மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

அல்லாஹ்வையே சார்ந்திருங்கள்!
மௌலானா மௌதூதி (ரஹ்) · தமிழில் : T. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ்





நபியே!1 அல்லாஹ்வுக்கு அஞ்சுவீராக! மேலும், நிராகரிப்பாளர்களுக்கும், நயவஞ்சகர்களுக்கும் கீழ்ப்படியாதீர். உண்மையில், அல்லாஹ்தான் நன்கு அறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கின்றான்.2 உம் இறைவனிடமிருந்து உமக்கு அறிவிக்கப்படுகின்ற விஷயத்தை நீர் பின்பற்றுவீராக! நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் அல்லாஹ் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான்.3 அல்லாஹ்வையே முழுமையாகச் சார்ந்திருப்பீராக! பொறுப்பேற்பதற்கு அல்லாஹ்வே போதுமானவன்.4


1. ஜைத்(ரலி) ஜைனப்(ரலி) அவர்களை மணவிலக்கு செய்திருந்த நாள்களில்தாம் இந்த வசனங்கள் அருளப்பட்டன என்பதை அத்தியாயத்தின் தொடக்கத்திலேயே குறிப்பிட்டிருந்தோம். அந்த நேரத்தில் தத்துப் பிள் ளைகள் தொடர்பான அறியாமைக் காலத்து நடைமுறைகள் மீதும் மூட நம்பிக்கைகள் மீதும் மரண அடி கொடுப்பதற்கு இதுதான் சரியான சந்தர்ப்பம்; தம்முடைய வளர்ப்பு மகனால் மணவிலக்குச் செய்யப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு அந்த நடைமுறைகளை உடைத்தெறிய வேண்டும்; இவ்வாறாக இந்த நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றே நபிகளார்(ஸல்) நினைத்தார்கள். இறைவனின் வாக்கும் அதுவாகத்தான் இருந்தது.
ஆனால் ஏற்கனவே தம்மிடம் தோல்விக்கு மேல் தோல்வி அடைந்து மன உளைச்சலுக்கு ஆளாகி வயிறு எரிந்து கொண்டிருக்கின்ற இறைமறுப்பாளர்களுக்கும், இணைவைப்பாளர்களுக்கும் தமக்கு எதிரான அவதூறு பரப்புரையை முடுக்கி விடுவதற்கான ஆயுதமாக இந்தச் சீர்திருத்த நடவடிக்கை அமைந்துவிடுமோ என்கிற அச்சத்தினால் இந்த விஷயத்தில் ஏதேனுமோர் நடவடிக்கை எடுப்பதற்கு நபிகளார் (ஸல்) தயங்கிக் கொண்டிருந்தார்கள். இந்த அச்சம் தம்முடைய பெயருக்குக் களங்கம் கற்பித்துவிடுவார்களோ என்பது பற்றிய அச்சமாக இருக்கவில்லை. அதற்கு மாறாக, இஸ்லாத்தின் பக்கம் சாய்கின்ற மனநிலையைக் கொண்டிருந்த ஏராளமான மக்கள் அந்த அவதூறு பரப்புரைக்கு ஆளாகி அவநம்பிக்கையில் விழுந்துவிடுவார்களோ, மேலும் எந்தப் பக்கமும் சேர்ந்துவிடாமல் நடுவில் நின்று கொண்டிருக்கின்ற மக்கள் இதன் காரணமாக எதிரிகளின் அணியில் சேர்ந்து விடுவார்களோ, முஸ்லிம்களில் பலவீனமான புரிதலும் அறிவுத்தெளிவும் கொண்ட மக்கள் விதவிதமான ஐயங்களில்
சறுக்கி விழுந்துவிடுவார்களோ என்கிற அச்சமாகத்தான் அது இருந்தது.
இதனால்தான் அறியாமைக் காலத்து நடைமுறை ஒன்றை முற்றாக அழித்தொழிப்பதற்காக அந்தச் சந்தர்ப்பத்தில் அந்த மாதிரியான நடவடிக்கையை எடுப்பது விவேகம் நிறைந்த செயலாக, நலன் சார்ந்த நடவடிக்கையாக இருக்காது என்றும், அதன் விளைவாக இஸ்லாத்தின் உயர்வான நோக்கங்களுக்கும் கேடு விளையும் என்றும் நபிகளார்(ஸல்) நினைத்தார்கள்.
