மனிதனின் உடல் உறுப்புகளில் மிகவும் இன்றியமையாத ஓர் உறுப்பு நாக்கு. ஒருவரின் ஈருலக வெற்றியைத் தீர்மானிப்பதில் இந்தச் சிறு உறுப்புக்குப் பெரும் பங்கு உண்டு. எனவே அது மிகக் கவனமாகக் கையாளப்பட வேண்டும். போக்கினால் கெட்ட மனிதரைக் காட்டிலும் நாக்கினால் கெட்ட மனிதர்களே இந்தப் புவியில் அதிகம்.
நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையையும் மிகக் கவனமாக அமைத்துக் கொள்ள வேண்டும்; வார்த்தைகள்தான் சிந்தனைகளை உருவாக்குகின்றன; சிந்தனைகளே உணர்வுகளைத் தோற்றுவிக்கின்றன. நமது வார்த்தைகள் நேர்மறையானவையாக அமைந்து விடுகின்றபோது நமது சிந்தனைகளும் நேர்மறையானவையாக அமையும். நமது உணர்வுகளும் நேர்மறையானவையாக அமைந்து விடும். இதன் விளைவாக வாழ்வும் சுபமாக, சுகமாக இருக்கும்.
நாம் பிறரோடு உரையாடும் போதும் நேர்மறையான, சுபமான வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும். அவை அவர்களின் வாழ்வில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்த வல்லவை. மாற்றமாக நாம் பேசும் போது எதிர்மறையான வார்த்தைகள் பிறந்தால் நிச்சயமாக அவை கேட்போரின் வாழ்வில் பாதகமான பாதிப்புகளைத் தோற்றுவிக்கும் என்பது மிகப்பெரியதோர் உண்மை.
வார்த்தைகளுக்கு மிகப்பெரிய வலிமை உண்டு. வார்த்தைகள் மூலம் ஒருவரை வாழ வைக்கவும் முடியும்; கொன்று விடவும் முடியும். வீசப்படும் கல்லிலும் பேசப்படும் சொல்லிலும் கவனமாக இருங்கள்; கல் உயிரைக் கொல்லும்; சொல் உயிரோடு கொல்லும் என்பார்கள். வார்த்தை என்பது ஏணியைப் போன்றது. ஏற்றியும் விடும்; இறக்கியும் விடும்; நீங்கள் உபயோகிப்பதைப் பொறுத்து என்றும் சொல்வார்கள். நமது வாயிலிருந்து வெளிவரும் வார்த்தைகள் பிறரை மகிழ்ச்சிப் படுத்துவதாகவும், எந்த வகையிலும் பிறரைக் காயப்படுத்தாததாகவும் அமைய வேண்டும்.
ஒருவரோடு பேசும்போது சூழ்நிலைக்கு ஏற்ற வகையில் சிந்தித்து நிதானமாகப் பேச வேண்டும். வாழ்க்கையில் வசந்தம் வீச வேண்டும் என்றால் நாம் வீசும் வார்த்தைகள் சுபமானவையாகவும், சுகமானவையாகவும் அமையட்டும். நமது உலக வாழ்வின் வெற்றியை மட்டுமன்றி நமது மறுமை வாழ்வின் வெற்றியைத் தீர்மானிப்பதிலும் வார்த்தைகளுக்கு பெரிய பங்கு உண்டு. ‘பேசும் நல்ல வார்த்தை தர்மமாகும்’ என்பது நபிமொழி. ‘மனிதர்களை அதிகமாக நரகில் கொண்டு போய் குப்புற வீழ்த்துவது அவர்களின் நாவுகளின் அறுவடையே’ என்பது நபியவர்களின் எச்சரிக்கை.
நமது வாழ்க்கையையும் அடுத்தவர் வாழ்க்கையையும் தீர்மானிப்பதில் நாம் பேசும் வார்த்தைகளுக்குப் பெரிய பங்கு உண்டு என்பதை நாம் நினைவில் கொள்வோம்.