மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இந்த மாத இந்தியா

உச்சி முதல் உள்ளங்கால் வரை 6
கே.ரஹ்மத்துல்லாஹ் மஹ்ளரீ, ஏப்ரல் 1-16, 2025



நாம் சிந்தித்து விளங்குவதற்காக எல்லாம் வல்ல இறைவன் நமக்கு மூளையை வழங்கியுள்ளான். அதை ஓர் ‘உயிர் கம்ப்யூட்டர்’ என்று கூடச் சொல்லலாம். அதன் பாதுகõப்புக்காக மெல்லிய ஜவ்வால் அதை அல்லாஹ் போர்த்தினான். மேலும் இந்த ஜவ்வுக்கும் மூளைக்கும் நடுவே வழிந்தோடும் ஒரு திரவத்தை அமைத்தான்.

குளிர், வெயில், அதிர்வு போன்றவற்றிலிருந்து பாதுகாப்பதற்கான உறுதியான மண்டை ஓட்டால் மூளையை மூடினான். மிருதுவான இந்த மூளையைப் பாதுகாப்பதற்காக இவ்வளவு உறுதியான பாதுகாப்பு ஏற்பாட்டைச் செய்த அந்த இறைவன் எவ்வளவு பேராற்றல் மிக்கவன். மூளையில்  சிந்திக்கவும் எதையும் விளங்கவும் நிறைய விசயங்களை நினைவில் வைக்கவும் திறனை வழங்கினான்.

அனைத்தையும் பாதுகாக்கும் திறனை அல்லாஹ் மூளைக்கு வழங்காதிருந்தால், நமக்கு எவ்வளவு பெரிய சிரமம் ஏற்பட்டிருக்கும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். நமது உடல் உறுப்புகளில் மிகவும் மர்மமான உறுப்பு மூளைதான். மூளையைப் பற்றி ஆய்வு செய்யும்போது கூட மூளையைத்தான் நாம் பயன்படுத்துகிறோம் என்பது சுவாரஸ்யமான விஷயம்தான். இதயத்துக்கு அடுத்தபடியாக நமது உடலில் மிக முக்கியமான உறுப்பு இது. நமது நினைவுகள்,  ஆளுமை,  அறிவாற்றல், நடவடிக்கை என எல்லாவற்றையும் முறைப்படுத்துவது மூளை தான். மூளை குறித்த சுவாரஸ்யமான தகவல்கள் சிலவற்றைப் பார்ப்போம்!

1. மூளைக்கு வலி தெரியாது. ஏனென்றால், அதற்கு வலியை உணரும் வலி வாங்கிகள் இல்லை. நமது மண்டை ஓட்டுக்குள் மூளை நகரும்போதும் உந்தும் போதும் அது வலியை உணராது.

2. நாம் விழித்திருக்கும்போதே நமது மூளையில் அறுவை சிகிச்சை செய்ய முடியும். வலி வாங்கிகள் இல்லாததால் இது சாத்தியமாகிறது. மயக்க நிலையில் மூளை அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் விரும்ப மாட்டார்கள். ஏனென்றால், நமது மூளையின் செயல்பாடுகளை உணர்வுடன் இருக்கும்போதுதான் டாக்டர்களால் அறிய முடியும்.

3. இருபத்தி ஐந்து வாட்ஸ் அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது மூளை. அதாவது ஒரு மின் விளக்கை எரிய வைக்கும் அளவுக்கான
மின்சாரத்தை நமது மூளையே தரமுடியும்.

4. எந்த ஒரு விஷயத்தையும் சரியாகப் பார்க்க மூளை உதவுகிறது. நமது கண்கள் நிஜத்தில் ஒரு பொருளைத் தலை கீழாகத்தான் பதிவு செய்கின்றன. ஆனால், மூளைதான் அதைச் சீராக்கி நேராகப் பார்க்க நமக்கு உதவுகிறது.

சுமார் ஒன்றரை கிலோ எடை கொண்ட மூளை, எவ்வளவோ பெரிய மனிதனாக 70 கிலோ 110 கிலோ வரை இருந்தாலும் அவனை ஆட்டிப் படைக்கிறதே! ஒவ்வொரு ஆண்டும் புதுப்புது கண்டுபிடிப்புகள், நோபல் பரிசுகள், புதினங்கள், சாதனங்கள், சாதனைகள் இத்தனையும் செய்வது மனிதர்களாகிய நாம்தான் என்றாலும் கூட, நமக்கு உள்ளேயிருந்து ஆட்டி வைப்பது அந்த மூளைதானே!

