மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

அத்தியாயம் 33 அல்அஹ்ஸாப் முன்னுரை
மௌலானா மௌதூதி (ரஹ்) · தமிழில் : T. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ், 16-31 மார்ச் 2024


அத்தியாயம் 33 அல்அஹ்ஸாப் முன்னுரை

கடந்த இதழ் தொடர்ச்சி...

விவாதப் பொருளும் விவாதங்களும் :

இவைதாம் அத்தியாயம் அல்அஹ்ஸாப் அருளப்பட்ட காலத்தில் நிலவிய பிரச்னைகள். இவற்றைக் குறித்துத் தான் இந்த அத்தியாயத்தில் கருத்துரை வழங்கப்பட்டுள்ளது.

இந்த அத்தியாயத்தின் உரைகளைக் கருத்தூன்றிப் பார்க்கும் போதும், இது அருளப்பட்ட வரலாற்றுப் பின்னணியை மனதில் கொண்டு பார்க்கின்ற போதும், இந்த முழு அத்தியாயமும் ஒரே அமர்வில் அருளப்பட்ட ஒற்றை உரையாக இல்லை, அந்தக் காலகட்டத்தின் முக்கியமான நிகழ்வுகள் தொடர்பாக ஒன்றன்பின் ஒன்றாக அருளப்பட்ட ஏராளமான சட்டங்கள், ஆணைகள், உரைகள் ஆகியவற்றைக் கொண்டது, பின்னர் இவையனைத்தும் ஒன்று திரட்டப்பட்டு ஒரே அத்தியாயத்தின் வடிவில் தொகுக்கப்பட்டிருக்கின்றது என்பது தெளிவாகப் புலப்பட்டுவிடும். இந்த அத்தியாயத்தின் பின் வரும் பகுதிகள் ஒன்றுக்கொன்று தெள்ளத்தெளிவாகப் பிரித்தறிந்து கொள்ளத்தக்க அளவுக்குத் தனித்தன்மை கொண்டவையாய் இருக்கின்றன:

  1. முதல் எட்டு வசனங்கள் அகழ்ப் போர் நடப்பதற்குச் சற்று முன்பு அருளப்பட்ட வசனங்களாய்த் தோன்றுகின்றன. வரலாற்றுப் பின்னணியைக் கருத்தில் கொண்டு பார்க்கின்ற போதும், இந்த வசனங்களை வாசிக்கின்ற போதும் ஜைத் பின் ஹாரிஸா(ரலி) அவர்கள் ஜைனப்(ரலி) அவர்களை மணவிலக்குச் செய்திருந்த நாள்களில் இவை அருளப்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது. அந்த வேளையில் ‘குழந்தைகளைத் தத்தெடுத்தல் தொடர்பான அறியாமை காலத்திய கருத்தோட்டங்களையும், மூட நம்பிக்கைகளையும், அபத்தமான நடைமுறைகளையும் முற்றாக ஒழித்துவிட வேண்டியதன் அவசியத்தை

நபி(ஸல்) அவர்கள் உணரத் தொடங்கியிருந்தார்கள்.

தத்தெடுத்தல், வளர்ப்பு மகன் தொடர்பாக வெறுமனே உணர்வுப்பூர்வமான எண்ணங்களின் அடிப்படையில் மக்கள் மிகவும் நுட்பமான, ஆழமான கருத்தோட்டங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள். இந்த நிலையில் நபிகளாரே முன் வந்து அந்த நடைமுறைகளை உடைத்தெறியாத வரையில் அந்தக் கருத்தோட்டங்கள் ஒழியாது என்பதை நபிகளார்(ஸல்) உணர்ந்திருந்தார்கள். அதே சந்தர்ப்பத்தில் ஜைத்(ரலி) அவர்களால் மணவிலக்கு செய்யப்பட்ட ஜைனப்(ரலி) அவர்களைத் தாம் திருமணம் செய்து கொண்டால் அது இஸ்லாத்துக்கு எதிராக மிகப் பெரும் அளவில் அவதூறு பரப்புரையை மேற்கொள்வதற்காக புதிய வழி ஒன்றை, வாய்ப்புக்காகவே காத்துக்கொண்டிருந்த நயவஞ்சகர்களுக்கும் யூதர்களுக்கும் இணைவைப்பாளர்களுக்கும் ஏற்படுத்திக் கொடுத்துவிடுவதாக ஆகிவிடுமே என்று நபி(ஸல்) அவர்கள் பெரும் தயக்கத்துக்கு ஆளாகியிருந்தார்கள். அந்தத் திசையில் ஓரடி எடுத்து வைப்பதற்கும் தயங்கினார்கள்.

