மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

முழுமை

நபிகளாருக்கு மட்டுமே இந்த அனுமதி!
மௌலானா மௌதூதி (ரஹ்) · தமிழில் : கூ. அஜீஸ் லுத்ஃபுல்லாஹ், ஏப்ரல் 1-16, 2025



நபியே! நீர் மஹர் கொடுத்துவிட்ட உம்முடைய மனைவியரையும் அல்லாஹ்வினால் வழங்கப்பட்டு உமது கைவசத்தில் வந்துள்ள அடிமைப் பெண்களையும் மற்றும் உம்மோடு ஹிஜ்ரத் செய்த பெண்களாகிய உம் தந்தையின் சகோதரர்களின் மகள்கள், உம் தந்தையின் சகோதரிகளின் மகள்கள், உம் தாயின் சகோதரர்களின் மகள்கள், உம் தாயின் சகோதரிகளின் மகள்கள் ஆகியோரையும் திண்ணமாக நாம் உமக்கு ஆகுமாக்கியிருக்கின்றோம். மேலும், இறைநம்பிக்கை கொண்ட பெண்ணையும், அவள் தன்னைத் தானே நபிக்காக அன்பளிப்பாய் வழங்கி, நபியும் அவளைத் திருமணம் செய்திட விரும்பும் பட்சத்தில் (உமக்கு ஆகுமாக்கியிருக்கின்றோம்).87 இந்தச் சலுகை உமக்கு மட்டுமே உரியதாகும்; பிற நம்பிக்கையாளர்களுக்கு இல்லை...88


· அத்தியாயம் 33 : அல்அஹ்ஸாப் · திருவசனம் : 50


87. ஐந்தாவது மனைவியை நபிகளாருக்கு ஆகுமானவராய் ஆக்கியதோடு இந்த வசனத்தில் வல்லமையும் மாண்பும் நிறைந்த அல்லாஹ் இன்னும் சில வகையான பெண்களுடன் மணம் முடித்துக் கொள்வதற்கும் நபிகளாருக்கு அனுமதி வழங்கியிருக்கின்றான். அவர்களைப் பற்றிய விவரம் வருமாறு:

1. அல்லாஹ்வால் வழங்கப்பட்டு நபி (ஸல்) அவர்கள் வசம் இருக்கின்ற அடிமைப் பெண்கள். இந்த அனுமதிக்கேற்ப நபிகளார்(ஸல்) பனூ குறைழா போரின் போது அன்னை ரைஹானா(ரலி) அவர்களையும் பனூ முஸ்தலிக் போரின் போது அன்னை ஜுவைரியா(ரலி) அவர்களையும் கைபர் முற்றுகைக்குப் பிறகு அன்னை ஸஃபியா(ரலி) அவர்களையும், எகிப்து தேசத்தின் முகஸ்ஸஸ் அவர்களிடமிருந்து அனுப்பப்பட்ட அன்னை மாரியா கிப்திய்யா(ரலி) அவர்களையும் தம் வசம் ஆக்கிக் கொண்டார்கள். இவர்களில் முதலில் சொல்லப்பட்ட மூவரையும் நபிகளார்(ஸல்) விடுதலை செய்த பிறகு அவர்களுடன் மணம் முடித்துக் கொண்டார்கள். ஆனால் அன்னை மாரியா(ரலி) அவர்களுடன் வலக்கரம் சொந்த மாக்கிக் கொள்ளப்பட்டவர் என்கிற அடிப்படையில் உறவு கொண்டார்கள். அவர்களை விடுதலை செய்து மணம் செய்து கொண்டார்களா என்பது நிறுவப்படவில்லை.