இதயம்

எல்லாம் வல்ல அல்லாஹ் நமது உடலில் ‘கல்பு’ என்ற இதயத்தை அமைத்துள்ளான். அந்த இதயம் குறித்து நபி(ஸல்) அவர்கள், ‘நமது உடலில் ஒரு சதைத்துண்டு உள்ளது. அது நன்றாக இருந்தால் உடல் முழுக்க நன்றாக இருக்கும். அது கெட்டுப் போனால் உடல் முழுக்கக் கெட்டுப்போகும். அதுதான் இதயம்!’ என்று கூறியுள்ளார்கள். (ஸஹீஹுல் புகாரி : 52)

நாம் உயிர் வாழ இன்றியமையாத ஒன்று இதயம். இது சாதாரண ஒரு சதைத் துண்டு. அது எப்போதும் களைப்பில்லா மல் இயங்கிக்கொண்டே இருக்கிறது. சொல்லப் போனால் நாம் விழித்திருந்தாலும் தூங்கினாலும் சும்மா இருந்தாலும் வேலை செய்து கொண்டிருந்தாலும் ஓய்வில்லாமல் செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது.

கரு உருவாகி 21ஆம் நாளிலிருந்தே நமது இதயத்தின் பணி ஆரம்பமாகி நமது உடலில் உயிர் உள்ள வரை இயங்கிக் கொண்டே இருக்கிறது. நமது மார்பில் நடுநாயகமாய் அமர்ந்து ஒரு சக்கரவர்த்தி, நாட்டாமை போல், எலும்புகள் புடை சூழ நம்மை ஆளுமை செய்து உயிர் கொடுக்கிறது இதயம்.

விலா எலும்புகள் அடங்கிய மார்புக் கூடுதான் இதயத்துக்கு பாதுகாப்பு அரண். கூம்பு வடிவின் அடிப்பாகம் வலது தோளை நோக்கியும் நுனிப்பாகம் கீழிறங்கி இடது விலாப்பக்கமும் உள்ளது. விலாவின் இடது புறம் நாம் கைகளை வைத்துப் பார்த்தால்,  இதயத்துடிப்பை உணர முடியும்.

நமது இதயத்தின் உருவம் நமது கை முட்டியின் அளவு தான். எடை 350 கிராம். நீளம் 15 செ.மீ. அதாவது நமது உடலின் எடையில் 200இல் ஒரு பங்கு. நமது உடல் முழுவதற்கும் இரத்தம் செல்வதற்காக இரத்தத்தை  வேகமாகக்  குழாய்களில் கொண்டு செல்வதே இதயத்தின் வேலை. ஒரு நாளைக்கு நமது ஐந்தடி உடலுக்குள் சுமாராக எவ்வளவு இரத்தம்  அனுப்புகிறது தெரியுமா? சுமார் 90,000 கிலோ மீட்டர்.

ஒருவேளை அது நின்று விட்டால், செயல்படாவிட்டால், நமது கதி அதோ கதிதான். இந்த இதயத்தின் இயக்கம் அல்லாஹ்வின் மிகப்பெரிய ஓர் ஆற்றல் என்பதை நாம் உணர்ந்திருக்கிறோம். ஆனால் அதற்காக நன்றி செலுத்துவதில் தான் நாம் ரொம்பவே பின்தங்கி இருக்கிறோம்.

சிறுநீரகம்

நமது உடலில், இரத்தத்தில், ஒவ்வொரு நொடியும் நச்சுத்தன்மை அதிகமாக உற்பத்தியாகிக் கொண்டே இருக்கிறது. இந்த நச்சுத் தன்மையை சிறுநீர் வழியாக வெளியேற்றி தூய இரத்தத்தை உடலுக்கு வழங்கும் பணியை நமது சிறுநீரகம் செய்கிறது.

இது போன்று 24 மணி நேரமும் செயல் பட்டு நமது உடலை அது பாதுகாக்கிறது. ஒருவேளை சிறுநீரகம் செயல்படாமல் நின்று விட்டால், எவ்வளவுதான் பணத்தை தண்ணீர் போல செலவழித்தாலும் அதிநவீன கருவிகளைப் பொருத்தினாலும் அது இயற்கைக்கு ஒருபோதும் ஈடாகாது. இவ்வாறான சிறுநீரகத்தை நாம் பெற்றிருப்பது ஒப்பற்ற அந்த அல்லாஹ்வின் ஆற்றலும் அவனது அருளுமாகும்.

அறிவோம்

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தொடர்

மேலும் தேடல்