2. நபிகளாரின் இந்த அச்சங்களை உரையைத் தொடங்கும்போதே முதல் வாசகத்திலேயே வல்லமையும் மாண்பும் நிறைந்த அல்லாஹ் சுக்குநூறாக உடைத்து விட்டான். ‘நம்முடைய மார்க்கத்தின் நலன்கள் எவற்றைச் சார்ந்து இருக்கின்றன, எவற்றைச் சார்ந்ததாக இல்லை என்பதை நாம்தாம் நல்ல முறையில் அறிந்திருக்கின்றோம். எந்த நேரத்தில் எந்த வேலையைச் செய்ய வேண்டும் என்பதையும் எந்தப் பணி நம்முடைய நலன்களுக்கு எதிரானது என்பதையும் நாம் அறிந்துள்ளோம். எனவே இறைமறுப்பாளர்களின் விருப்பத்துக்கும் இணைவைப்பாளர்களின் நாட்டத்துக்கும் இயைந்து போகின்ற வழிமுறையை நீங்கள் மேற்கொள்ளக்கூடாது. அதற்குப் பதிலாக எம்முடைய விருப்பத்தோடு இயைந்து போகின்ற வழிமுறையையே மேற்கொள்ளுங்கள். என்னைப் பார்த்துத்தான்
நீங்கள் அஞ்ச வேண்டுமே தவிர, அந்த இணைவைப்பாளர்களையும் இறைமறுப்பாளர்களைப் பார்த்து அல்ல’ என்பதை உணர்த்துவதுதான் இந்த இறைவாக்கின் நோக்கமாகும்.
3. இந்த வாசகத்தில் நபிகளார்(ஸல்) அவர்களை விளித்தும், முஸ்லிம்களை விளித்தும், இஸ்லாத்தின் எதிரிகளை விளித்தும் கருத்துரைக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் என்னவெனில், இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளையின்படிச் செயல்பட்டு அவப்பெயருக்கு ஆளாகின்ற ஆபத்தை வலிந்து ஏற்றுக்கொள்வாரேயானால், தம்முடைய கண்ணியத்தின்மீதும் மானத்தின்மீதும் எதிரிகள் தொடுக்கின்ற தாக்குதல்களை பொறுமையுடன் சகித்துக் கொள்வரேயானால் அவருடைய இந்த விசுவாசம் நிறைந்த நடத்தை இறைவனுடைய பார்வையில் படாமல் போய்விடாது.
முஸ்லிம்களில் நபிகளாரின் மீதான பற்றிலும் நேசத்திலும் உறுதியாக நிலைத்து நிற்பவர்கள், மேலும் விதவிதமான ஐயங்களில் மூழ்கிப் போனவர்கள் என இரு தரப்பினரின் நிலைமைகளும் அல்லாஹ்வுக்குத் தெரியாமல் இருந்து விடாது. மேலும் நபிகளாரை இழிவுபடுத்துவதற்காக, நபிகளாரின் மீதான அவதூறைப் பரப்புவதற்காக ஓடியாடி மும்முரமாக உழைக்கின்ற இறைமறுப்பாளர்களையும் நயவஞ்சகர்களையும் அல்லாஹ் அறியாதவனாக இருக்க மாட்டான். எனவே பதற்றப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஒவ்வொருவருக்கும் அவரவரின் செயல்களுக்கும் நடத்தைகளுக்கும் ஏற்ப நற்கூலியோ தண்டனையோ கிடைத்தே தீரும்.
4. இந்த வாசகத்தில் மீண்டும் நபிகளாரை விளித்து கருத்துரைக்கப்பட்டுள்ளது. உம் மீது சுமத்தப்படுகின்ற கடமையை அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தவாறு நிறைவேற்றி முடியுங்கள். மேலும் உலகமே அதற்கு எதிராக நின்றாலும் அதனைச் சற்றும் கருத்தில் எடுத்துக் கொள்ளாதீர்கள். இன்ன கட்டளை இறைவனிடமிருந்து வந்திருக்கின்றது என்பது ஒருவருக்குத் தெரிந்துவிடுகின்ற போது அந்தக் கட்டளையின் படிச் செயல்படுவதில்தான் தமக்கான எல்லா நன்மைகளும் வளங்களும் நலன்களும் சார்ந்திருக்கின்றன என்பதில் அவருக்கு முழுமையான மனநிறைவு ஏற்பட்டு விட வேண்டும். அதன் பிறகு விவேகமான அணுகுமுறையைக் குறித்தும் நலன்களையும் கருத்தில் கொள்வது மனிதனின் வேலை அல்ல.
அதற்கு மாறாக அல்லாஹ்வின் மீது முழுமையான நம்பிக்கை வைத்தவாறு இறைவாக்கை நடைமுறைப்படுத்துவதில் மட்டுமே கவனம் செலுத்தத் தொடங்கிவிட வேண்டும். அடியான் தன்னுடைய விவகாரங்கள் அனைத்தையும் சாற்றிவிடுவதற்கு அல்லாஹ்வே எல்லாவற்றுக்கும் முழுமையான அளவில் போதுமானவனாக இருக்கின்றான். வழிகாட்டுவதற்கும் அவனே போதுமானவன். உதவிகளைப் பெறுவதற்கும் அவனே போதுமானவன். தன்னுடைய வழிகாட்டுதல்களின் படி இயங்குகின்றவன் ஒருபோதும் மோசமான கதிக்கு ஆளாகிவிடக் கூடாது என்பதற்கும் அந்த அல்லாஹ்தான் உத்தரவாதமாகவும் இருக்கின்றான்.
(தொடரும்)


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்