நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘தானம் அளிப்பதால் செல்வம் குறைந்து போவதில்லை. (அடியான் பிறரின் குற்றங்களை) மன்னித்துவிடும்போதும் பிழைகளைப் பொறுத்துக்கொள்ளும் போதும் இறைவன் (அந்த) அடியானின் கண்ணியத்தை உயர்த்தி விடுகின்றான். ஒருவர் இறைவனுக்காக பணிவை மேற்கொள்கின்றார் எனில், இறைவன் அதன் பொருட்டு அவனுக்கு உயர்வையும் மாண்பையும்தாம் அளிக்கின்றான்.’
அறிவிப்பாளர் : அபூஹுரைரா(ரலி)
நூல் : முஸ்லிம்
உலகாயதவாதியின் பார்வையும், நோக்கமும் இறைநம்பிக்கையாளனின் பார்வையும் நோக்கமும் முற்றிலும் வெவ்வேறானவை என்பதை இந்த நபிமொழியிலிருந்து நல்ல முறையில் விளங்கிக் கொள்ளலாம். இறைநம்பிக்கையாளனைப் பொறுத்தவரை தானம் செய்வதால் செல்வமும் வளமும் தேய்ந்து போவதுமில்லை; குன்றிப் போவதுமில்லை. மன்னித்துவிடுவதாலோ, பிழைகளைப் பொறுத்துக்கொள்வதாலோ ஒருவரின் கண்ணியம் இங்கு தாழ்ந்து போவதுமில்லை. பணிவை மேற்கொள்வதால் ஒருவரின் மானமும் மரியாதையும் மண்ணோடு மண்ணாய் மட்கிப் போவதுமில்லை. அதற்கு மாறாக, முற்றிலும் நேர்மாறான விளைவுகளையே இந்த நடத்தைகள் ஏற்படுத்துகின்றன. தானங்கள் செய்வது ஒட்டுமொத்த சமூகத்தின் பொருளாதார வளர்ச்சிக்குத்தான் துணை நிற்கின்றது. சமூகத்தில் அதிருப்தியோ, அவநம்பிக்கை நிறைந்த சூழலோ இல்லாமல் போகின்ற போது அதன் பலனும் நன்மையும் தானங்களைச் செய்கின்ற செல்வந்தனுக்கே கிடைக்கின்றன. அவனுடைய வணிகமும் தொழிலும் சிறக்கின்றன; செழிக்கின்றன. இவ்வாறாக அவன் செய்த தானங்களால் அவனுடைய செல்வம் பாதுகாக்கப்படுகின்றது; அவனுடைய தொழிலும் வணிகமும் செழித்தோங்குவதற்கான சாதகமான சூழலும் அவனுக்குக் கிடைக்கின்றது.
பிறர் இழைத்த கொடுமைகளையும் குற்றங்களையும் மன்னித்துவிடுவதும் பொறுத்துக் கொள்வதும் உண்மையில் கனிவும் பரிவும் நிறைந்த செயல்களாகும். இவ்வாறு ஒருவர் பரிவோடும் கனிவோடும் நடந்துகொள்கின்ற போது அது அவருடைய நடத்தையை அழகுபடுத்துகின்றது. அவருடைய ஒட்டுமொத்த ஆளுமையையே மனங்களைக் கொள்ளை கொள்கின்ற ஈர்ப்பாற்றல் கொண்டதாய் மாற்றி விடுகின்றது. முற்றிலும் இதே போன்றே பணிவையும் அடக்கத்தையும் ஒருவர் மேற்கொள்கின்ற போதும் அவை அந்த மனிதரின் நடத்தைக்கு அழகூட்டுகின்றன. அவருடைய ஆளுமையை நேர்த்தியும் ஈர்ப்பும் நிறைந்ததாய் ஆக்கிவிடுகின்றன. மக்களை அவர் பக்கம் அவை திருப்பிவிடுகின்றன. பணிவாக நடந்துகொள்வதால் எந்தவொரு மனிதரும் பாதாளத்தில் போய் விழுந்து விடுவதில்லை. அதற்கு மாறாக கண்ணியமும் மரியாதையும் நிறைந்த உயர்ந்த பீடங்களில்தாம் அந்தப் பணிவும் அடக்கமும் ஒருவரை உயர்த்தி அமர்த்தி விடுகின்றன.