‘ப்ரியா எதற்கு லீவ் சாலிஹா!’
‘தெரியல மேடம்’. சாலிஹாவும் இடத்தை விட்டு மெதுவாக நகன்றாள். சிறிது நேரத்தில் கூஙகு 50யில் ப்ரியா வந்து இறங்கினாள்.
‘வா.. ப்ரியா..!’ அன்பாக வரவேற்றாள் சைதா மேடம்.
சாலிஹா ப்ரட்டுகளைத் தட்டில் அடுக்கி வந்தாள். முபீன் அங்குள்ள டேபிளை ஒழுங்குபடுத்தினாள்.
‘வாங்க ப்ரியா!’ லைட்கலர் நேவி ப்ளு அமெரிக்கன் ஷிஃபான் சேலையில் காலையில் பூத்த புதுமலர் போல் களையாக இருந்தாள். சாலிஹா வாங்க என்று சொன்னதைக் காதில் வாங்காமல் அலட்சியமாக சைதாவிடம் உரையாடினாள். பெரும்பாலும் அவர்களின் உரையாடல் ஆங்கிலத்திலேயே அமையும்.
‘முபீன் டெக்கை ஆன் பண்ணு. இந்த கேசட்டைப் போடு’
கூங ஓட ஆரம்பித்தது.
‘ப்ரியா..! ஷோலே படம் பார்த்திருக்கியா?’
‘இல்ல மேடம்’
கப்பர் சிங் கர்ஜித்தான். சாட்டையைச் சொடுக்கினான். உடைத்துச் சிதறிக் கிடந்த கண்ணாடிச் சில்லுகளின் மேல் ஹேமமாலினி நாட்டியமாடினாள். சைதாமேடத்தைப் பார்க் கும்போது, சாலிஹாவிற்குக் கப்பர் சிங் போலத் தெரிந்தது. ப்ரியா தன்னைப் பார்க்க மாட்டாளா? சைதாவிடம் ஆஸ்பத்திரி விசயம் ஏதும் சொல்ல வேண்டாம் என்று சைகையிலாவது சொல்ல நினைத்தாள். ஊஹும்! அவள் திரும்பிப் பார்த்தாளில்லை.
‘எதற்கு லீவ் ப்ரியா?’
ப்ரியா சொல்லச் சொல்ல, சைதாவின் வெள்ளை வெளேறென்ற முகம் சிவப்புச் சூரியனாகக் கொதித்தது. வெடித்துக் கக்கப் போகும் அக்னிக் குழம்புகளை எதிர்கொள்ள சாலிஹா தன்னைத் தயார் படுத்தினாள்.
‘ஏன் ப்ரியா இரண்டு நாள் லீவ்? உடல் நிலை சரியில்லையா? ஊரில் எல்லோரும் நலம்தானே?’ சைதா மேடம் ப்ரியா டீச்சரிடம் அக்கறையுடன் ஆங்கிலத்தில் உரையாடினாள்.
‘நான் லீவு போட்டேனா? உங்கள் வார்டன் ஒன்றும் சொல்லவில்லையா?’
‘என்ன நடந்தது?’ சாலிஹாவைத் திரும்பிப் பார்த்தாள் சைதா. சாலிஹாவிற்கு உதறல் எடுத்தது. மீண்டும் ப்ரியாவைப் பார்த்து ‘சொல்லு ப்ரியா’ என்றாள்.
‘மேம் எத்தனை பள்ளிகளில் என்னை அழைத்தும் உங்கள் குணத்திற்காக நான் இந்த அத்துவானக் காட்டில் வீடெடுத்து பள்ளிக்கூடத்திற்காக, இந்தப் பிள்ளைகளுக்காக உழைக்கிறேன். இரண்டு நாள்களாக வெளியிலிருந்து வரும் நான்கு பிள்ளைகளோடு இருந்தோம். மூன்றாம் நாள் வெறும் பள்ளியில் ஈ ஓட்ட எனக்கு என்ன தலையெழுத்தா? நானே ஸ்கூலுக்கு லீவ் போட்டுட்டேன்’
‘என்ன ஸ்கூலே லீவா?’
‘எஸ்! மேம்.!’
‘ஒரு பிள்ளையும் லீவு சொல்லவுமில்லை. லீவ் லெட்டர் கொடுக்கவுமில்லை’
உட்கார்ந்த இடத்திலிருந்து சைதா எழுந்தõள். ‘என்ன ஆச்சு சாலிஹா! இது என் ஸ்கூலா? இல்லை உன் மதரஸாவா? எப்போதிருந்து நீ இந்த ஹோமிற்கு கரஸ்பாண்டண்டு ஆனாய்?’
சாலிஹாவின் அருகில் பெண் சிங்கமாய்க் கர்ஜித்தாள் சைதா. உண்மை பேசவும் தைரியம் வேண்டுமோ? வாயைத் திறந்தாள். காற்று தான் வெளிவந்தது. நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. சரோஜாமா உதவிக்கு ஓடி வந்தாள்.
