மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

மேடை

அக்கரைப் பச்சை 16
ஜரினா ஜமால், ஏப்ரல் 1-16, 2025




பழையபடி பிள்ளைகள் பள்ளிக்குப் போக ஆரம்பித்தார்கள். அவர்களுடைய உற்சாகமõன சூழலுக்குத் தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டாள் சாலிஹா. அவர்களின் உணவு, ஆரோக்கியத்தில் அதிகமான அக்கறை எடுத்துக் கொண்டாள். நாள்கள் பிரச்னையில்லாமல் நகர்ந்தது.

இறுதித் தேர்வுக்குச் சில நாள்களே இருந்த நிலையில் நல்ல மதிப்பெண்கள் பெற வேண்டும் என்று அதிகாலை தொழுகைக்குப் பின் தனித்தனியாக அமர வைத்து படிக்க வைத்தாள். காலை ஏழு மணிக்கு மேல் கேட்டை திறந்து தோட்டத்து இளவெயிலில் உட்கார வைத்து படிக்கச் செய்தாள்.

இருமுறை வந்து இதைப் பார்த்த சைதா மேடம், குட் என்ற வார்த்தையை மொழிந்து போனாள். சாலிஹா சைதா மேடத்திடம் கேட்டுக் கேட்டு லீவில் ஊர் போக சம்மதம் வாங்கிவிட்டாள். அதுவே வெற்றி பெற்ற பெருமிதத்தைத் தந்தது.

அறை ஜன்னலருகில் போய் நின்றாள். அந்த ஜன்னலில் முகம் வைத்து வெளியில் தெரியும் காட்சிகளை ரசிப்பதில் சாலிஹாவிற்குச் சலிப்பே தட்டுவதில்லை. நெடுநெடுவென்று வளர்ந்து நின்ற நாவல் மரங்கள் இரண்டும் விளையாட்டுத் திடலின் இருபுறமும் நின்றது அரசைக் காக்கும் வீரர்கள் நிற்பதுபோல் கம்பீரமாக இருந்தது. சரோஜாமாவை அழைத்தாள். தோட்டத்தில் கீரை பறித்துக்கொண்டிருந்த சரோஜாமா ஜன்னல் அருகில் வந்து நின்றாள். ராத்திரிக்கு படுக்குமுன் மரங்களுக்குக் கீழ் பெரிய பெட்ஷீட்டுகள், துணிகள் விரித்து நான்கு புறமும் கல்வைத்து விட வேண்டும்.

‘ஏம்மா? எதுக்கு?’

‘சரோஜாமா! பழங்கள் பழுத்து கனிந்து மண்ணில் விழுந்து வீணாகிறது. பிள்ளைகளுகக்குக் கொடுக்க வசதியா இருக்கும்’ என்றாள்

‘ஓ! சரிமா! பாத்து பாத்து செய்றீங்க! அது வேற ‘ஜலிப்பு’ பிடிக்கப்போவுது. நீங்கள்ளாம் எங்கேயோ இருக்க வேண்டியவங்க!’

சிரித்துக் கொண்டாள் சாலிஹா! பிறந்த, புகுந்த வீட்டிலும் ஒவ்வொரு காரியத்தித்தையும் நுணுக்கமாகச் செய்யும்போது எல்லோர் வாயிலும் வரும் சொல்தான். லேசான தூறல் சடசடவென்று சப்தத்துடன் பூமியை முத்தமிட்டது. முந்தானையால் தலையை மூடிக் கொண்டு பறித்த கீரைகளோடு சரோஜாமா உள்ளே வந்தாள்.

‘சரோஜாம்மா! நீங்க என்ன கருப்பட்டியா? கரைந்தா போயிடுவீங்க? இது மழையில்லை சரோஜாம்மா! நாவல் பழம் பழுக்க தூறல் போடும் என்பார்கள்’

அணில் பிள்ளை ஒன்று ஓடியது. அதனைத் துரத்திக்கொண்டு இன்னொரு அணில் ஓடியது. என்ன ஓர் அழகான ஓட்டப்பந்தயம்..
தானும் பள்ளிக்கூடத்தில் மைதானத்தில் விளையாடியது மனதில் நிழலாடியது. அதையும் மீறி ஒரு ஓட்டம் நினைவிற்கு வந்தது. யாரும் தன்னைக் கவனிக்கிறார்களா என்று திரும்பிப் பார்த்தாள். ஒருவரும் இல்லாத அந்த அறையில் என்ன பயம்.

தன் திருமணத்திற்குப் புடவை எடுக்க திருநெல்÷வலியிலிருந்து  மாப்பிள்ளை வீட்டார்கள் பட்டணம்(மதுரை) வந்திருந்தார்கள். வீடு விருந்தாளிகளால் கலகலத்துக் கொண்டிருந்தது. பெரியவர்கள் பேச்சிலிருந்து மாப்பிள்ளையும்  சென்னையிலிருந்து வந்திருப்பதாகவும், தன் நண்பனின் ஜவுளிக் கடையான வைகை பேரடைசின் மாடியில் தங்கி இருப்பதாகவும், அவர் செலக்ட் பண்ணி தான் பட்டெடுக்க வேண்டும் என்றும் பேசிக்கொண்டார்கள்.

