மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சட்ட அமைப்பைச் சீர்குலைக்கும் புதிய குற்றவியல் சட்டங்கள் - பத்திரிகையாளர் சந்திப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டனம்

கவிதை

மு.தமிமுன் அன்சாரி கவிதைகள்
மு.தமிமுன் அன்சாரி, 1-15 நவம்பர் 2022


சொகுசாய் தயாரித்த
பஞ்சு மெத்தைகளில்
உறைந்து கிடக்கிறது


பருத்தி விவசாயிகளின்
பட்டினிச் சாவுகள்   /

 

குழந்தைகளுக்கு
நடை வண்டியாய்
பயணிக்க
வாய்ப்புத் தா


வெட்ட வந்தவனிடம்
வேண்டுகோள்
விடுத்தது
வேப்ப மரம்  /

 

எரிபொருள் பற்றாக்குறை
என்றார்கள்


எப்படி எரிந்தது
கொழும்பு  /

 

ஆவேசமாய்
பாய்ந்துவரும்
கடலலைகள்
தோற்றுவிடுகின்றன


அமைதியாய்
படுத்திருக்கும்
கரைகளிடம்  /

 

ஒரு விடுமுறை நாளின்
மகிழ்ச்சியை
மூழ்கடித்து விடுகிறது


அன்புக்குரிய ஒருவரின்
மரணச் செய்தி  /

 

ஒரு பெண்ணுக்கு
இவ்வளவு திமிரா?


கேள்வியில்
நாற்றமெடுக்கிறது
ஆணாதிக்கம்  /

 

தன்னைக் காட்டி
குழந்தைகளுக்குச்
சோறூட்டவில்லையே
என்ற வருத்தத்தில்
தேய்கிறது நிலா  /

 

அலைகடலில்
குதூகலித்த மீன்கள்
செத்து மிதந்தன


அலைகளையும்
வலைகளையும்
அடையாளம் கண்ட
மீன்களுக்கு
கடைசிவரை
தெரியாமல் போனது
அணுக்கழிவுகளின்
அபாயம்  /

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர இலக்கியம்

மேலும் தேடல்