‘அம்மா..! பிள்ளைங்களுக்கு வாந்தி பேதி ஆயிட்டுமா! பாவம் அம்மா ஆஸ்பத்திரில ரெண்டு மூணுநாளா இதுகளோட கிடந்தாங்க. பிள்ளைகளும் நஞ்சி போயிட்டுங்க. அதான் பள்ளிக்குப் போகலீங்கம்மா..!’
‘எந்த மேடத்திற்காவது சொன்னீங்களா?’
‘இல்லை மேடம்’ முபீன் தலையாட்டினாள்.
‘ஷிட்! என்ன தைரியம். ஏதாவது ஆயிருந்தா யார் பதில் சொல்லுவாங்க. செய்வதையும் செய்துவிட்டு ஊமைக்கோட்டானாய் நிற்ப தைப் பார்! வாயைத் திறந்து பதில் சொல்’ அதட்டல் அதிகமானது.
‘மேடம்! யாருக்கும் சொல்லி சங்கடப்படுத்த மனமில்லை. நடு ராத்திரிக்கு மேல் நடந்தது. வயிற்றுவலியால் பிள்ளைகள் துடித்ததால் அவர்களை டாக்டரிடம் காட்ட வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியிருந்தது’
மீதிக் கதைகளையும் சொல்லி முடித்தாள். இனி தான் செய்த வேலைக்கு நன்றி சொல்லலாம். தன்னை தட்டிக் கொடுக்கலாம். உன்னைப் போல வார்டன் கிடைக்க நாங்கள் என்ன தவம் செய்தோமோ? என்று சொல்லலாம். கணக்கு தப்பாகி விட்டது.
‘உன் அதிக பிரசங்கித்தனத்திற்கு அளவில்லாமல் போய்விட்டது. கண்டதையும் செய்து கொடுத்து பிள்ளைகளின் வயிற்றைக் கெடுத்து ஃபுட் பாய்சன் ஆக்கிவிட்டாய். நான் இந்தப் பிள்ளைகளை எவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டுவந்து வளர்க்கிறேன். நீ ஈஸியாக சாகடிக்கப் பாக்குறியா? உன் மேல் கேஸ் போட்டு உள்ளே தள்ளிடுவேன்’
‘கேஸா? நானென்ன தப்பு செய்தேன்?’
சாலிஹாவின் சிந்தனை தாறுமாறாய் ஓடியது. இப்படித்தான் மூன்று மாதம் முன்னால் சாலிஹாவின் தந்தை இறந்துவிட்டார் என்று லீவு கேட்டதற்கு வானத்திற்கும் பூமிக்குமாய் குதித்தாள்.
‘அப்பால்லாம் இறந்தால் போக வேண்டும் என்று கட்டாயமில்லை’ என்றாள்தன் கணவர் இறந்த அடுத்த ஆண்டே தந்தை இறந்தது பேரிழப்பாகவே இருந்தது. அந்தத் துக்கத்தை விட இவள் போக வேண்டியதில்லை என்று சொல்வதே மிகப் பெரும் துக்கமாக இருந்தது. துணிந்து கேட்டே விட்டாள்.
‘நீங்கள் முஸ்லிம்தானா? இஸ்லாமியச் சட்டங்கள் தெரியுமா? இறந்தது என் தந்தை. என்னைப் பெற்றவர். போக வேண்டியதில்லை என்று சொல்ல
நீங்கள் யார்?’
‘முஸ்லிம்தானா?’ என்ற கேள்வி சைதா மேடத்தை சாட்டையைக் கொண்டு அடித்தாற் போலிருந்தது. அந்தக் கோபத்தை வைத்துக் கொண்டு இன்று கேஸ் போட்டு விடுவேன் என்கின்றாள்.
‘வியாதி கொடுத்தவன் குணமாக்கி விட்டான். அதற்கு சந்தோசப்படுங்கள்’ என்றாள் சாலிஹா!
‘உன் வாசலில் வந்து வியாதி கொடுத் தானா? எத்தனை கிலோ வாங்கினாய்?’ எகத்தாளமாகக் கேட்டாள் சைதா மேடம். ப்ரியா டீச்சரின் முகம் சந்தோசப்படுவதைப்போல் தோணியது சாலிஹாவிற்கு!
தன்னை விட வயதிலும், அனுபவத்திலும் குறைந்த ப்ரியாவின் முன்னால் ஒரு குற்றவாளியைப்போல நிறுத்தி கேள்வி கேட்டதும், வாயில் வந்தவாறு பேசுவதும் சாலிஹாவினால் பொறுக்க முடிவில்லை.
