‘ஏன் ஆண்ட்டி ஊருக்குப் போறேன்னீங்க! அதான் மேடம் அப்படிச் சொல்லுறாங்க!’
‘உங்க மேடம் சொல்றதுக்கெல்லாம் தலை ஆட்டிக்கிட்டே இருக்க வேற ஆளைப்பாருங்க!’
‘அதனால தான் ஆண்ட்டி இங்க அம்பது நாளைக்கி மேல யாரும் இருக்க மாட்டாங்க! இருந்தா இந்த ப்ரியா ஏதாவது ப்ராப்ளம் பண்ணும்’
‘நீங்கதான் இவ்ளோ நாள் இருந்திருக்கீங்க! பிள்ளைகளெல்லாம் பாசமா ஒட்டி இருப்பது அவங்களுக்குப் பிடிக்கல’
‘நீங்க இருந்து சாதிங்க ஆண்ட்டி’
‘இல்லை முபீன். இங்கேயே இருப்பது மதிப்பில்லை. கொஞ்ச நாள் போய் வந்தால் சரியாகிடும்’
‘அப்ப எக்ஸாம் முடிந்து போங்க!’
சரோஜாமா வந்தாள்.
‘வாங்கம்மா சாப்பிடலாம். பிள்ளைகளெல்லாம் சாப்பிட்டாச்சு’எழுந்து சாப்பிடப் போனாள்.
‘எல்லாப் பிள்ளைகளும் சாப்பிட்டாச்சா.. சரோஜாமா?’
‘ஆமாமா! நீங்க அறைக்குள் போனதும் ப்ரியாவுடன் மேடமும் சாப்பிட்டார்கள். நாளையிலிருந்து ஒழுங்காக ஸ்கூல் போக வேண்டும் என்று சொல்லிட்டுப் போயிருக்காங்க!’
சாயிஸ்தா, சாலிஹாவிற்குப் பக்கத்தில் வந்து நின்றாள். ‘அம்மி!’ என்று அழைத்தாள்.
‘என்ன? சொல்லு’
‘நீங்க நிறைய முறை கேட்டபோதெல்லாம் நான் உங்ககிட்ட சரியாகப் பேசவில்லை. நீங்க, ஹாஸ்பிடலில் எங்களைக் கவனித்தது வாழ்க்கையில் மறக்கவே முடியாது’
‘சாயிஸ்தா! உங்க வீட்டில் யாரெல்லாம் இருக்காங்க?’ என்ன கவலையென்றாலும், தன்னிடம் பேசும் பிள்ளைகளிடம் ஆதரவாக, அரவணைப்பாகப் பேசுவது சாலிஹாவின் பழக்கம்.
‘எங்க பாபாவின் பெயர் முஹம்மத் ஹுசைன். நானும் அம்மாவும், இரண்டு தம்பிகளுடன் குஜராத்தில் கலவரம் நடந்த பகுதியிலிருந்து வேறிடத்திற்குப் புறப்பட்டோம். சாலையின் ஒரு பக்கம் ஆறுமாதக் கைக்குழந்தையுடன் அம்மா வந்தாங்க. பாபா சாலையின் மறுபக்கம் என்னையும், இன்னொரு தம்பியையும் பிடித்துக் கொண்டிருந்தார். அம்மி வரக் காத்திருந்தார். அம்மி, பாபாவின் அருகில் வரும் முன்னால் ஒரு துப்பாக்கிக் குண்டு அவர் மீது பாய்ந்தது. போலீஸ் தான் சுட்டது. அது அவர் தலையின் ஒரு பக்கம் துளைத்து மறுபக்கம் வெளி வந்தது. என் அருகிலேயே அங்கேயே சாய்ந்து விட்டார்.
