நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘அண்டை வீட்டுக்காரர் அருகில் இருக்கின்றகாரணத்தால் ஷûஃப்ஆ உரிமை (முன் சலுகை கொண்டு வாங்கும் உரிமை) அதிகம் கொண்டவராக இருக்கின்றார்.’
அறிவிப்பாளர் : அபூ ராஃபிஅ
நூல் : புகாரி
மற்றவர்களைவிட பக்கத்தில் இருக்கின்ற நிலையான அண்டை வீட்டுக்காரருக்கே ஷûஃப்ஆ உரிமை (முன் சலுகை கொண்டு வாங்கும் உரிமை) அதிகமாக உண்டு. அசையா சொத்தில் பங்காளியாக இருப்பவருக்கு ஷûஃப்ஆ உரிமை இருப்பதைப் போலவே அந்தச் சொத்துக்குப் பக்கத்தில் நிலையாக இருக்கின்ற அண்டை வீட்டுக்காரருக்கும் அந்த உரிமை உண்டு என்பதை இந்த நபிமொழி மெய்ப்பிக்கின்றது. மனிதனுக்கு இயல்பாகக் கிடைக்கின்ற உரிமைகளைப் பேணி நடந்து கொள்வதில் இஸ்லாம் அதிகக் கவனம் செலுத்துகின்றது. சமூகத்தில் அதிருப்தியும் குழப்பமும் வேர் பிடிப்பதை இஸ்லாம் விரும்புவதில்லை. தேவையின்றி விற்காதீர்!
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களில் எவரேனும் ஒருவர் ஏதேனும் வீட்டையோ அல்லது நிலத்தையோ விற்கின்றாரெனில் அதில் (அதனுடைய விலையில்) பரக்கத் (ஏற்றம்) ஏற்பட்டு விடக்கூடாது. அவர் அதேப் போன்று வேறொரு சொத்தை வாங்குவதில் அதனைச் (அந்த விலையைச்) செலவிட்டாலே தவிர.’
அறிவிப்பாளர் : ஸயீத் பின் ஹுரைஸ்(ரலி)
நூல் : இப்னு மாஜா, தாரமி
வீடு, தோப்பு போன்ற அசையா சொத்துகளைத் தேவையில்லாமல் விற்பதும் அதனால் கிடைக்கின்ற பணத்தைக் கொண்டு அசையும் சொத்துகளை வாங்குபவதும் அறிவார்ந்த செயல் ஆகாது.
அசையா சொத்தில் தேய்மானம், இழப்பு ஆகியவற்றுக்கான ஆபத்து மிகக் குறைவாகத் தான் இருக்கும் என்பதுதான் உண்மை. அசையும் சொத்துகளைப் பொறுத்தவரை அது எந்த நேரத்தில் திருடுபோகுமோ, அல்லது அதற்கு வேறு ஏதேனும் ஒரு வகையில் ஊறு நேர்ந்து விடுமோ என்கிற ஆபத்து இருந்துகொண்டே இருக்கும்.
எனவே வீடு, தோப்பு போன்ற அசையா சொத்துகளைத் தேவையில்லாமல் விற்பதைத் தவிர்த்துக்கொள்வதுதான் அறிவுடைமைக்குச் சான்று ஆகும். அதே சமயம் அதனை விற்றுவிட்டு வருகின்ற பணத்தைக் கொண்டு வேறொரு அசையாச் சொத்தை வீட்டையோ, நிலத்தையோ வாங்குவதில் எந்தப் பாதகமும் இல்லை.
நபிமொழி விளக்கம் * மௌலானா முஹம்மத் ஃபாரூக்கான் * தமிழில் : அபூ ஹானியா