முஸய்யினா குலத்தைச் சேர்ந்த ஒருவர் அறிவிக்கிறார் :
‘மக்கள் கேட்டார்கள்: ‘இறைவனின் தூதரே! மனிதனுக்கு வழங்கப்பட்ட அனைத்திலும் எல்லாவற்றையும் விடச் சிறந்தது எது?’
அன்பு நபிகளார் (ஸல்) விடையளித்தார்கள்: ‘நன்னடத்தை’.
நூல் : பைஹகி
தோற்றத்தின் அடிப்படையிலும், பலன்களின் அடிப்படையிலும் இன்னும் பல விதங்களிலும் இறைவனின் மிகப்பெரும் அருள்தான் நன்னடத்தை எனலாம். நன்னடத்தைக்கு இருக்கின்ற அழகும், ஈர்ப்பாற்றலும், வனப்பும் வேறு எந்தப் பொருளிலும் இல்லை என அடித்துச் சொல்லலாம். அந்த அழகையும், வனப்பையும் வேறு எதிலும் கற்பனை செய்தும் பார்க்க முடியாது.
நன்னடத்தைக்கு இருக்கிற ஆற்றலையும், தாக்கத்தை ஏற்படுத்தும் சக்தியையும் வேறு எந்த அற்புதத்தில் (Miracle) கூடப் பார்க்க முடியாது. நன்னடத்தை மூலம் பகைவர்களின் இதயங்களையும் வென்று விட முடியும். எதிரிகள்கூட பகைமையைத் தூக்கியெறிந்து விடுகிறார்கள். ஓர் அழைப்பாளரின் வாழ்வில் எல்லாவற்றையும் விட முக்கியத்துவம் வாய்ந்தது, இன்றியமையாதது நன்னடத்தை தான்.
நபி(ஸல்) அவர்கள் மிகுந்த மென்மையான மனம் கொண்டவர்களாக, மனிதநேயம் கொண்டவர்களாக இருந்ததை இறைவனின் அருள் எனக் குர்ஆன் அறிவிக்கிறது.
‘(நபியே!) இறைவனின் மாபெரும் அருளினாலேயே நீர் இவர்களிடம் மென்மையாக நடந்துகொள்கின்றீர். நீர் கடுகடுப்பானவராகவும் வன்னெஞ்சராகவும் இருந்திருந்தால், இவர்களெல்லோரும் உம்மை விட்டு விலகிப் போயிருப்பார்கள். ஆகவே இவர்(களின் தவறு)களைப் பொறுத்துக் கொள்வீராக! மேலும் இவர்களுக்காக (இறைவனிடம்) மன்னிப்புக் கோருவீராக! மேலும் தீனுடைய பணிகளில் இவர்களையும் கலந்தாலோசிப்பீராக!’ (திருக்குர்ஆன் 3:159)