  1. 9 முதல் 27 வரையிலான வசனங்களில் அகழ்ப் போர், பனூ குறைளா போர்கள் குறித்து விமர்சிக்கப்பட்டுள்ளது. இது இந்த வசனங்கள் இந்தப் போர்கள் நடந்து முடிந்த பிறகுதான் அருளப்பட்டிருப்பதற்கான வெளிப்படையான சான்றுதான்.
  2. 28 முதல் 35 வரையிலான வசனங்களில் இடம் பெற்றுள்ள உரை இரண்டு விவாதப் பொருள்களைக் கொண்டதாகும்.

முதல் பகுதியில் பற்றாக்குறையும்

சிரமங்களும் நிறைந்த அந்த நாள்களில் நபிகளாரின் மனைவியர் பொறுமை இழந்து வந்த நிலையில், ‘உலகமும் அதன் வனப்புகளும் வேண்டுமா? அல்லது இறைவனும் இறைத்தூதரும் மறுமையும் வேண்டுமா? இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். முதலில் சொல்லப்பட்டதுதான் உங்களுக்கு விருப்பமானது எனில் தெளிவாகச் சொல்லி விடுங்கள். ஒரே ஒரு நாள் கூட நீங்கள் சிரமமான நிலையில் ஆழ்த்தப்பட மாட்டீர்கள். மனநிறைவோடு அனுப்பப்பட்டுவிடுவீர்கள். இரண்டாவதாகச் சொல்லப்பட்டதுதான் உங்களின் தேர்வு எனில், பொறுமையுடன் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உதவியாக இருங்கள்’ என்று அல்லாஹ் எச்சரிக்கின்றான்.

இரண்டாவது பகுதியில் இஸ்லாமிய அச்சில் வார்த்தெடுக்கப்பட்ட மனங்கள் தாமாக விரும்பி ஏங்கிக் கொண்டிருந்த சமுதாயச் சீர்திருத்தங்களை நோக்கி முதல் அடி எடுத்து வைக்கப்பட்டிருக்கின்றது. இந்தச் சீர்திருத்தப் பணியை நபிகளாரின் இல்லத்திலிருந்து தொடங்கி வைத்தவாறு நபிகளாரின் தூய்மையான மனைவியருக்கு, ‘வீதிகளில் ஒப்பனையையும் ஒய்யாரத்தையும்

காட்டிக் கொண்டு திரிகின்ற அறியாமைக் கால நடைமுறையை முற்றாகத் தவிருங்கள். கண்ணியத்துடன் உங்களின் வீடுகளிலேயே தங்கியிருங்கள். அந்நிய ஆண்களுடன் பேசும்போது மிகுந்த விழிப்போடும் எச்சரிக்கையோடும் நடந்து கொள்ளுங்கள்’ என்றெல்லாம் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன. இவைதாம் பர்தா தொடர்பான

சட்டங்களின் தொடக்கமாக அமைந்தது.

  1. 36 முதல் 48 வரையிலான வசனங்களில் ஜைனப்(ரலி) அவர்களுடனான நபிகளாரின் திருமணம் குறித்துச் சொல்லப்பட்டுள்ளது. இந்தத் திருமணம் தொடர்பாக எதிரிகள் கிளப்பியிருந்த ஆட்சேபங்கள் அனைத்துக்கும் இந்த வசனங்களில் பதில் தரப்பட்டது. முஸ்லிம்களின் உள்ளங்களில் விதைக் கப்பட்டு வந்த ஐயங்கள் அனைத்தும் இந்த வசனங்களில் தீர்க்கப்பட்டிருக்கின்றன. நபிகளாரின் அந்தஸ்து என்ன என்பது குறித்து முஸ்லிம்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இறைமறுப்பாளர்களும் நயவஞ்சகர்களும் மேற்கொண்டிருந்த அவதூறு பரப்புரை குறித்து பொறுமையை மேற்கொள்ளுமாறு நபிகளாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  2. வசனம் 49இல் தலாக் தொடர்பான சட்டத்தின் ஒரு பிரிவு எடுத்துரைக்கப் பட்டுள்ளது. இது ஒரு தனி வசனம் ஆகும். இந்த விவகாரங்கள் தொடர்பாக ஏதோ ஒரு தருணத்தில் இந்த

வசனம் அருளப்பட்டிருக்க வேண்டும்.

