மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

அல்லாஹ் வடிவமைக்கும் அழகிய சமூகம்

இந்த மாத இந்தியா 12
k. ரியாஸ், 1-15 மார்ச் 2025


இஸ்லாமிய வெறுப்புக் குற்றங்கள்


அவமானகரமான மாற்றம்

1965ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தியா பாகிஸ்தான் போரில் கலந்து கொண்ட இந்தியப் போர் வீரரான வீர் அப்துல் ஹமீதின் நினைவாக, அவரின் பெயரில் இருந்த பள்ளியின் பெயரை உத்தரப்பிரதேச மாநில காஜிப்பூர் கல்வித் துறை அண்மையில் பி.எம்.ஸ்ரீ காம்போசிட் வித்யாலயா தாம்பூர் என்று மாற்றியது. இந்த முடிவை வீர் அப்துல் ஹமீதின் குடும்பத்தினரும், பல அரசியல் தலைவர்களும் விமர்சித்துள்ளனர்.

வீர் அப்துல் ஹமீதின் பேரன் ஜமீல் ஆலம், இந்த மாற்றம் குறித்து தனது ஆழ்ந்த அதிருப்தியை வெளிப்படுத்தினார். நாட்டிற்காக உயர்ந்த தியாகத்தைச் செய்த அவரது தாத்தாவைக் கௌரவிக்கும் வகையில் வீர் அப்துல் ஹமீத் எனப் பள்ளிக்குப் பெயர் சூட்டப்பட்டதாகவும், பள்ளி அதிகாரிகளின் தன்னிச்சையான இந்த முடிவு அவமானகரமானது என்றும் அவர் கூறினார்.

பள்ளியின் பெயரை மீட்டெடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அடிப்படைக் கல்வி அதிகாரியிடம்(BSA) ஆலம் அதிகாரப்பூர்வ புகார் அளித்தார். புகாருக்குப் பதிலளிக்கும் விதமாக, இந்தப் பிரச்னையை ஒப்புக்கொண்ட காஜிப்பூர் கல்வி அதிகாரி ஹேமந்த் ராவ் பள்ளி ஆவணங்களில் வீர் அப்துல் ஹமீதின் பெயர் அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்படவில்லை என்று பள்ளியின் தலைமை ஆசிரியர் தெளிவுபடுத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த விஷயத்தை நேரில் விசாரிப்பதாக ராவ் உறுதியளித்துள்ளார்.

தொடரும் அவலம்

மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தில் கால்நடை வியாபாரி ஜன்பாஸ் குரேஷி இறைச்சிக்காகக் கால்நடைகளைக் கொண்டு சென்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு பசுக் குண்டர்கள் என ஐயப்படும் நான்கு நபர்களால் தாக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட ஜன்பாஸ் குரேஷி, தியுல்கான் ராஜா நகரில் உள்ள கால்நடைச் சந்தையிலிருந்து திரும்பி வந்தபோது, பஜ்ரங் தளத்துடன் தொடர்புடைய நான்கு பேர் அவரைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறி புகார் அளித்தார். ‘நாங்கள் விசாரணையைத் தொடங்கியுள்ளோம். ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை’ என்று காவல்துறை தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது.

மீண்டும் லவ் ஜிஹாத்?

உத்தரப்பிரதேசத்தைப் போலவே, ‘லவ் ஜிஹாத்’ சட்டத்தை வரைவு செய்ய முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையிலான மகாராஷ்டிரா அரசு ஏழு பேர் கொண்ட சிறப்புக் குழுவை அமைத்துள்ளது. காவல்துறை இயக்குநர் ஜெனரல்(DGP) தலைமையிலான இந்தக் குழு, ‘மதங்களுக்கு இடையேயான உறவுகள், கட்டாய மத மாற்றங்கள் தொடர்பான சட்ட அம்சங்களை ஆய்வு செய்யும். இது மற்ற மாநிலங்களில் உள்ள இதே போன்ற சட்டங்களை மதிப்பாய்வு செய்து அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்’ என்று கூறியுள்ளது. அரசாங்க உத்தரவில், ‘லவ் ஜிஹாத், கட்டாய மதமாற்றங்களைத் தடுக்க ஒரு சட்டம் வேண்டும் என்று பல்வேறு அமைப்புகளும் குடிமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தக் குழு சட்ட கட்டமைப்பை ஆராய்ந்து புகார்களை நிவர்த்தி செய்யும்’ என்று கூறப்பட்டுள்ளது.

