பென்சிலைக் கொண்டு எழுதலாம். பென்சிலில் எழுத முடியுமா? முடியும் என நிரூபித்து தம் கலைச் சாதனையை நிகழ்த்தியுள்ளார் புதுச்சேரி மாணவி சுல்பிஹா பேகம். திருக்குர்ஆன் 30 அத்தியாயங்களைக் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயத்திற்கும் ஒரு பெயர் உண்டு. அந்த 30 பெயர்களையும் அரபி மொழியில் பென்சிலின் முனையில் செதுக்கியிருக்கிறார் சுல்பிஹா. இந்தச் சாதனையைப் பாராட்டி இந்தியா புக் ஆஃப் ரெகார்ட் என்கின்ற அமைப்பு சாதனையாளர் விருதை வழங்கி இருக்கிறது.
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் MSC பயின்றுள்ள சுல்பிஹா இந்தச் சாதனையைச் செய்ய இரண்டு மாதங்களை எடுத்துக் கொண்டார். ஒரு பெயரைச் செதுக்குவதற்காக அவருக்கு ஐந்து மணி நேரம் தேவைப்படுவதாகக் கூறினார். தந்தை முஹம்மத் ஆஷிக் பாத்திர வியாபாரம் செய்கிறார். தாயார் பர்வீன் பேகம். சகோதரி ருபீனா பேகத்திடமிருந்து தான் இந்தக் கலையை சுல்பிஹா கற்றுக் கொண்டார். சுல்பிஹாவின் சகோதரி ருபீனா அல்லாஹ்வின் திருநாமங்களாகிய 99 பெயர்களை பென்சிலில் செதுக்கி உலக சாதனை படைத்துள்ளார். அவரிடமிருந்து இரண்டு ஆண்டுகளில் சுல்பிஹா இக்கலையைக் கற்று இப்போது சாதனை படைத்துள்ளார். இந்திய மாணவியர் இஸ்லாமிய அமைப்பு (GIO) உறுப்பினரான சுல்பிஹா அம்லோர்பவம் மெட்ரிகுலேஷன் பள்ளியில் வரைகலையைச் சிறப்பு வகுப்பாகக் கற்றுத் தருகிறார்.
பென்சிலில் பெயர் எழுதித் தருவதைப் பகுதி நேரத் தொழிலாகச் செய்து வருமானம் ஈட்டிவரும் சுல்பிஹா இந்த வரைகலையை எல்லாருக்கும் கற்றுத் தருவதிலும் ஆர்வமாக இருக்கின்றார். சாதனை படைத்த சகோதரிகள் ருபீனா, சுல்பிஹாவுக்கு நம் வாழ்த்துகள்.!