2. இந்த வசனத்தில் ‘உம்மோடு ஹிஜ்ரத் செய்த’ எனச் சொல்லப்பட்டிருப்பதன் பொருள் ஹிஜ்ரத் பயணத்தின் போது இவர்களும் நபி களாருடன் பயணித்தவர்கள் என்பது அன்று. அதற்கு மாறாக அவர்கள் இஸ்லாத்திற்காக தம்முடைய பிறந்த மண்ணைத் துறந்து ஹிஜ்ரத் செய்தவர்கள் என்றே பொருள். இந்த நெருங்கிய உறவுக்காரப் பெண்களில் எவரை வேண்டுமானாலும் மணம் முடித்துக் கொள்ள நபிகளாருக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இதனைத் தொடர்ந்து இந்த அனுமதிக்கேற்ப ஹிஜ்ரி ஏழாவது ஆண்டில் அன்னை உம்மு ஹபீபா(ரலி) அவர்களை நபிகளார்(ஸல்) மணந்தார்கள். (அது மட்டுமின்றி இந்த வசனத்தில் சித்தப்பா மகள்கள், பெரியப்பா மகள்கள், மாமன் மகள், அத்தை மகள், சித்தி மகள் போன்றோரை மணந்துகொள்வது முஸ்லிம் களுக்கு ஆகுமானது என்கிற விவரமும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இஸ்லாமிய ஷரீஅத் கிறித்தவ, யூத மதங்களோடு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கின்றது. கிறித்தவர்கள் மத்தியில் பெண்ணின் முந்தைய ஏழு தலைமுறை வரை ஆணுடைய வம்சத்துடன் இரத்தக் கலப்பு இருக்குமேயானால் அவளை மணப்பதற்கு அனுமதி இல்லை. யூத மதத்திலோ சொந்த அண்ணன் மகளையும், அக்கா மகளையும் மணப்பதும் கூடும்).

3. மேலும் தம்மைத்தாமே அன்பளிப்பாக வழங்கிக் கொண்ட இறை நம்பிக்கை கொண்ட பெண்கள். அதாவது மஹர் எதுவும் இல்லாமல் நபிகளாரை மணந்து கொள்வதற்கு ஆயத்தமாகிவிட, அவர்களை ஏற்றுக்கொள்வதற்கு நபிகளாரும் விரும்பிய பெண்கள். இந்த அனுமதிக்கேற்ப ஹிஜ்ரி ஏழாவது ஆண்டில் அன்னை மைமூனா(ரலி) அவர்களை நபிகளார்(ஸல்) தம்முடைய மனைவியாக ஆக்கிக் கொண்டார்கள்.

ஆனால் மஹர் எதுவும் இல்லாமல் அவர்களின் இசைவைப் பயன்படுத்திக் கொள்ள நபிகளார்(ஸல்) விரும்பவில்லை. இத னால் மைமூனா(ரலி) அவர்கள் தம்முடைய எந்தவொரு விருப்பத்தையோ, கோரிக்கை யையோ விடுக்காத நிலையிலும் அவருக்கு நபிகளார்(ஸல்) மஹர் வழங்கினார்கள். நபிகளாரின் மனைவியரில் ஒருவர் கூட தம்மைத்தாமே அன்பளிப்பாக வழங்கிக் கொண்ட பெண்ணாக இருக்கவில்லை என்று குர்ஆன் விரிவுரையாளர்கள் குறிப்பிட்டிருக்கின்றார்கள். ஆனால் இதன் உண்மையான பொருள் என்னவெனில் தம்மைத்தாமே அன்பளிப்பாக வழங்கிக் கொண்ட பெண்களுக்கும் நபிகளார்(ஸல்) மஹர் கொடுத்த பிறகுதான் நிக்காஹ் செய்துகொண்டார்கள் என்பதாகும்.