சமாஜ்வாடி கட்சி MLA ரைஸ் ஷேக் இந்த நடவடிக்கையை விமர்சித்து, ‘லவ் ஜிஹாத் தொடர்பாக ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக அரசாங்கம் கூறுகிறது. ஆனால் அவர்கள் எந்த ஆதாரத்தையும் வழங்கவில்லை. இது வெறும் அரசியல் பரப்புரை மட்டுமே’ என்று கூறினார்.

தொடரும் அத்துமீறல்

மகாராஷ்டிராவின் கல்யாணில் உள்ள ஹாஜி மலாங் தர்காவை இந்து ஆலயமான பாபா மச்சேந்தர் நாத்தின் சமாதி என்று கூறும் இயக்கத்தை வழி நடத்தியவாறு துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தர்காவைப் பார்வையிட்டார். ஷிண்டேவால் ஆரத்தி சடங்கு செய்யப்பட்டது. அவரின் வருகையின்போது, தர்காவில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன. தர்காவில் உரூஸ் பண்டிகையை யொட்டி, இந்துத்துவா அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் ‘ஏக் ஹி நரா, ஏக் ஹி நாம், ஜெய் ஸ்ரீ ராம்’ போன்ற கோஷங்களை எழுப்பி, காவிக் கொடிகளை அசைத்துத் தர்காவிற்குள் ஆரத்தி எடுத்தனர். சமாதிக்குக் காவி துணி போர்த்தினர்.

மறுக்கப்படும் வழிபாட்டு உரிமை

ஸ்ரீநகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜாமியா மஸ்ஜிதில் ஷபே பராஅத் அன்று இரவுத் தொழுகை நடத்த ஜம்மு காஷ்மீர் காவல்துறை அனுமதி மறுத்து மஸ்ஜிதுக்குச் சீல் வைத்தனர். ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இந்த முடிவை ‘இது வாய்ப்புக்கேடானது என்றும் இவை பொது மக்களுக்குச் சட்டம் ஒழுங்கு அமைப்புகள் மீது அவநம்பிக்கை உண்டாக்கக்கூடிய செயலாகும்’ என்று விமர்சித்துள்ளார்.

தொடரும் மாணவர் போராட்டம்

பிப்ரவரி 13ஆம் தேதி அதிகாலை, இரண்டு கடஈ மாணவர்கள் மீது ஜாமியா மில்லியா இஸ்லாமியா பல்கலைக்கழகம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்ததற்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தைத் தொடர்ந்து, ஜாமியா மில்லியா இஸ்லாமியாவைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் டெல்லி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கிய இந்தப் போராட்டம், பல்கலைக்கழக நிர்வாகத்தால் மாணவர் மீதான ஒடுக்குமுறைக்கான மாணவர்களின் எதிர்வினையாக இருந்தது. மாணவர்கள் ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்யக் கோரினர்.

மத்திய உணவகம் உட்பட பல்கலைக்கழகச் சொத்துகளைச் சேதப்படுத்தியதற்கும், பாதுகாப்பு ஆலோசகர் அலுவலகத்தின் வாயிலை உடைத்ததற்கும் போராட்ட மாணவர்கள் தான் பொறுப்பு என்று பல்கலைக்கழகம் கூறியது. இரண்டு கடஈ மாணவர்களுக்கும் ஷோகாஸ் நோட்டீஸ் திரும்பப் பெறுதல், போராட்டங்களைக் கட்டுப்படுத்தும் 2022 அலுவலகக் குறிப்பாணையை ரத்து செய்தல், கிராஃபிட்டி சுவரொட்டிகளுக்கு ரூ.50,000 அபராதத்தை ரத்து செய்தல், மாணவர்கள் எதிர்காலத்தில் போராட்டங்களில் பங்கேற்பதற்காக ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள மாட்டார்கள் என்பதற்கான உத்தரவாதம் ஆகியவை தான் எங்கள் கோரிக்கையென மாணவர் தலைவர் சோனாக்ஷி பகிர்ந்து கொண்டார்.