என் அம்மி கைப்பிள்ளையுடன் கத்தினார், கதறினார். பாபாவை நெருங்க விடாமல் எங்களையும் தாக்கினார்கள். பாபாவின் தலையிலிருந்து ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. அதற்குள் ஒருவெறிக் கும்பல் அங்கு வந்து பாபாவின் மேல் மண்ணெண்ணெய் ஊற்றியது. அத்தோடு அவர் மேல் சைக்கிள் டயர்களைப் போட்டு தீ வைத்தது. என் அம்மி கதறியதைப் பார்த்து அடுத்து அவர்களுக்குக் குறி வைத்தனர். ஆபத்தை உணர்ந்த அம்மி எங்கள் மூவரையும் பிடித்துக்கொண்டு கோபிநாத் சொசைட்டியை நோக்கி ஓடினார். என் நான்கு வயது தம்பி நேரடியாக அனைத்தையும் பார்த்ததும், தந்தையை இழந்த அதிர்ச்சியிலிருந்தும் அந்தப் பிஞ்சு மனம் இன்னும் மீளவில்லை’.
சாயிஸ்தா சொல்லச் சொல்ல சாலிஹாவின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. என்ன ஒரு கொடுமை! தோளிலும் மார்பிலும் தூக்கி வளர்த்த தந்தையை கண் முன்னால் தோட்டாக்கள் துளைத்தால், அதற்குமேல் அவர்களின் அருகிலும் செல்ல முடியாமல், தீ வைத்துக் கொளுத்தினால் அந்தப் பிஞ்சு மனங்கள் தான் என்ன பாடுபடும்? கட்டிய மனைவி மூன்று பிள்ளைகளைக் காப்பாளா? கொண்டவனைக் காப்பாளா? இதயத்தில் இனம் தெரியாத வலி ஏற்பட்டது. சாலிஹா அழுவதைப் பார்த்து எல்லாப் பிள்ளைகளும் ஓடிவந்து சூழ்ந்து கொண்டார்கள்.
‘அம்மி என்னாச்சு?’
‘சாயிஸ்தா, அவள் டாடியின் மரணம் பற்றிச் சொன்னதால் அம்மி அழுறாங்க! இங்கே நாற்பது பேர் இருக்கிறோம் அம்மி! ஆனால் நாலாயிரம் கதைகள் இருக்கு.
நீங்கள் கேட்டது எங்களின் சில கதைகள்தான். எங்கள் கண்கள் கண்ட காட்சிகளையெல்லாம் சொன்னால் ஒருவரும் நம்ப மாட்டார்கள். எங்கள் சின்ன இதயங்கள் அச்சத்தால் இறுகிப் போய்க் கிடக்கிறது. இங்கு வந்த பிறகு கொஞ்சம் பயம் போய் உயிர் வாழ ஆசை வந்துள்ளது. நாங்கள் படிக்க வேண்டும். உயர வேண்டும். பழிவாங்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அதே இடத்திற்கு நாங்கள் மீண்டும் போக வேண்டும். உயர்ந்த நிலையில் மற்றவர்களுக்கு உதவ வேண்டும்’. குல்ஹப்ஸா குரலில் உறுதிகொண்டு பேசினாள்.
‘அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான். உங்கள் எண்ணங்கள் ஈடேற்றம் அடையட்டும்’ சாலிஹா வாழ்த்தினாள்.
குஜராத் கலவரம் நடந்தது. சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் கொளுத்தப்பட்டது. அங்கு கடுமையான இனஅழிப்பு நடந்தது. முஸ்லிம்கள் கொல்லப்பட்டார்கள். அவர்கள் பொருளாதாரம் சூறையாடப்பட்டது என்று கேள்விப்பட்டேன், படித்தேன். ஆனால் இந்த அளவுக்குக் கொடூரமாக இருக்கும் என்று கற்பனை செய்து கூட பார்த்ததில்லை. ஹுமைரா, சாலிஹாவின் முன்வந்தாள். ‘அம்மி கவ்ஸர் பானுவைத் தெரியுமா?’
‘அவள் யார் மா?’
‘அவள் எங்க ஊர்தான். சித்தப்பாவின் மனைவி. நரோடா பாட்டியாவில் வசித்தார்கள்’
‘என்னமா நடந்தது. இப்போ எங்கே இருக்காங்க?’
ஹுமைரா, தன் கைகளை வானத்தின் பக்கம் உயர்த்திக் காண்பித்தாள். பிள்ளைகளில் கொஞ்சம் வயதில் மூத்தவள். பக்குவ மாகப் பேசக்கூடியவள். தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருப்பாள். ஏதும் கேள்வி கேட்டால் ஒரே வரியில் பதில் சொல்லி அந்த இடத்தை விட்டு அகன்று விடக்கூடியவள். இன்று தானாக வந்து செய்தி சொல்கிறாள். அவளைத் தன் அருகில் அமர்த்தி ‘சொல்லுமா’ என்றாள்.
