மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இஸ்லாம்

கண்ணியத்திற்குரியவர் யார்?
நபிமொழி விளக்கம் * மௌலானா முஹம்மத் ஃபாரூக்கான் * தமிழில் : அபூ ஹானியா, ஏப்ரல் 16-30, 2025


 

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘மூஸா பின் இம்ரான்(அலை) அவர்கள் இறைவனிடம் வினவினார்கள்: ‘என் அதிபதியே! உன்னுடைய அடியார்களில் உன்னுடைய பார்வையில் மிக அதிக கண்ணியத்துக்கு உரியவர் யார்?’ இறைவன் பதிலளித்தான்: ‘சக்தி பெற்றிருந்த நிலையிலும் மன்னித்து விடுகின்ற மனிதன்(தான் மற்றெல்லா மனிதர்களை விடவும் கண்ணியத்துக்குரியவன்)’.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி) நூல் : பைஹகி


உண்மையில் மனிதன் ஒழுக்கப் படைப்பு ஆவான். அவனுடைய ஒழுக்கம் முழுமை பெறுகின்றபோதுதான் அவன் முழுமையடைகின்றான். ஒழுக்கத் தளத்தில் அவன் எந்த அளவுக்கு உயர்ந்து நின்கின்றானோ அந்த அளவுக்கு அவன் இறைவனாலும் அதிகக் கண்ணியத்துக்குரியவனாக அறிவிக்கப்படுவான். அவனுடைய ஒழுக்கத் தரத்தைப் பொறுத்தே படைப்புகள் மத்தியிலும் அவன் மதிக்கப்படுவான். அவனுடைய ஒழுக்க நிலையின் அடிப்படையில்தான் பிற மனிதர்கள் மத்தியிலும் அவன் மீதான மரியாதை தோன்றும்.

ஒருவர் ஒழுக்கத்திலும் குணத்திலும் உயர்ந்த படிந்தரத்தை அடைந்திருக்கின்றார் என்பதை அறிந்து கொள்வது எப்படி என்பதற்கான விடை இந்த நபிமொழியில் தரப்பட்டுள்ளது. பழிவாங்குகின்ற, தண்டிக்கின்ற சக்தியும் வலிமையும் வாய்ப்பும் பெற்றிருந்தும் அவர் மற்றவர்களின் தவறுகளையும் பிழைகளையும் பொறுத்துக் கொள்கின்றார்; தமக்குக் கேடு விளைவித்தவர்களை மன்னித்துவிடுகின்றார் எனில் அவர் ஒழுக்கத் தளத்தில் உயர்ந்து நிற்கின்றார்; மிக உயர்ந்த படித்தரத்தை அடைந்திருக்கின்றார்; இறைவனிடத்தில் மிக உயர்ந்த இடத்தைப் பெற்றிருக்கின்றார் என்றே அதிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.


குர்ஆன்காரர்கள்


நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘என்னுடைய சமுதாயத்தில் தலைசிறந்தவர்கள் (மிகவும் மேம்பட்டவர்கள் யார் எனில்) குர்ஆன்காரர்கள்; இரவில் விழித்திருந்து தொழுபவர்களும் ஆவர்’

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ்(ரலி) நூல் : பைஹகி


குர்ஆனை ஓதுகின்ற, அதன் கட்டளைகளைப் பின்பற்றி நடக்கின்ற, குர்ஆனுடன் தங்களின் பிணைப்பையும் பற்றையும் வலுவாக அமைத்துக் கொண்டிருக்கின்ற, எங்கேயும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் குர்ஆனின் வழிகாட்டுதலைக் கருத்தில் கொள்கின்ற, குர்ஆனின் பக்கம் மீள்கின்ற, குர்ஆனின் பக்கம் மக்களுக்கு அழைப்பு விடுக்கின்ற, குர்ஆனின் செய்தியை உலகத்தாருக்கு எடுத்துரைக்கின்ற மக்களும், உலகத்தார் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் விழித்தெழுந்து தம்முடைய அதிபதிக்கு முன்னால் சிரம் பணிந்து, தொழுது, அழுது, மன்றாடி இறைஞ்சுகின்ற, தூக்கத்தைத் தொலைத்த அடியார் களும்தாம் என்னுடைய சமுதாயத்தில், என்னைப் பின்பற்றி வாழ்பவர்களில் மிகவும் சிறப்பானவர்கள் ஆவர். இறைவனின் பார்வையிலும் இந்தக் குர்ஆன்காரர்களுக்கும் தூக்கத்தைத் தொலைத்த அடியார்களுக்கும் தனிச் சிறப்பும் அந்தஸ்தும் கிடைக்கத்தானே வேண்டும்.



 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்