‘போதும் மேடம். என்னால் இனி ஒருநாளும் இங்கு இருக்க முடியாது. நான் ஊருக்குப் போகிறேன்’
துணிச்சலுடன் கூறிவிட்டு, தன் அறைக்குள் சென்று கதவைத் தாழ் போட்டாள். வாயில் புடவையை வைத்துக்கொண்டு நெஞ்சு வெடித்து விடும் போல அழ ஆரம்பித்தாள், சாலிஹா!
சாலிஹா முடிவு செய்துவிட்டாள். இனி இந்தத் தலைவிக்குக் கீழ் வேலை செய்தால் நாம் ஒழுங்காக இருக்க முடியாது. நிம்மதியாகக் கழிக்கவும் முடியாது. குளவி தன் பிள்ளையைக் கொட்டி, கொட்டி உருவாக்குமாம். இறுதியில் அது முழுமை பெறும்போது அழகிய வண்ணத்துப்பூச்சி போன்றும், பறக்கும் பட்சியைப் போன்றும் மாறி சிறகடித்துப் பறக்குமாம். ஆனால் இது அதுவல்ல. தேள். கொட்டக் கொட்ட விஷம் ஏறுகிறது. அனுசரிப்பும் இல்லை, ஆதரவும் இல்லை. எப்போது வந்தாலும் கரித்துக் கொட்டிக் கொண்டு எதிரியைப் பார்ப்பது போல. இனி தாங்காது.
அறையை விட்டு வெளியில் வந்தாள் சாலிஹா. ப்ரியா போய் வெகுநேரமாகி இருந்தது. சைதா மேடம் ஏதோ மேகஸினை புரட்டிக் கொண்டிருந்தாள்.
‘மேடம் எனக்கு ஒருமாதம் லீவு வேண்டும். நான் ஊரில் போய் ரெஸ்ட் எடுக்க வேண்டும்’
‘எப்போ டிக்கட் போட?’
‘எப்போது வேண்டுமானாலும் போடுங்கள்’
‘எப்போது திரும்பி வருவாய்?’ திரும்ப வருவதா? யோசித்தாள். இவளிடம் தந்திரமாகப் பேசியே கழன்று கொள்ள வேண்டும்.
‘நான் போய்ச் சொல்லுகிறேன் மேடம்’
‘சரி.. இந்தப் பேப்பரில் கையெழுத்துப் போடு’
அந்த வெள்ளை வெற்றுத்தாளைப் பார்த்தாள். ‘எதற்கு மேடம்?’
‘சொன்னால் செய்?’
பயமாக இருந்தது. ‘ஒன்றும் இதில் எழுத வில்லையே?’
‘ஆமாம்! பெரிய லேண்டு மிராசுதாரினி, உன் சொத்தை எழுதி வாங்க கையெழுத்துப் போடச் சொல்கிறேன்’
‘இல்லை மேடம்! ஏதாவது எழுதிக் கொடுங்கள். எனக்குச் சம்பந்தம் இருந்தால் போடுகிறேன்’
சைதா மேடம் வேகமாக எழுதி நீட்டினாள். இங்கு நான் போன பிறகு அசம்பாவிதம் ஏதும் நடந்தால் நான் தான் பொறுப்பு.
இது என்ன பொல்லாத்தனம். நான் போன பிறகு என்ன சம்பவம் நடக்கும். அதற்கு நான் எப்படிப் பொறுப்பாக முடியும். வெள்ளேந்தியாக இருப்பதால் தன்னை மிரட்டி பணியவைக்கப் பார்க்கிறாளா?
இவளுடைய ஹாஸ்டலுக்கு ஆள் வேண்டுமென்றால், நல்லபடியாக வைத்துக் கொள்ள வேண்டும். அதைவிட்டு, ஓவராகப் பேசுவதும், மிரட்டுவதும் ஊஹும்! இவளுக்குப் பணியக்கூடாது.
‘கையெழுத்துப் போடமாட்டேன். என்னைக் கொண்டுவந்து சேர்த்த ஆப்பாவை வரச்சொல்லுங்க!’
‘ஓஹோ! எல்லாம் சாஜிதா கொடுக்கும் இடமா? உன்னை தீவிரவாதி என்று உள்ளே போட்டால் சரியா வருவே!’
தீவிரவாதியா? இது என்னடா புதுக்குழப்பமாக உள்ளது. நிஜமாகவே தீவிரவாதி ஆக்கிவிடுவாளோ? கையெழுத்துப் போடவில்லை என்றவுடன் வேகமாகக் கேட்டைத் திறந்து வெளியேறினாள் சைதா மேடம். முபீன் கேட் சாவியைத் தூக்கிக்கொண்டு ஓடினாள். கார் போனதும் கேட்டைப் பூட்டி உள்ளே வந்தாள். சாலிஹாவின் அருகில் தொப்பென்று உட்கார்ந்தாள்.
(தொடரும்)