பூவாப்பா சும்மா இருக்காமல் பேரனை வந்து சாப்பிட்டுப் போகச் சொல்லுங்க சம்பந் தியம்மா என்று வற்புறுத்தியதுடன் கடைப் பையனை அனுப்பி கையோடு கூட்டிவரச் சொல்லி விட்டார்கள். வீட்டில் வளர்த்த கோழிக் குழம்பும், நெய்ச் சோறும், தாழிச்சாவும், பொரித்த ஆட்டு ஈரலும் கல்யாண வீடு போல கமகமத்தது. திடீரென்று வந்தாச்சி, வந்தாச்சி என்ற பல மெதுவான குரல்களும், வாங்கத்தா, வாங்க தம்பி என்ற உற்சாகக்குரலும் ஓங்கி ஒலித்தது.

வீட்டின் முன் ரூம்பில் இருந்தவள்  பின்னால் போனாள். இதற்குள் யாரோ பின் வாசல் வழியாக மாப்பிள்ளைப் பையனை வரச்சொல்ல, அவரும் பொண்ணு முன்னால் ரூமில் இருப்பதால் நம்மைப் பின்னால் வரச் சொல்கிறார்கள் போல என்று அப்பாவியாக நுழைய, திரும்பித் திரும்பி பார்த்து ஓட்டமாக ஓடியவள் உள்ளே வந்து கொண் டிருந்த சல்மானின் மீது மோதி நின்றாள்.

அவன் பயந்து சிலுவை போல கைகளை விரித்து நிற்க, சாலிஹா பயத்தில் சல்மானின் சட்டையை இறுகப் பிடிக்க கற்பனை கூட பண்ண முடியாத நிலையில் மீண்டும் நாலுகால் பாய்ச்சலில் உள்ளறை நோக்கி ஓடினாள். டி.வி, சினிமா என்றறியாத காலத்தில், இந்தக் கதையைச் சொல்லிச் சொல்லியே பலநாள் ரீல் ஓட்டினார்கள். சாலிஹா ஓட்டத்தை நினைத்துச் சிரிக்கவும், பின்னால் சரோஜாமா வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

சன்னமாக மழை தூறவும், அது நின்று சுள்ளென்று வெய்யில் காயவும், ஆனந்தமாகச் சிறகை விரித்து மரங்களையும், பூக்களையும் சுற்றி வண்ணத்துப் பூச்சிகள் பட்டமாய் பறந்தது. இந்த வண்ணத்துப் பூச்சிகளுக்கு வர்ணம் பூசிய, படைத்தவன் தான் எத்துனை அழகுணர்ச்சி உள்ளவன்.

மீண்டும்  ஜன்னலுக்கு  வெளியே பார்வையை படரவிட்டபோது, சாலிஹா சத்தம் போட்டாள்.
‘சரோஜாம்மா..!

‘என்னங்கம்மா!’ அரக் கப் பரக்க சமையலறை யிலிருந்து ஓடி வந்தாள் சரோஜா!

‘அங்க பாருங்க! வேலி ஓரத்தில்...!’

‘எங்கண்ணுக்கு ஒன்னுமே தெரியலையேமா?’ குரலைத் தாழ்த்தி கிசுகிசுத்தாள்.

இரண்டு பாம்புகள். நான் இதுவரை இங்கே பாம்பையே பார்த்ததில்லையே!

பிள்ளைகள் வெளியில் விளையாட வரு கிறார்கள். ஸ்கூல் முடிந்தால் கிரவுண்டில் விளையாட ஓடுகிறார்கள். ஏதாவது ஆகிவிட்டால்..!

‘பாம்பா மா? அதுபாட்டுக்கு வந்துட்டு அதுபாட்டுக்கு போயிரும்மா! நம்ம புள்ளய்ங்க வேலிப் பக்கமெல்லாம் போக மாட்டாங்கமா!’

‘எனக்குப் பயமா இருக்கு சரோஜாமா! எங்க ஊர் வயக்காட்டுல பாம்பு கடிச்சு நுரை தள்ளியவங்க, செத்துப் போனவங்க நிறைய தெரியுமா?’

