கேவலமான மனிதர்
மௌலானா முஹம்மத் ஃபாரூக்கான், July 16 -31 2023
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
‘எவருடைய தீமைகளைக் கண்டு மக்கள் அவரைச் சந்திப்பதைக் கூட விட்டுவிடுகின்றார்களோ அவர் மறுமை நாளில் அந்தஸ்தின் அடிப்படையில் மிகக் கேவலமான நிலையில் இருப்பார். இன்னொரு அறிவிப்பில் 'எவருடைய ஆபாசப் பேச்சிற்கு அஞ்சி அவனை விட்டு வெகுதொலைவில் ஓடிவிடு வார்களோ அவர்' என்கிற வாசகமும் இடம் பெற்றுள்ளது.'
அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா(ரலி) நூல்: புகாரி
இது ஒரு நீண்ட நபிமொழியின் முக்கியமான பகுதி ஆகும். மறுமை நாளில் மக்களின் விதி பற்றிய இறுதித் தீர்ப்பு வழங்கப்படுகின்ற நாளில் இறைவனின் ஒட்டுமொத்தப் படைப்புகளுக்கு முன்னாலும் தம்மை மோசமான மனிதன் என்று பொது அறிவிப்பு செய்யப்படுவதை எந்த மனிதர் தான் விரும்புவார்?
மக்களுக்குத் தீங்கிழைப்பதையே பழக்கமாகக் கொண்ட, மக்களால் வெறுத்து ஒதுக்கப்படுகின்ற மனிதர்களுக்கும், இந்த ஆளின் சகவாசமும் வேண்டாம் இவன் இழைக்கின்ற தீங்குகளுக்கும் ஆளாக வேண்டாம் என்று மக்கள் வெருண்டோடுகின்ற அளவுக்குத் தீங்கிழைத்து வருகின்ற மனிதர்களுக்கும் இந்த நபிமொழியில் மிகக் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதே போன்று எந்த மனிதரின் ஆபாசப் பேச்சு, கீழ்த்தரமான வசைகள் நிறைந்த உரையாடலுக்கும் அஞ்சி மக்கள் விலகிச் செல்கின்றார்களோ அது போன்ற மனிதர்களுக்கும் இந்த நபிமொழியில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.