‘..ஏனைய நம்பிக்கையாளர்கள் மீது அவர்களுடைய மனைவிகள் மற்றும் அடிமைப் பெண்கள் விஷயத்தில் என்னென்ன வரையறைகளை நாம் விதித்திருக்கின்றோம் என்பதை நாம் அறிவோம். (இவ்வரையறைகளிலிருந்து உமக்கு நாம் விலக்களித்திருப்பது) உமக்கு எந்தச் சிரமமும் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான்!89 மேலும், அல்லாஹ் பெரும் மன்னிப்பாளனாகவும் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.’
அத்தியாயம் 33 : அல்அஹ்ஸாப் · திருவசனம் : 50
89. பொதுவான விதியிலிருந்து நபி களாருக்கு விலக்கு அளிக்கப்பட்டதற்குப் பின்புலத்தில் இருந்த பயனும் விவேகமும் சார்ந்த காரணம் இதுதான். ‘உமக்கு எந்தச் சிரமமும் இருக்கக் கூடாது என்பதற்காகத்தான்!’ என்கிற வாசகத்துக்கு நபிகளாரின் இச்சைகள் மிக அதிகரித்துவிட்டிருந்தன; இதனால்தான் ஏராளமான மனைவியரை வைத்துக் கொள்வதற்கு அனுமதி தரப்பட்டது; நான்கு மனைவியரோடு குறுக்கிவிடுவதால் சிரமத்துக்கு ஆளாகி விடக்கூடாது’ என்றெல்லாம் பொருள் அன்று. (அல்லாஹ் காப்பாற்றுவானாக!)
நபிகளார்(ஸல்) மீதான காழ்ப்பு உணர்வில் கண்மூடித்தனமாக வாய்க்கு வந்ததைச் சொல்பவர்தாம் இந்த வாசகத்துக்கு இப்படிப் பொருள் கொள்வார். ஏனெனில் தம்முடைய 25 ஆவது வயதில் 40 வயது பெண்மணியை மணந்த நபிகளார்(ஸல்) அவருடன் கால் நூற்றாண்டு வரை மிக மிக இனிமையும் இணக்கமும் நிறைந்த இல்லற வாழ்வை நடத்தினார்கள். முதல் மனைவி இறந்து விட்ட பிறகு மற்றுமோர் வயது முதிர்ந்த பெண்மணியான அன்னை சவ்தா(ரலி) அவர்களை மணம் செய்து கொண்டு மொத்தம் நான்கு ஆண்டுகள் அவர்கள் மட்டுமே அவர்களின் ஒற்றை மனைவியாய் இருந்தார்கள். இந்த நிலையில் வயது 53 ஆண்டுகளைத் தாண்டியிருக்க திடீரென்று நபிகளாருக்கு இச்சைகள் அதிகமாகிக் கொண்டே போயின என்றும் நபிகளாருக்கு அதிக எண்ணிக்கையில் மனைவியர் தேவைப்பட்டார்கள் என்றும் அறிவார்ந்த, நேர்மையான, வாய்மையான மனிதர் எவராவது சொல்லத்தான் துணிவார்களா?
உண்மை என்னவெனில் ‘உமக்கு எந்தச் சிரமமும் இருக்கக்கூடாது என்பதற்காகத்தான்’ என்பதற்கான பொருளை விளங்கிக் கொள்வதற்கு இரண்டு விஷயங்களைக் கருத்தில் கொள்வது அவசியமாகும். அதாவது ஒன்று, வல்லமையும் மாண்பும் நிறைந்த அல்லாஹ் நபிகளார்(ஸல்) மீது சுமத்திய மகத்தான பொறுப்பைக் கருத்தில் கொள்ள வேண்டும். இரண்டாவதாக, இந்த மகத்தான பொறுப்பை நிறைவேற்றுவதற்காக நபிகளார்(ஸல்) களம் இறக்கப்பட்ட சூழல்களையும் நிலைமை களையும் புரிந்து கொள்ள வேண்டும்.