‘நம்ம பக்கம் வராதுமா! நம்ம பில்டிங்கைச் சுத்தி கல்உப்பு கொட்டிவைக்கலாம். நீங்க எடுக்கதுக்கெல்லாம் கவலப்பட்டுட்டு இருக்காதீங்க! மதிய சாப்பாட்டுக்கு பிள்ளைங்க வர்றதுக்குள்ள சமைக்கணும்’ என்று சொல்லிக் கொண்டே சரோஜாமா சமையலறையை நோக்கிச் சென்றாள். இப்படித்தான் மாமனார் வீட்டில், அடுப்படி பெருக்கிக் கொண்டிருந்தாள்
சாலிஹா.  அங்குள்ள  ஒருபொந்தில் சிரட்டை வைத்து அடைத்திருந்தார்கள். அடுப் படியைக் கழுவி விடும்போது சிரட்டையை எடுத்து நன்றாகப் பெருக்கினாள் ஏதோ துணிபோல் தட்டுப்பட்டது. கையை விட்டு வெளியே இழுத்துப்போட்டாள். பொத்தென்று விழுந்தது கட்டுவிரியான் பாம்பு. சாலிஹா போட்ட சத்தத்தில் வீடே ஓடிவந்தது.

‘உன்ன யாரு அங்கன கை வைக்க சொன்னாங்க.  பூச்சி பொட்டு வந்து கெடக்கும். தன்னப் போல போவும்’

பள்ளிப்படிப்புக் காலத்தில் பாம்பாட்டி ஒரு வட்ட ஓலைப்பெட்டியோடும் கழுத்தில் சுற்றிய பாம்போடும் கையில் மகுடியை வைத்து ஊதிக்கொண்டு வருவார். பிள்ளை களோடு பிள்ளைகளாக வேடிக்கை பார்ப்பாள் சாலிஹா. சிலர் சொல்வார்கள் ‘அதுபல்லு பிடுங்கிய பாம்பு. ஒன்னும் செய்யாது. பிச்சை எடுக்க யானையையும், குரங்கையும் கூட்டி வருவதுபோல, பாம்பை எடுத்து வந்து காசு வாங்கிப் போவார்கள்’

சாலிஹா பல ஆண்டுகளுக்குப் பிறகு இன்றுதான் பாம்பைப் பார்க்கிறாள். பிள்ளைகளுக்குச் சொல்லி வைக்க வேண்டும். ஜாக்கிரதையாகப் போகவும் வரவும். தேர்வுகள் முடிந்தது. இப்போதெல்லாம் ப்ரியா மேடத்திடம் பிள்ளைகள் விசயத்தில் எதையும் சொல்லவும் யோசனை கேட்கவும் செய்தாள் சாலிஹா. சந்தர்ப்பவசத்தால் அவசரமாக ஹாஸ்பிடல் போனதால், அவளிடம் சொல்ல மறந்ததை எடுத்துக் கூறி னாள். சாட்சிக்காரன் காலில் விழுவதைவிட சண்டைக்காரன் காலில் விழுவது மேல் என்று நன்றாகப் புரிந்துக்கொண்டாள்.

ஒருநாள்  ப்ரியா  டீச்சர்  சில பொருள்களை ஹோமிலிருந்து ஆசையாகக் கேட்டபோதுதான் புரிந்தது, இதுவரை தன்னை வெறுத்ததன் காரணமும், இணக்கத்திற்குத் தடை எதுவென்றும்! பிறர் (பொதுப்)பொருள்களின் மீதுதான் என்ன ஒரு ஆசை மக்களுக்கு? அதை அவளால் உணரமுடிந்தது. யாரும் எப்படியும் போகட்டும். இன்று நான். நாளை யாரோ? பகைமையில்லாமல், பழியேற்காமல் இருக் கப் பழகுவோம். எதைக்கட்டிக் காப்பாத்தி என்ன ஆகப்போகுது?

பிள்ளைகளுக்கு வரும் பொருள்களில் ப்ரியாவிற்கும் கொஞ்சம் கொடுத்தாள். தோட்டத்து கீரையையும், போட்ட செடி, கொடி காய்கறிகளையும் கொடுக்க ஆரம்பித்தாள். இப்போது ப்ரியாவின் பிரியம் அதிகரித்து, சிறு தொல்லைகளும், அலட்சியங்களும் குறைந்தது. குஜராத், அஹமதாபாத்திலிருந்து பெற்றோர்களோ, பாதுகாவலர்களோ, நெருங்கிய உறவினர்களோ, பிள்ளைகளை இரண்டு மாத விடுமுறைக்காக அழைத்துச்செல்ல ஆரம்பித்தனர். நாற்பது குறைந்து, குறைந்து ஏழு பிள்ளைகளே எஞ்சி இருந்தனர். அழைத்துச் சென்றவர்கள் சாலிஹாவைப் புகழ்ந்தும், உங்களால்தான் எங்கள் பிள்ளைகள் நல்ல பழக்கங்களும், நல்ல குணங்களும் பெற்றுள்ளனர். நன்றாக ஓதவும், படிக்கவும் செய்கிறார்கள் என்றார்கள்.

குல்ஹப்ஸா போகும்போது, கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்ததுடன், நான் திரும்பி வரும்போது நீங்களும் ஊரிலிருந்து வந்துவிட வேண்டும் என கண்டிசன் போட்டாள்.
(தொடரும்)

 


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தொடர்

மேலும் தேடல்