மாதமிருமுறை இதழ்
முக்கியச் செய்திகள்
  • சமரசத்தின் சந்தாதாரராக தொடர்புக்கு - (044-26620091, 9566153142)

இந்த மாத இந்தியா

உச்சி முதல் உள்ளங்கால் வரை 7
கே.ரஹ்மத்துல்லாஹ் மஹ்ளரீ, ஏப்ரல் 16-30, 2025


 

 

கைகளும் விரல்களும்

எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு இரண்டு கைகளை மிகப்பெரிய ஓர் அருளாக வழங்கியுள்ளான். கண் தெரியாமல், காது கேட்காமல், நடக்க முடியாமல் கூட நாம் வாழ்ந்து விடலாம். ஆனால் இரண்டு கைகளும் இல்லாவிட்டால்...? கற்பனை செய்து பார்க்கும்போது அந்தச் சிரமத்தை நம்மாலும் உணர முடியும். நமது கை மிக அருமையான ஒரு குட்டி இயந்திரம். திறமையான, அயராத ஓர் உழைப்பாளி. கரு வளர்ந்த நான்கு மாதங்களிலேயே நமது கைகள் முழு உருவத்தைப் பெற்று விடுகின்றன. குச்சி போல சாதாரணமாகக் காட்சிதரும் நமது கைகளால் 4 அல்லது 5 கிலோ எடைகளைச் சுலபமாகத் தூக்க முடியும் என்றால் அவற்றின் வலிமையை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

மணிக்கட்டில் 8 எலும்புகளும், உள்ளங்கையில் 5 எலும்புகளும், விரல்களில் 14 எலும்புகளும் ஆக மொத்தம் 27 எலும்புகள் நமது ஒரு கையில் உள்ளன. இரண்டு கைகளையும் சேர்த்தால் 54 எலும்புகள். அதாவது நமது உடலில் உள்ள மொத்த எலும்புகளில் 1/4 பகுதி நமது கை எலும்புகள் தான். உணவு உண்பது, உணவு ஊட்டுவது, எழுதுவது, படம் வரைவது மட்டும் நமது கைகளின் பணிகள் அல்ல. கண் பார்வை இழந்தவர்களுக்குக் கையே கண்களாகப் பயன்படுகிறது. காது கேளாதவர்களுக்குக் கை சைகைகள் மூலம் செய்தி தெரிவிக்கப்படுகிறது. இப்படி பல்வேறு பணிகள் நமது கைகள் மூலம் செய்யப்படுகிறது. சொல்லப் போனால், தூங்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் அதிகம் வேலை செய்வது நமது கைகள் தான். நமது வாழ்நாளில் குறைந்த பட்சம் இரண்டு கோடி தடவையாவது விரல்களை நீட்டி மடக்குகிறோம். இப்படிப்பட்ட அந்த அதி அற்புதமான கைகளை வழங்கிய அல்லாஹ்வுக்கு நாம் முழுமையாக நன்றி செலுத்தியுள்ளோமா?

கட்டை விரல் என்ற பெருவிரல்

ஏக இறைவனாகிய அல்லாஹ் நமது கைகளில் பத்து விரல்களை அமைத்துள்ளான். விரல்கள் பத்தும் நமது மூலதனம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அந்தக் கைவிரல்களில் கட்டைவிரல் அதாவது இந்தப் பெருவிரலை வலுவானதாக மிக முக்கியமானதாக இறைவன் ஆக்கி உள்ளான். கட்டை விரல் இல்லை என்றால் எழுதவோ, சாப்பிடவோ, சைக்கிள் ஓட்டவோ, செல்லமாகத் தம்பி தங்கைகளைக் கிள்ளவோ முடியாது. ஏன் எதுவுமே செய்ய முடியாது. நமது கைகளின் 45 விழுக்காட்டு வேலைகள் கட்டை விரலாலே ஒழுங்குபடுத்தப்படுகிறது. இந்தக் கட்டை விரல் அந்த ஏக இறைவனின் மிகப் பெரிய அருளாகும்.

கைகளும் கைரேகையும்

எல்லாம்  வல்ல அல்லாஹ்  கைகளை வழங்கி,  அவற்றில் விரல்களையும் பொருத் தியதோடு மட்டுமில் லாமல், நமது ஒவ்வொருவரின் கைரேகைகளையும் வெவ்வேறாக அமைத்துள்ளான். லட்சக்கணக்கான, ஏன் கோடிக்கணக்கானோரின் கை ரேகைகளை நாம் ஒன்று திரட்டினாலும் அவை ஒன்றுக்கொன்று பொருந்தாமல் வேறுபட்டிருப்பது மிகப்பெரிய வியப்பான செய்தி.

காவல்துறையினர்  குற்றவாளிகளைப் பிடிப்பது கைரேகைகள் மூலம்தான். அதனால்தான் அலுவலகங்கள் அனைத்திலும் பெரும்பாலும் கையெழுத்துப் போடும் போது, கூடவே கைரேகையும் வாங்குகிறார்கள். ஒருவரது கைரேகை போல இன்னொருவரது கைரேகை இருப்பதில்லை என்பதே அதற்கான முக்கிய காரணம். நமது உருவ அமைப்பைப் போலவே நமது கைரேகைகளையும் வித்தியாசமாக அமைத்திருப்பது அந்த ஏக இறைவனின்  மிகப்பெரிய  ஆற்றலின்றி வேறென்ன?


அறிவோம்


உங்கள் கருத்தை இங்கே பகிரவும்

கருத்துகளின் தொகுப்பு

இதர தொடர்

மேலும் தேடல்