துவேஷம், வன்மம், பக்கச் சார்பு போன்றவற்றையெல்லாம் துடைத்தெறிந்து விட்டு தெள்ளிய மனத்தோடு மேலே குறிப்பிடப்பட்ட இரண்டு யதார்த்தங்களையும் புரிந்து கொள்பவர் நான்குக்கு மேற்பட்ட மனைவியரை மணம் முடித்துக் கொண்ட விவகாரத்தில் நபிகளாருக்குச் சிறப்பு அனுமதி ஏன் தரப்பட்டது என்பதையும் ‘நான்கு மனைவிகள்’ என்கிற கட்டுப்பாடு நபிகளாருக்கு எந்த வகையில் ‘சிரமமாக’ இருந்தது என்பதையும் நல்ல முறையில் அறிந்துகொள்வார்.
ஒரு பண்பாடற்ற, முரட்டுத்தனமான சமூகத்தை இஸ்லாமியப் பார்வையில் மட்டுமின்றி பொதுவான நாகரிக, பண்பாட்டு அளவுகோல்களின் ஒளியிலும்கூட மெருகேற்றப்படாத, பண்படாத சமூகமாக இருந்த ஒரு சமூகத்தை வாழ்வின் எல்லாத் துறைகளிலும் போதித்து, கற்பித்து, பயிற்றுவித்து, பண்படுத்தி ஓர் உன்னதமான, மேன்மையான பண்பாடும் கண்ணியமும் நளினமும் நிறைந்த, தூய்மையான சமூகமாக மாற்றியமைப்பதுதான் நபிகளார்(ஸல்) மீது சுமத்தப்பட்ட மகத்தான பொறுப்பு ஆகும். இந்த நோக்கத்துக்காக வெறுமனே ஆண்களுக்குப் பயிற்சி அளித்து அவர்களைப் பண்படுத்துவது மட்டும் போதுமானதாய் இருக்கவில்லை. அதற்கும் மேலாக பெண்களுக்கும் அதே அளவுக்கு பயிற்சியும் போதனையும் அளித்து பண்படுத்துவது அவசியமாக இருந்தது.
ஆனால் எந்தக் கொள்கைகளையும் பண்பாட்டையும் நாகரிகத்தையும் போதிப்பதற்காக நபிகளார்(ஸல்) களம் இறக்கப்பட்டார்களோ அவற்றில் கட்டுப்பாடற்ற ஆண்பெண் கலப்பு தடை செய்யப்பட் டிருந்தது. மேலும் இந்த விதியை முறிக்காமல் பெண்களுக்கு நேரடியாகப் பயிற்சியளிப்பது நபிகளாருக்குச் சாத்தியமில்லா ததாய் இருந்தது. இதனால்தான் வெவ்வேறு வயதைக் கொண்ட, வெவ்வேறு சிந்தனைத்திறனையும் அறிவாற்றலையும் கொண்ட பெண்களை நிக்காஹ் செய்து அவர்களுக்கு நேரடியாகப் பயிற்சியளித்து, போதித்து தம்முடைய உதவியாளர்களாய் அவர்களை ஆயத்தப்படுத்தி, அவர்களைக் கொண்டு நகர்ப்புற, கிராமப்புற, இளமையான, முதுமையான என எல்லாவகையான பெண்களுக்கும் மார்க்கத்தைக் கற்பிக்கின்ற, ஒழுக்கம், பண்பாடு ஆகியவற்றின் புதிய கொள்øககளைப் புரிய வைக்கின்ற பணியை மேற்கொள்வது என்பதைத் தவிர நபிகளாருக்கு வேறு வழி இருக்கவில்லை.
அது மட்டுமின்றி பழைய, தொன்மையான அறியாமைக்காலத்து வாழ்க்கைத் திட்டத்தை முற்றாக ஒழித்துவிட்டு அதன் இடத்தில் இஸ்லாமிய வாழ்க்கைத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி நிலைநிறுத்துகின்ற அறப் பணியும் நபிகளார் (ஸல்) மீது சுமத்தப்பட்டிருந்தது. இந்த அறப்பணியை நடைமுறைப்படுத்தும் போது அறியாமைக் காலத்து வாழ்க்கைத் திட்டத்தின் தலைவர்களுக்கு எதிராகப் போரிடுவதும் தவிர்க்க இயலாததாய் இருந்தது. கோத்திரங்களின் ஆதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட சமூக வாழ்வு தனித்துவம் மிக்க நடைமுறைகளுடன் நிலைபெற்றிருந்த நாட்டில் இந்த மோதல் அரங்கேறிக் கொண்டிருந்தது.