  1. 50 முதல் 52 வரையிலான வசனங்களில் நபிகளாருக்கென திருமணத்திற்கான

சிறப்பு நெறிமுறைகள் எடுத்துரைக்கப்பட்டிருக்கின்றன. குடும்ப வாழ்வு தொடர்பாக பொதுவான முஸ்லிம்கள் மீது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பல்வேறு கட்டுப்பாடுகளிலிருந்து நபிகளாருக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது.

  1. 53 முதல் 55 வரையிலான வசனங்களில் சமுதாயச் சீர்திருத்தத்துக்கான இரண்டாவது கட்ட நடவடிக்கை குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. இது கீழ்க்கண்ட சட்டங்களை உள்ளடக்கியதாகும்:

நபிகளாரின் வீட்டுக்குள் அந்நிய ஆண்கள் வந்து செல்வது தொடர்பான கட்டுப்பாடுகள். சந்திப்பு, விருந்தோம்பல் தொடர்பான நெறிமுறைகள்??இறைநம்பிக்கையாளர்களின் அன்னையர் தொடர்பான சட்டம் - அதாவது வீடுகளுக்குள் அவர்களின் நெருக்கமான உறவினர்கள் மட்டுமே வரலாம். எஞ்சிய பிற அந்நிய ஆண்களைப் பொறுத்தவரை, அவர்களுக்கு ஏதேனும் ஒன்றைச் சொல்ல வேண்டியிருந்தாலோ ஏதேனுமொன்றை கேட்க வேண்டியது இருந்தாலோ திரைக்குப் பின்னால் இருந்தவாறு சொல்ல வேண்டும் அல்லது கேட்க வேண்டும்.

நபிகளாரின் மனைவியர் குறித்த சட்டம் - அவர்கள் முஸ்லிம்களுக்கு அன்னையரைப் போன்றவர்கள். மணம் முடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டவர்கள் ஆவர். நபிகளாருக்குப் பிறகு அவர்களுடன் முஸ்லிம்கள் மணம் செய்து கொள்ளுதல் தடை செய்யப்பட்டது.

  1. 56 முதல் 58 வரையிலான வசனங்களில் நபிகளாரின் திருமணம் குறித்தும், நபிகளாரின் குடும்ப வாழ்வு தொடர்பாகக் கிளப்பப்பட்டு வந்த ஆட்சேபங்கள் பற்றி கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது. எதிரிகளைப் போன்று எல்லாவற்றிலும் குற்றங் குறைகளைக் காண்கின்ற போக்கிலிருந்து விலகி இருக்குமாறு இறைநம்பிக்கையாளர்களுக்கு வழிகாட்டுதல் தரப்பட்டுள்ளது.

மேலும் தங்களின் இறைத்தூதர்(ஸல்) மீது ஸலவாத்தும் ஸலாமும் சொல்லும்படி அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. நபிகளாரைக் குறித்து மட்டுமின்றி பொதுவான முஸ்லிம்கள் மீதும் அவதூறு சுமத்துவது, பரப்புவதிலிருந்து, பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்துவது போன்றவற்றிலிருந்து முற்றாக விலகியிருக்க இறைநம்பிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

  1. 59ஆம் வசனத்தில் சமூகச் சீர்திருத்தத்துக்கான மூன்றாவது கட்ட நடவடிக்கை குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. வீட்டை விட்டு எப்போது வெளியே சென்றாலும் துப்பட்டியால் தம்மைப் போர்த்திக்கொண்டு மேலிருந்து முக்காடு போட்டுக் கொண்டே வெளியே கிளம்ப வேண்டும் என்று முஸ்லிம் பெண்கள் அனைவருக்கும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இதன் பிறகு அத்தியாயத்தின் இறுதி வரையில் அந்தச் சந்தர்ப்பத்தில் நயவஞ்சகர்களும், தீய எண்ணம் கொண்டிருந்தவர்களும் மேற்கொண்டிருந்த வதந்திப் பரப்புரை இயக்கம் (Whispering Campaign) மீது கடுமை யாகக் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.


(தொடரும்)


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்