88. இந்த வாசகம் முந்தைய வாக்கியத்துடன் மட்டுமே தொடர்புடையதாய் எடுத்துக் கொள்÷வாமேயானால் மற்ற எந்தவொரு முஸ்லிமுக்கும் தம்மைத்தாமே அன்பளிப்பாக வழங்க முன் வருகின்ற இறைநம்பிக்கை கொண்ட பெண்ணை மஹர் வழங்காமல் மணம் முடித்துக் கொள்வதற்கு அனுமதி இல்லை என்று இதற்குப் பொருள். முந்தைய ஒட்டுமொத்த வாசகங்களுடன் தொடர்பு கொண்டதாய் இதனை எடுத்துக் கொண்டால் நான்குக்கு அதிகமான பெண்களை மணம் முடித்துக் கொள்வதற்கான சலுகையும் நபிகளாருக்கு மட்டுமே வழங்கப்பட்டது; அது பொதுவான முஸ்லிம்களுக்கு இல்லை என்றும் இதற்குப் பொருளாகும்.

சில ஆணைகளும் சட்டங்களும் நபி களாருக்கு மட்டுமே பொருந்தும்; அவற்றில் எதுவுமே பிற பொதுவான முஸ்லிம்களைக் கட்டுப்படுத்தாது என்கிற விவரமும் இந்த வசனத்திலிருந்து தெளிவாகின்றது. குர்ஆனையும் நபிவழியையும் ஆராய்ந்து பார்க்கின்ற போது இப்படிப்பட்ட தனிச்சிறப்பான எத்தனையோ சட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம். எடுத்துக்காட்டாக, தஹஜ்ஜுத் தொழுவது நபிகளார்(ஸல்) மீது கடமையாக்கப்பட்டிருந்தது. மற்ற முஸ்லிம்கள் அனைவருக்கும் அது நஃபில் உபரி தொழுகையாகத்தான் இருக்கின்றது. சதகா தானங்களைப் பெற்றுக் கொள்வது நபிகளாருக்கும் நபிகளாரின் குடும்பத்தாருக்கும் ஹராமாக்கப்பட்டிருந்தது. மற்ற வர்களுக்கு இது ஹராமாக்கப்படவில்லை.

நபிகளாரின் சொத்து பிரித்துக் கொடுக் கப்படுவது தடுக்கப்பட்டிருந்தது. மற்ற முஸ்லிம்கள் விட்டுச் செல்கின்ற சொத்து அத்தியாயம் அன்னிஸாவில் சொல்லப்பட்டுள்ள சட்டதிட்டங்களின் ஒளியில் பிரித்துக் கொள்ளப்படுகின்றன. நபிகளாருக்கு நான்குக்கும் அதிகமான மனைவிகள் ஆகுமாக்கப்பட்டிருந்தார்கள்.  மேலும் மனைவியருக்கு இடையில் நீதத்துடன் நடந்து கொள்வது நபிகளார்(ஸல்) மீது வாஜிபாக இருக்கவில்லை. தம்மைத் தாமே அன்பளிப்பாக வழங்கிக் கொள்கின்ற பெண்களை மஹர் இல்லாமல் மணம் முடித்துக் கொள்ள நபிகளாருக்கு அனுமதி தரப்பட்டிருந்தது.

நபிகளாரின் மரணத்துக்குப் பிறகு நபி களாரின் மனைவியர் அனைவருமே ஒட்டுமொத்த முஸ்லிம் உம்மத்துக்கும் ஹராமாக் கப்பட்டார்கள். இவற்றில் எந்தவொரு சிறப்பையும் நபிகளாரைத் தவிர முஸ்லிம்களில் வேறு எவருக்கும் கிடைக்கவில்லை. குர்ஆன் விரிவுரையாளர்கள் நபிகளாரின் மற்றுமோர் சிறப்பையும்  குறிப்பிட்டிருக்கின்றார்கள். அதாவது வேதம் வழங்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பெண்ணை மணம் முடிப்பது நபிகளாருக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. பொது வான முஸ்லிம்களுக்கோ அந்தப் பெண்கள் ஆகுமாக்கப்பட்டிருந்தார்கள்.
(தொடரும்)

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்