இந்தத் தனித்துவமான நிலைமைகளில் மற்ற வியூகங்களை மேற்கொள்கின்ற அதே வேளையில் வெவ்வேறு கோத்திரங்களில் நிக்காஹ் செய்து கொள்வதன் மூலமாக அநேக நட்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வதும், அநேக பகைமைகளை முழுவதுமாக முற்றுப் பெறச் செய்வதும் அவசியமாயிற்று. இவ்வாறாக நபிகளார்(ஸல்) மணந்துகொண்ட பெண்களைத் தேர்வு செய்கின்ற போது அவர்களின் தனிப்பட்ட பண்புகளுடன் இந்த நோக்கமும் கூடக்குறைய பின்புலமாக அமைந்தது.
அன்னை ஆயிஷா(ரலி), அன்னை ஹஃப்ஸா(ரலி) ஆகியோரை நிக்காஹ் செய்து கொண்டதன் மூலமாக அபூபக்கர்(ரலி), உமர்(ரலி) ஆகியோருடனான தம்முடைய உறவையும் பிணைப்பையும் நபிகளார்(ஸல்) இன்னும் ஆழமானதாகவும் வலுவானதாகவும் ஆக்கிக் கொண்டார்கள். அபூ ஜஹல், காலித் பின் வலீத்(ரலி) போன்றோரின் கோத்திரத்தைச் சேர்ந்த பெண்மணிதான் அன்னை உம்மு சல்மா(ரலி). அன்னை உம்மு ஹபீபா(ரலி) அவர்களோ அபூசுஃப்யானின் மகள் ஆவார். இந்தக் கோத்திரத்தாரின் பகை உணர்வை மழுங்கடித்து வலுவிழக்கச் செய்வதில் இந்தத் திருமணங்கள் பெரும் பங்காற்றின.
இன்னும் சொல்லப் போனால் உம்மு ஹபீபா(ரலி) அவர்களை நபிகளார்(ஸல்) மணந்து கொண்ட பிறகு அபூசுஃப்யான் ஒரு÷பாதும் நபிகளாருக்கு எதிராகக் களம் இறங்கவே இல்லை. அன்னை ஸஃபிய்யா(ரலி), அன்னை ரைஹானா(ரலி), அன்னை ஜுவைரிய்யா(ரலி) ஆகியோர் யூதக் கோத்திரங்களைச் சேர்ந்தவர்களாய் இருந்தார்கள். நபிகளார்(ஸல்) இம்மூவரையும் விடுவித்து மணந்து கொண்டதும் நபிகளாருக்கு எதிரான யூதர்களின் நடவடிக்கைகள் தணிந்துவிட்டன. ஏனெனில் அந்தக் காலத்திய அரபு பாரம்பர்யங்களின் படி ஒரு கோத்திரத்தைச் சேர்ந்த பெண் ஒருத்தியை ஒருவர் மணந்து கொள்கின்றபோது அவர் அந்தப் பெண்ணின் குடும்பத்துக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த கோத்திரத்துக்கே மருமகனாகக் கருதப்படுகின்றார். மேலும் மருமகனுடன் சண்டையிடுவது மிகவும் கண்ணியக் குறைவான செயலாகப் பார்க்கப்பட்டது.
