நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ரமளான் மாதத்தில் எவர் இறைநம்பிக்கையோடும் இஹ்திஸாபோடும் (கவனத்தோடும் விழிப்போடும்) நோன்பு நோற்கின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன.
மேலும் (இதே போன்று) ரமளான் மாதத்து இரவுகளில் எவர் இறைநம்பிக்கையோடும் இஹ்திஸாபோடும் (கவனத்தோடும் விழிப்போடும்) நின்று தொழுகின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன. (இதே போன்று) லைலத்துல் கத்ரு எனும் மாட்சிமை மிக்க இரவில் எவர் இறைநம்பிக்கையோடும் இஹ்திஸாபோடும் (கவனத்தோடும் விழிப்போடும்) நின்று தொழுகின்றாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடுகின்றன’
அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி)
நூல் : புகாரி, முஸ்லிம்
இறைநம்பிக்கை என்பதற்கு இறைவனைக் குறித்தும் மறுமையைக் குறித்தும் இஸ்லாம் முன் வைக்கின்ற கோட்பாட்டை ஏற்றுக் கொள்வதையும் அதனை தம்முடைய நெஞ்சங்களில் பசுமையாக வைத்திருப்பதையும் குறிக்கும்.கவனத்தோடும் விழிப்போடும் என்பதற்கு இறைவனின் உவப்பைப் பெறுவதில் மட்டுமே கவனத்தைக் குவிப்பது பொருளாகும். எல்லா நேரங் களிலும் எங்கேயும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தம்முடைய எண்ணங்கள் மீதும் செயல்கள் மீதும் கவனத்தைக் குவித்து வைத்து இறைவனின் உவப்புக்கு எதிரானதாக எதுவும் நடக்கவில்லையே என்று கண்காணித்துக் கொண்டிருப்பதைக் குறிக்கும். தன்னுடைய செயல்களுக்குப் பின்புலத்தில் தவறான சிந்தனைகள் இடம் பெற்றுவிடவில்லையே என்று ஆய்ந்து பார்த்துக் கொண்டே இருப்பதையும் அது குறிக்கும்.இறைநம்பிக்கையோடும் இஹ்திஸாபோடும் (கவனத்தோடும் விழிப்போடும்) நோன்பு நோற்பவரின் முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும். ஏனெனில் அவர் ஒரு காலத்தில் இறைவனுக்கு மாறு செய்பவராக இருந்தார். இப்போது தவ்பா செய்து இறைவனின் பக்கம் மீண்டுவிட்டார்.