‘எங்க சித்தி கவ்ஸர் பானு 9 மாதக் கர்ப்பிணியாக இருந்தாள். அவளது வயிற்றைக் கிழித்து, கருவை வெளியே எடுத்து கயவர்கள் அதனை ஒரு வாளில் குத்திப் பிடித்தார்கள். பின்னர்
அதனைத் தரையில் ஓங்கி அடித்து தீயில்வீசினார்கள்’
‘அல்லாஹ்வே! இதெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்?’
‘அம்மி! தப்பிப் பிழைத்தவர்கள் அகதி களாக்கப்பட்டு முகாம்களில் வந்து சேர்ந்தோம். புதுமுகங்கள், அறிமுகமில்லாத சொந்தங்கள், அழுகை, விரக்தி, சொல்ல இயலாத் துயரங்கள், பசி, தாகம், இழப்பின் சோகங்கள் இவையே மனிதர்களுடன் அடைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்தக் கொடூரங்களைத் தப்பிப் பிழைத்தவர்களிடம் வந்து வாக்குமூலங்களைச் சேகரித்தனர். அங்கிருந்த இரண்டு லட்சம் அகதிகளிடம் பல தகவல்களைத் தொகுத்து ஆவணப்படுத்தியதாகக் கூறினார்கள்’
‘ஆறு வயது இம்ரான் தண்ணீர் கேட்டான். அந்தக் கயவர்கள் தண்ணீருக்குப் பதிலாகப் பெட்ரோலை அவன் வாயில் ஊற்றினார்கள். பின்னர் ஒரு தீக்குச்சியைக் கிழித்து அவன் வாயில் போட்டனர். அந்தச் சிறுவன் குண்டு வெடித்துச் சிதறியதைப்போல வெடித்துச் சிதறி இறந்தான்’
‘இதை யாரும் தடுக்கவில்லையா? நான் பிள்ளை தான் பெறவில்லை. ஆனால் பிள்ளை ஆசைகளால் நிரப்பப்பட்ட பெண்ணாகத்தான் இருக்கிறேன். என்ன கொடுமை இது?’
இதில் தப்பித்தவர் என் சித்தி கவ்ஸர் பானுவின் தந்தை மட்டுமே! அவர் மகன் 14 வயதான ஜாவீத் இஸ்மாயீலுடன் உயிர் பிழைத்தார். அவரது கண் முன்னால் நடந்ததை அவர் வாக்குமூலம் கொடுத்தார். கர்ப்பிணி மகள் உட்பட தனது குடும்பத்தில் ஆறு பேர்களை இழந்த கவ்ஸர் பானுவின் தந்தைக்கு 76 வயது.
சாலிஹா முன்பொருமுறை பத்திரிகையில் படித்ததை நினைவு கூர்ந்தாள். ஆட்சியாளர்கள் இந்த வன்முறைகளையும், வன்புணர்ச்சிகளையும், வன்கொலைகளையும் நியாயப்படுத்திப் பேசியது. குஜராத்தின் அன்றைய முதல்வர் ‘ஒவ்வொரு வினைக்கும் ஓர் எதிர்வினை உண்டு’ என்று பேசினார். கருவிலிருந்த சிசுவும், ஐந்து மாதக் குழந்தையும் கொல்லப்பட்டது, குரூரமனம் படைத்தவர்கள் நடத்திய இன அழிப்புப் படுகொலை நம் காலத்தின் அழிக்க முடியாத வடு. நமக்கு இது செய்தி. ஆனால் இந்தப் பிள்ளைகளுக்கு இது வாழ்க்கை. நினைக்கும் போதே சாலிஹாவின் இதயம் வெடித்துவிடும்போல் இருந்தது. பிள்ளைகளைச் சேர்த்து அணைத்துக் கொண்டாள். கண்ணீர் வெள்ள மாய்ப் பெருகியது.
(தொடரும்)