சமுதாயத்தின் சீர்திருத்தமும் அதில் வேரூன்றியிருந்த அறியாமைக்கால சடங்குகளை அழித்தொழிக்க வேண்டிய அவசியமும்கூட நபிகளாரின் பதவி சார்ந்த கடமைகளில் அடங்கியிருந்தன. இவ்வாறாக இந்த நோக்கங் களுக்காகவும் திருமணம் செய்ய வேண்டிய கட்டாயம் நபிகளாருக்கு ஏற்பட்டது. இந்தத் திருமணம் பற்றிய விவரங்கள்தாம் இதே அத்தியாயம் அல்அஹ் ஸாபில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. நபிகளாருக்குத் திருமண விவகாரத்தில் எந்தச் சிரமமும் இருந்துவிடக் கூடாது என்பதற்கு இந்தக் காரணிகள்தாம் காரணங்களாயின. தம் மீது சுமத்தப்பட்ட மகத்தான பொறுப்பின் தேவைகளை முன்னிட்டு எத்துணை திருமணங்களை வேண்டுமானாலும் செய்து கொள்ள வழிவகுப்பதுதான் நோக்கம்.
இதிலிருந்து தனிப்பட்ட தேவைகளின் பொருட்டுதான் பலதாரமணம் அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் அதனைத் தவிர இதனை அனுமதிப்பதற்கு வேறு யாதொன்றும் காரணமாக அமைய முடியாது என்றும் சொல்பவர்களின் கருத்து முற்றிலும் தவறானது என்பது தெளிவாகிவிடுகின்றது. நபிகளார் (ஸல்) ஒன்றுக்கும் மேற்பட்ட திருமணங்களைச் செய்தார்கள் எனில் அவற்றுக்கான காரணங்கள் ‘மனைவி நோயுற்றிருந்தார்’ என்பதாகவோ, ‘மனைவி மலடாக இருந்தார்’ என்பதாகவோ, ‘ஆண் மக்களைப் பெற்றெடுக்கவில்லை’; ‘தாய் இழந்த பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க வேண்டிய கட்டாயம்’ என்பதாகவோ இருக்கவில்லை என்பது வெளிப்படை.
இந்தக் குறுகிய தனிப்பட்ட காரணங்களுக்கு அப்பாற்பட்டவராக நபிகளார் (ஸல்) தம்முடைய திருமணங்கள் அனைத்தையும் பரப்புரை, போதனை ஆகியவற்றுக்கான தேவைகளின் பொருட்டே செய்தார்கள். அல்லது சமூக சீர்திருத்தம், அரசியல், கூட்டு வாழ்வின் நோக்கங்களின் பொருட்டும்தாம் செய்தார்கள். பலதார மணத்தை மேலே குறிப்பிடப்பட்ட அந்த ஒரிரு காரணங்களுக்குள் இறைவனே குறுக்கியிராத நிலையில், நபிகளாரும் அந்த ஒரிரு காரணங்கள் அல்லாத வேறுவிதமான பற்பல காரணங்களுக்காக அநேக திருமணங்களைச் செய்துள்ள நிலையில் இந்தச் சட்டத் தில் தம் சார்பாக சில கட்டுப்பாடுகளைப் பரிந் துரைப்பதற்கும் அதற்கும் மேலாக இந்தக் கட்டுப்பாடுகளை தாம் ஷரீஅத்தின் அடிப்படையில் விதிப்பதாக வாதிடுவதற்கும் எந்தவொரு மனிதருக்கு என்ன உரிமை இருக்கின்றது?
உண்மை என்னவெனில் இந்தக் கட்டுப்பாடுகளை விதிக்கின்ற சிந்தனைக்கு ஆணிவேராக இருப்பது பலதார மணமே ஒரு தீமைதான் என்கிற மேற்கத்திய சிந்தனைதான். அந்தச் சிந்தனையின் அடிப்படையில்தான் இந்தச் செயலே ஹராமானதுதான்; மிக மிகக் கடுமையான, தவிர்க்கவே இயலாத தேவைகளுக்காக வேண்டுமானால் இது ஆகுமாக்கப்படலாம் என்கிற கருத்தோட்டம் முன் வைக்கப்படுகின்றது. ஆக அங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்ட இந்தச் சிந்தனைமீது போலியான இஸ்லாமிய முத்திரையைக் குத்திவிட இவர்கள் என்னதான் கடுமையாக முயன்றாலும் குர்ஆனுக்கும் நபிமொழிக்கும் சரி, ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தின் நூல்களுக்கும் சரி சற்றும் அறிமுகம் இல்லாத, அந்நிய சிந்தனை தான் அது.
(தொடரும்)