எளிய மக்களை ஒருபோதும் கேவலமாக, ஏளனமாகப் பார்க்கக்கூடாது. வீட்டுக்குள் நுழைய விடாமல் வாசலிலிருந்தே விரட்டியடிக்கப்படுகின்ற அந்த மனிதர்களில் அல்லாஹ்வுக்கு விருப்பமான அடியார்களும் இருக்கக்கூடும். மேலும் அவர்கள் எந்த அளவுக்கு அல்லாஹ்வின் நேசத்துக்குரியவர்களாக இருப்பார்கள் எனில் அவர்கள் ஏதேனுமோர் விஷயத்தில் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு (எதையேனும்) கூறுவார்களேயானால் அல்லாஹ் அவர்களின் அந்த விருப்பத்தைக் கட்டாயமாக நிறைவேற்றியே தீருவான். அவர்களை ஒருபோதும் நிராசை அடையவோ ஏமாற்றமடையவோ விட மாட்டான்.
"மக்கள் பணிவும் அடக்கமும் நிறைந்த நடத்தையை மேற்கொள்ள வேண்டும்; பெருமை, கர்வம், அகம்பாவம், செருக்கு போன்றவற்றிலிருந்து விலகி இருத்தல் வேண்டும்; எந்தவொரு மனிதரும் வேறு எவரைக் காட்டிலும் கர்வம் கொள்ளக்கூடாது; வேறு எவர்மீதும் எத்தகைய அநீதியையும் அக்கிரமத்தையும் இழைக்கக்கூடாது' என்று எனக்கு வஹி மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அடியானின் உயரத்துக்கு அழகு சேர்க்கின்ற ஆடை பணிவுடைமையும் அடக்கமுடைமையும்தாம். கர்வம், ஆணவம், பெருமை போன்ற ஆடைகளை அணிகின்றபோது மனிதன் தன்னுடைய இயல்பான அழகை இழந்துவிடுகின்றான்.