2019ஆம் ஆண்டு CAA எதிர்ப்புப் போராட்டங்களின் ஆண்டு நிறைவைக் குறிக்கும் நிகழ்வான ‘ஜாமியா எதிர்ப்புத் தினம்’ 2024 டிசம்பர் 15 அன்று ஏற்பாடு செய்வதில் இரண்டு கடஈ மாணவர்களின் ஈடுபாட்டை மதிப்பாய்வு செய்ய ஒழுங்குமுறைக் குழு பிப்ரவரி 25ஆம் தேதி கூட உள்ளது. அமைதியான முறையில் நடத்தப்பட்ட மாணவர்கள் போராட்டத்திற்கு எதிராகப் பல்கலைக்கழகத்திற்குள் காவல்துறையின் ஒடுக்குமுறையை அனுமதித்த நிர்வாகத்தைக் கண்டித்து SIO, MSF போன்ற மாணவர்கள் அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

பொய் வழக்கு

ஆம் ஆத்மி கட்சி(AAP) MLAஅமானத்துல்லா கான் தான் தலைமறைவாக இருப்பதாகக் கூறப்படுவதை மறுத்து, டெல்லி காவல்துறையினர் தன்னை ஒரு பொய்யான வழக்கில் சிக்க வைப்பதாகக் குற்றம் சாட்டினார். டெல்லி காவல் ஆணையர் சஞ்சய் அரோராவுக்கு அனுப்பிய கடிதத்தில், ஓக்லா MLAவான கான், தான் தனது தொகுதியில் இருப்பதாகவும், கைது செய்வதைத் தவிர்க்க முயற்சிக்கவில்லை என்றும் கூறினார்.

ஜாமியா நகரில் போலீஸ் குழுவைத் தாக்கிய ஒரு கும்பலை வழிநடத்தியதாகக் கான் மீது டெல்லி காவல்துறை FIR பதிவு செய்தது. இருப்பினும், கானிடமிருந்து எந்தக் கடிதமும் பெறவில்லை என்று காவல் துணை ஆணையர் (தென்கிழக்கு) ரவிக்குமார் சிங் மறுத்தார். அண்மையில் நடந்த டெல்லி சட்டமன்றத்திற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட அமானத்துல்லா கான், பாஜகவின் மணீஷ் சவுத்ரியை 23,639 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூகத்தின் மீதான தாக்குதல்

தெலுங்கானாவின் ஜஹீராபாத்தில் உள்ள அந்தாரம் கிராமத்தில் தனது தந்தை முஹம்மது இஸ்மாயீலை ஒரு கும்பலிடமிருந்து பாதுகாக்கும் போது தாக்கப்பட்டதில் 15 வயது ஆலியா பேகம் கொல்லப்பட்டார். வீரா ரெட்டியின் வீட்டிற்கு அருகில் முஹம்மது இஸ்மாயீல் சிறுநீர் கழித்ததாகக் கூறி விஜய் ரெட்டியும், அவர்களுடன் சுமார் 40 பேரும் அவரைத் தாக்கினர். ஆலியா தனது தந்தையைக் காப்பாற்ற விரைந்தார். ஆனால் அவர் கற்களால் தாக்கப்பட்டார். ‘இது ஒரு குடும்பத்தின் மீதான தாக்குதல் மட்டுமல்ல, முழுச் சமூகத்தின் மீதான தாக்குதல். நீதி கிடைக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம்’ என்று துக்கத்தில் இருக்கும் குடும்பத்தைப் பார்வையிட்ட AIMIM MLA கவுசர் மொஹியுதீன் கூறினார்.

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தொடர்

மேலும் தேடல்