35. ஏதேனும் ஒன்றை யாருக்காவது வசப்படுத்திக் கொடுப்பதன் வடிவங்கள் இரண்டாகும்.
1. அவரைப் பின்தொடர்ந்து செயல்படுமாறு அதனைச் செய்வது. தான் விரும்பும் விதத்தில் அதில் அவர் அதிகாரம் செலுத்துவதற்கும், விரும்பும் விதத்தில் அதனை அவர் பயன்படுத்துவதற்கும் அவருக்கு உரிமை அளிப்பது.
2. அந்தப் பொருளை எத்தகைய நியதிக்குக் கட்டுப்பட்டதாக ஆக்குவது. அதாவது எந்த நியதியின் விளைவாக அந்த மனிதனுக்குப் பயனளிக்கக்கூடியதாக அது ஆகுமோ, அந்த மனிதருக்குப் பயன்தரும் பணியினை அது செய்யுமோ அத்தகையதொரு நியதிக்குக் கட்டுப்பட்டதாக அதனை ஆக்குவது. உயர்வுமிக்க அல்லாஹ், வானம் பூமியின் அனைத்துப் பொருள்களையும் மனிதனுக்காக ஒரே பொருளில் வசப்படுத்தவில்லை. மாறாக சில பொருள்களை முந்தைய கருத்தில் வசப்படுத்தியுள்ளான். வேறு சில பொருள்களை இரண்டாவது கருத்தில் வசப்படுத்தியுள்ளான். எடுத்துக்காட்டாக, காற்று, தண்ணீர், மண், நெருப்பு, தாவரங்கள், சுரங்கங்கள், கால்நடைகள் ஆகியவை போன்ற எண்ணற்ற பொருள்கள் முந்தைய கருத்தின்படியும் சந்திரன், சூரியன் ஆகியவை இரண்டாவது கருத்தின்படியும் வசப்படுத்தப்பட்டவையாக உள்ளன.
36. வெளிப்படையான அருட்கொடைகள் என்பன, ஏதேனும் ஒரு வகையில் மனிதனால் உணரப்படக்கூடியவையாக உள்ள அல்லது அவனால் அறியப்படக்கூடிய வகையில் உள்ள அருட்கொடைகளைக் குறிக்கும். மறைவான அருட்கொடைகள் என்பன, எந்த அருட்கொடைகளை மனிதன் அறியாமல், உணராமல் இருக்கிறானோ அந்த அருட்கொடைகளைக் குறிக்கும். வகைதொகையற்ற, எண்ணற்ற பொருள்கள் எவ்வாறு உள்ளன எனில், அவை மனிதனின் உடலினுள்ளும் வெளியிலும் இவ்வுலகத்தில் அவனது பயன்பாட்டிற்காகப் பணியாற்றிக்கொண்டு இருக்கின்றன. ஆனால் மனிதனுக்கு அந்தப் பணி பற்றிய விவரம்கூட தெரிவதில்லை.
அதாவது அவனைப் படைத்த இறைவன் அவனைப் பாதுகாப்பதற்காக அவனது ரிஜ்க் எனும் வாழ்வாதார ஏற்பாட்டிற்காக, அவனது வளர்ச்சிக்காக, அவனது வெற்றிக்காக, என்னென்ன சாதனங்களைத் தயார்படுத்தி வைத்திருக்கின்றான் எனும் விவரமேகூட மனிதனுக்குத் தெரிவதில்லை.
அறிவியலின் பலதரப்பட்ட பிரிவுகளில் ஆராய்ச்சி தொடர்பான எத்தனை எட்டுகளை முன்னெடுத்து வைத்து மனிதன் முன்னேறிச் செல்கிறானோ அவற்றிற்கு முன்னால் முன்னெப்போதும் மனிதனுக்கு முற்றிலும் மறைவாக இருந்த அருட்கொடைகள் தெளிவாகிக் கொண்டிருக்கின்றன. மேலும் இன்றுவரையில் அருட்கொடைகளின் மீது விழுந்திருந்த என்னென்ன திரைகளை மனிதன் அகற்றி இருக்கின்றானோ அத்தகைய அருட்கொடைகள், இதுவரையில் திரை அகற்றப்படாதிருக்கக்கூடிய எண்ணற்ற அருட்கொடைகளுக்கு முன்னால் இவ்வளவுதான் என்று வரையறுத்த எந்த எண்ணிக்கையிலும் இல்லை.
37. இது போன்ற பிரச்னைகளில் தொடர்ந்து விவாதித்துக்கொண்டும் ஆய்வு செய்துகொண்டும் இருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக அல்லாஹ் இருக்கிறானா? இல்லையா? அவன் மட்டும் தனித்தவனாக இருக்கின்றானா? மற்ற கடவுளரும் இருக்கிறார்களா? இறைவனின் பண்புகள் யாவை? அவன் எப்படிப்பட்டவன்? படைப்பினங்களுடன் அமைந்துள்ள அவனது தொடர்பு எவ்வகையானது என்பன போன்ற பிரச்னைகளில் விவாதம் தொடர்ந்த வண்ணம் உள்ளது.
38. இத்தகைய அறிவியல் ஆராய்ச்சிக்கான எந்த சாதனமும் அவர்களிடத்தில் இல்லை; அதாவது எதன் துணையால் யதார்த்த நிலையை அவர்களே நேரடியாகக் கண்ணெதிரில் கண்டுகொள்வார்களோ அல்லது அனுபவத்தில் தெரிந்துகொள்வார்களோ அத்தகைய ஆராய்ச்சிக்குரிய எந்த ஒரு சாதனமும் அவர்களிடத்தில் இல்லை. இத்தகைய ஒரு வழிகாட்டியின் வழிகாட்டுதலும் அதாவது சத்தியத்தைக் கண்ணெதிரே நேரடியாகக் கண்டறிந்து அவர்களுக்குக் காண்பித்துக் கொடுத்திருக்கும் எந்த ஒரு வழிகாட்டியின் வழிகாட்டலும் அவர்களுக்கு இல்லை. மேலும் இத்தகைய எந்த ஒரு வேதநூலும் அதாவது அதனை அடிப்படையாக வைத்துத் தங்களது கோட்பாடுகளை வடிவமைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றிருக்கும்படியான எந்த ஒரு வேதநூலும் அவர்களிடத்தில் இல்லை.
39. ஒவ்வொரு மனிதனின் ஒவ்வொரு குடும்பத்தின் ஒவ்வொரு கூட்டத்தின் தந்தையார், பாட்டனார் சத்தியத்தில் இருந்துதான் ஆக வேண்டும் என்பது அவசியமில்லை. அதாவது தந்தையார், பாட்டனார் காலம் முதல் இவ்வழிமுறை வந்துகொண்டிருக்கிறது எனும் விஷயம் மட்டும் இது சத்தியமாகவும் உள்ளது என்பதற்கு ஒருபோதும் ஆதாரம் ஆகாது. எந்த ஓர் அறிவுள்ள மனிதனும் அவனுடைய தந்தையார், பாட்டனார் வழிகேட்டில் இருந்தனர் என்றால், அவனும் கண்ணைப் பொத்திக்கொண்டு அவர்களின் பின்னால் போகக்கூடிய முட்டாள்தனத்தை, இந்தப் பாதை எங்கு சென்றுகொண்டிருக்கிறது என்று ஆய்வுசெய்ய வேண்டிய தேவையை உணராமல் இருக்கும் முட்டாள்தனத்தை அறிவுள்ள மனிதன் செய்ய மாட்டான்.
(தொடரும்)