மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சட்ட அமைப்பைச் சீர்குலைக்கும் புதிய குற்றவியல் சட்டங்கள் - பத்திரிகையாளர் சந்திப்பில் ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் கண்டனம்

இஸ்லாம்

உள்ளத்தில் குர்ஆன் இல்லத்தில் ஒளி!
நபிமொழி விளக்கம் * மௌலானா முஹம்மத் ஃபாரூக்கான் * தமிழில் : அபூ ஹானியா, 16-30 OCTOBER 2022


 

குர்ஆன்தான் இதயங்களின் செழிப்புக்குக் காரணமாக அமைகின்றது என்பது இதிலிருந்து தெரிகின்றது. எத்துணை தூய்மையான, அப்பழுக்கற்ற புத்தகம்கூட குர்ஆனுக்கு ஈடாகாது. நம்முடைய இயல்பைப் பற்றிய, நம்முடைய வாழ்வுக்கு அர்த்தம் தருகின்ற சுவை, ருசி, ரசனை ஆகியவற்றைப் பற்றிய அறிமுகத்தை நமக்குத் தருவது குர்ஆன்தான்.

குர்ஆன் நம்முடைய இதயத்து ஒளியாக இருக்கின்றது. அதற்கும் மேலாக நம்முடைய இல்லங்களுக்கும் அழகு சேர்க்கின்ற, செழிப்பைத் தருகின்ற வசந்தமாகவும் குர்ஆன் இருக்கின்றது. இதே போன்று இன்னொரு நபிமொழியில் "உங்களுடைய வீடுகளை அடக்கத்தலங்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்.

திண்ணமாக அத்தியாயம் அல்பகறா ஓதப்படுகின்ற வீட்டை விட்டு ஷைத்தான் வெருண்டோடுகின்றான்' என்றும் சொல்லப்பட்டுள்ளது. (முஸ்லிம், நஸாயீ, திர்மிதி, அபூதாவூத், அஹ்மத்). எந்த வீட்டில் குர்ஆன் ஓதப்படுவதில்லையோ அது இடுகாடுகளைப் போன்று பாழடைந்து இருக்கும்; அந்த வீட்டில் உயிர்த்துடிப்பே இல்லாமல்போகும் என்பது இதிலிருந்து தெரிகின்றது. மனிதர்களுக்கு இந்த உலகத்திலும் சரி, மறுமையிலும் சரி உண்மையான, உயிர்த்துடிப்புமிக்க வாழ்க்கை கிடைத்துவிடக் கூடாது என்றே ஷைத்தான் விரும்புகின்றான். ஆனால் இல்லங்களில் குர்ஆன் ஓதப்படுகின்றபோது அங்கு ஷைத்தானின் மோசடிகளும் ஏமாற்றுதல்களும் செல்லுபடியாவதில்லை.

அத்தியாயம் அல்பகறாதான் குர்ஆன் அத்தியாயங்களிலேயே நீளமான அத்தியாயம் ஆகும். ஷைத்தானின் சூழ்ச்சிகளிலிருந்தும் அவன் விரிக்கின்ற மாய வலைகளிலிருந்தும் தம்மைத் தாமே காப்பாற்றிக் கொள்வதற்கான அனைத்தும் அதில் இருக்கின்றது. இதனால்தான் இந்த நபிமொழியில் அத்தியாயம் அல்பகறா மட்டும் குறிப்பாகச் சொல்லப்பட்டிருக்கின்றது. குர்ஆன் ஓதுதலுக்கும் தொழுகைக்கும் நெருக்கமான தொடர்பு இருக்கின்றது. இதனால்தான் நபிமொழிகளில் குர்ஆனைப் போன்று தொழுகையைக் கொண்டு உங்களின் வீடுகளைச் செழிப்பாக வைத்திருக்கும் படியும் அதனைப் பாழடைந்து போகச் செய்ய வேண்டாம் என்றும் சொல்லப்பட்டது.

அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவிக்கின்றார்; நபிகளார்(ஸல்) கூறினார்கள்: "உங்களுடைய தொழுகைகளின் ஒரு பகுதியை வீடுகளில் நிறைவேற்றுங்கள். அவற்றை அடக்கத்தலங்களாக ஆக்கிவிடாதீர்கள்'. (முஸ்னத் அஹ்மத்). பள்ளிவாசல்களில் மட்டுமின்றி வீடுகளிலும் (உபரியான) தொழுகைகளை நிறைவேற்றிக் கொண்டே இருப்பது ஒருவரின் வாழ்வில் தொழுகை முழுமையாக நுழைந்துவிட்டது என்பதற்கும் அது வெறுமனே இணைப்பாக அவரோடு ஒட்டிக் கொண்டிருக்கவில்லை என்பதற்கும் சான்றாகும்.


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர குர்ஆன் - ஹதீஸ்

மேலும் தேடல்