சுட்டுக் கொன்றவனுக்கு மதம் ஏது?
மனிதம் ஏது?
கடித்துக் குதறிய ஆப்பிள்களைப்போல்
மனிதர்களைச் சிதறடித்த மனித மிருகங்களுக்கு
வலியின் அர்த்தங்கள் புரியவேண்டும்.
உயிரின் பெருமை புரிய வேண்டும்.
உறவுகளின் வேதனை மனதில்
பதிய வேண்டும்
அவ்வப்போது எத்தனை புல்வாமாக்கள்?
எத்தனை பஹல்காம்கள்?
வன்முறைக்கு மதமில்லை!
தீவிரவாதிகளுக்கு மன்னிப்பு இல்லை!
ஒவ்வொரு நிகழ்வுகளிலும்
ஏதோ நெருடுகிறது
உளவுத்துறை நிலவு பார்க்கச் சென்றுவிட்டதா?
பாதுகாப்புப் படையும் இராணுவமும்
வேடிக்கை பார்க்கப் போய் விட்டதா?
இதன் திட்ட வடிவமைப்பாளர்
எந்த AC அறையில் இருக்கிறார்?
வேறு வேறு நிறங்களும்
அரசியல் பித்தலாட்டங்களும்
என நேர்மையான சமூக
ஊடகங்கள் கதறுகின்றன
அப்பாவிகளின் ஆன்மா
ஒருபோதும் மன்னிக்காது
இனி ஒருபோதும் இதுபோல நிகழாமல்
தடுக்க ஏதாவது செய்யுங்கள்
என் மண்ணின்
என் உறவுகளின் ரத்தச் சிதறல்கள்
மக்களைத் தூங்கவிடாமல்
சித்ரவதை செய்கிறது
காலம் ஒருபோதும்
நிலையாக இருக்காது
காலம் குற்றவாளிகளை
அடையாளம் காட்டியே தீரும்.